thamizh-hindi01

 

‘‘பாதிக்குமேலானவர்கள் பேசுவதால் இந்தியைத் தேசிய மொழியாக்குவதில் நியாயமிருக்கிறது’’

-‘‘மொரார்சி’’ 28-3-64, காஞ்சிபுரம்.

இந்தி, தனிமொழியா? பழமை மொழியா? சொல்வளம், பொருள் வளமுண்டா? எழுத்து வனப்புண்டா? இலக்கிய விலக்கணங்களுண்டா? அறிவியல் நூல்களுண்டா? இந்தி படித்து ஒரு விஞ்ஞானியாகலாமா? ஒரு மருத்துவனாகலாமா? ஒரு பொறியியலனாகலாமா? ஒரு வழக்கறிஞனாகத்தானாக முடியுமா? அல்லது இந்தியைக் கொண்டு பிறநாட்டானோடு கலந்து பேசவியலுமா? என்ற கேள்விகட்கெல்லாம் விடைகள் இல்லையென்பது ஒப்பமுடிந்ததாய்விட்டது. இறுதிக்காரணம்? பெரும்பான்மையினர் பேசப்படுவதென்பதைத் திட்டமிட்டுத் ‘‘திடீர்ப்புளுகு’’கள் மூலம் உயர்த்திக்கொண்டே வருகிறார்கள்.

பொய்மையெனத் தயங்காது அதனையே மேன்மேலும் உறுதியுடன் பேசிவந்தால் இறுதியில் அது மெய்யாகவே நிலைத்துவிடும்’’ இது இட்லர்க்குக் கிடைத்த ‘கெபள்சு’ என்ற அமைச்சரின் முடிவு.

‘‘யாதொரு பொருளை எப்பேர்க்குற்றவரிடமிருந்து கேட்பினுஞ்சரி, அதனை அப்படியே நம்பாது அதனுண்மையாதென ஆராய்ந்து கோடலே அறிவின் இலக்கணம்’’ என்பது குறள்நெறியின் முடிவு. இம்முடிவுப்படி இந்தியின் பெரும்பான்மைக் கணக்கு உண்மைதானா என்பது காணலாம்.

‘‘இந்தி பேசுவோர் தொகை 100க்கு 42 விழுக்காடென்றே பல ஆண்டுகளாகவும் இன்றும் இந்தி ஆதரவாளர்களும் அமைச்சர்களும் புள்ளி விவரம் போட்டுப் பேசிவரும்போது ‘‘பாதிக்குமேலானவர்கள் பேசுவதால்’’ எனக் குறிப்பிட்ட மொரார்சியின் பேச்சு திடீர்ப் புளுகுகளில் ஒன்றென்பது வெளிப்படை.

இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்ப்பவர்கூட 100க்கு 42க்கு என்ற கணக்கை ஒத்துக் கொண்டு 42 பேர் பேசுகிற மொழியை 58பேர் மீது திணிப்பது என்ன நியாயம்? என வாதாடுகின்றனரன்றி, கணக்கு உண்மையா? எனக் காண்பதில்லை. இதனாற்றன் கௌபள்சின் முடிவும் உறுதிப்பட நேர்கிறது.

‘‘பெரும்பாலோரால் பேசப்படும் மொழி இந்தி என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. கணக்கு எடுத்துப் பார்க்கும்போது, இந்தி மொழியைப் பேசுகிறவர்கள் நம் நாட்டில் 13 கோடி பேர்கள், பாக்கி இருக்கும் 23 கோடி மக்களும் வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.’’

– திரு. சி. சுப்பிரமணியம்.

ஆனந்தவிகடன், தீபாவளி மலர் 1955.

அக்கணக்கின் படி பார்க்கும் போது 100க்கு 42 விழுக்காடு என்பதும் உண்மையல்ல. இனிப் பதின்மூன்று கோடி மக்கள் பேசுவதென்பதும் உண்மையா? என்பது காணலாம். வடநாட்டில் இந்தியல்லாத முதன்மையான மாநில மொழிகளின் கணக்குகள் பின்வருமாறு.

உருது      220 இலட்சம்

மராத்தி    270 இலட்சம்

வங்காளி  250 இலட்சம்

குசராத்தி  160 இலட்சம்

ஒரியா     130 இலட்சம்

பஞ்சாபி   120 இலட்சம்

இராசசு கான்   107 இலட்சம்

அசாமி     50 இலட்சம்

காசுமீரி    20 இலட்சம்

—–
1327 இலட்சம்
—–

 

இந்திய (சென்சசு-1951) கணக்குப்படி இந்தியாவில் பேசப்படுகின்றமொழிகள் மொத்தம் – 782.

1. இவற்றில் ஒரு கோடி மக்கட்குமேல் பேசப்படும் மொழிகள் -12

2. ஒரு இலட்சத்திலிருந்து ஒரு கோடி மக்கள் வரை பேசும் மொழிகள் – 48

3. ஒரு இலட்சத்துக்குக் குறைவாகப் பேசுபவர்களை கொண்ட மொழிகள் – 722

திரு. சி.சு. அவர்களின் கணக்குப்படி ‘‘மொத்தம் 2530 இலட்சம் மக்கள் (வட இந்தியாவில்) ஆரியமொழி பேசுபவர்கள்’’ என்றால், முதன்மையான மாநிலமொழிகள் பேசுவோரே 1327 இலட்சமென்றால், 13 கோடி பேர் இந்தி பேசுவோர் என்ற அவர் கணக்கும் உண்மையன்று. மேலும் 782 மொழிகளில் தென்னாட்டிற்குரிய மொழிகள் 17 தான். மீந்த 765 மொழிகட்கு வடநாட்டில் வரும் ஈவுதானெங்கே?

1951 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை (சென்சசு) கணக்குகளை கையில் வைத்துக் கொண்டு தாய் மொழியாகப் பேசப்படும் ஒவ்வொரு இனக்கணக்கையும் தெளிவாகச் சொல்லிவிடலாம்.

தமிழ் பேசுவோர் தொலை 2,65,46,764

கன்னடம் பேசுவோர் தொகை 1,44,71,764

மலையாளம் பேசுவோர் தொகை 1,33,80,109

தெலுங்கு பேசுவோர் தொகை 3,29,99,916

இன்னும் எழுத்தே இல்லாத மொழிகட்குக் கூடத் தனித்தனிக் கணக்குகள் உண்டு. தோடர்மொழி -நீலகிரிப் பகுதியில் 879 பேர் என்று குறிப்பிடுகிறது. குறவர் மொழி 45,817. இவ்வாறு துளு, கொங்கணி, சௌராட்டிரா, படகா, கோண்டு முதலிய தென்னாட்டுப் பதினேழு மொழிகட்டுகும் கணக்குகளுண்டு.

இவவ்வாறு காட்டுவாசிகள், நாடோடிகள், மலைவாசிகள் முதலியோருக்கும் தனிப்பட்ட கணக்குகள், பேசுபவர்களின் எண்ணிக்கைகள் இருக்கின்றன! ஆனால், இந்தியாவின் ஆளும் மொழியாகத் தயார்ப்படுத்தும் இந்திக்கு அத்தகு கணக்கு கிடையாது!

‘‘இந்தியாவில் இந்தி பேசுபவர்கள் தொகை எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. இந்தி ஆதரவாளர்கட்கும் தெரியாது. இந்திய அரசாங்கத்துக்கும் தெரியாது.  கணக்கு (சென்சசு) எடுத்த அலுவலர்கட்கும் தெரியாது. இந்நிலையிற்றான், ‘‘15கோடி, 13 கோடி, 100க்கு 42 விழுக்காடு என்றெல்லாம் அரங்கின்றி வட்டாடிவருகிறார்கள். இச்சோகச் செய்தியை கணக்கு (சென்சசு) அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது’’.

-1951 ‘சென்சசுஅறிக்கை மொழிகள் பக்கம்2

இக்குழப்ப நிலைக்குக் காரணம் என்ன? 1951 கணக்குகள் எடுக்கப்பட்ட நேரத்தில் வட இந்தியாவில் தாய்மொழிபற்றிய சிக்கல்கள் எழுந்தன; இந்தி ஆதரவாளர்கள் இந்தியையே தாய்மொழியாகக் கூறும்படி ஏனைய மொழியினரிடம் பரப்புரை செய்தனர். இதற்கு ஆதரவும் கிடைத்தது. எதிர்ப்பும் உருவாகியது. அப்பொழுது பஞ்சாப், பெப்சு, தில்லி, இமயமலைப்பகுதி, பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்தும், மற்றும் பல பகுதிகளிலிருந்தும் மொழிக்குழப்பங்களே ஏற்பட்டுத் தவறானபடி கணக்குகள் பொதுமக்களாலும் தரப்பட்டன. அதனால் கடைசியில் உண்மையில் இந்தி பேசுபவர்கள் எவ்வளவு என்பது தெரியாமல் போய்விட்டது.

ஆட்சிமொழியாகும் இந்திக்கு ஆள்பிடிக்கும் அலங்கோலம்

பஞ்சாப் மாநிலத்தில் 1951 இல் கணக்கு (சென்சசு) எடுக்கும்பொழுது ‘‘எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொடுப்பது’’ எனப் பெருங் குழப்பங்கள் ஏற்பட்டன. சீக்கியர்கள் ‘‘குர்முகி’’ எழுத்தைக் கொண்ட பஞ்சாப்பிய மொழியைப் பேசுகிறார்கள். ஏனையோர் பெரும்பாலும் உருது பேசுகிறார்கள். இந்நிலையில், இந்திமொழி காப்பாற்றப்பட வேண்டும். ‘‘இந்தி ஆட்சி மொழியாக வருகிறது’’. எல்லா மக்களும் இந்தியையே தாய்மொழியென்றுகணக்குக் கொடுக்க வேண்டும்’’ எனக் கொட்டையெழுத்துக்களில் வெளியிட்ட துண்டு அறிக்கைகள், பொதுக்கூட்டங்கள் பரப்புரைகள் மும்முரமாய் இந்துக்களால் நடத்தப்பட்டன. ஆனால் அறிக்கைகள் உருது மொழிகளில்தாம் வெளியிடப்பட்டன ஏன்? இந்தி மொழி அங்கு யாருக்கும் தெரியாது. எனினும் சீக்கியர்களின் எதிர்ப்பு வலுத்ததால் கலகம் மூண்டது. இதன் பயனாய் ‘‘சாகாத்திரி’’ என்ற இடத்தில் நடந்த அடிதடியில் ஒருவர் கொலை, மூவர் படுகாயம், ஒன்பதுபேரை கைதாக்கினார் என்று செய்தித் தாள்களில் வெளிவந்தது யாவரும் அறிந்த ஒன்று. எனினும் பஞ்சாபி, உருது ஆகியமொழிகளைக் கூட இந்தியுடன் சேர்த்துக்கணக்கு எடுத்து விட்டார்கள்.

‘‘இராசசுதானை எடுத்துக்கொண்டால் (1951 சென்சசு) கணக்கு எடுத்தபொழுது மூன்று முதன்மை மொழிப் பிரிவுகள் அங்கு இருந்தன. 1) இராசசுதானி 2) மேற்கிந்தி 3) பிலி. இவற்றுள் ‘இராசசுதானி’, ‘செய்புரி’, ‘மார்வாரி’, ‘மேவாரி’ இன்னும் சில மொழிகள் இருந்தன.

மேற்கு இந்திப் பிரிவில், இந்தி, உருது, பிரசுபாவா பந்தல், கந்தி, தாங்கி ஆகிய மொழிகள் சேர்ந்திருந்தன.

பிலி மொழி நாடோடிக் கூட்டத்தினராலும், பழங்குடி மக்களாலும் பேசப்பட்டுவந்தன.

‘இராசசுதானி’ மொழி பேசுபவர் 1 கோடியே 7 இலட்சம்பேர்கள், ஏனைய மொழிகள் இந்தி எண் 1 தலைப்புக்குள், தள்ளப்பட்டுவிடுகின்றன.

இனி மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார் ஆகிய மூன்று மாநிலங்களையும் முழுக்க முழுக்க இந்தி மாநிலங்களாகவே காட்டிவிட்டனர். இவற்றையும் ஒவ்வொன்றாக ஆய்வோம்.

இந்திப் போர்வையில் 81 மொழிகள்

மத்தியப்பிரதேசத்தில், ‘‘இந்தி பேசுபவர்கள்’’ என்று கீழ்க்கண்ட 81 மொழிகளைப் பேசுகிற மக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கணக்கு (சென்சசு) அறிக்கை கூறுகிறது.

1. இந்தி

2. உருது 3. இந்துசுதானி 4. பீகாரி
5. மைதிலி 6. இராசசுதானி 7. பிரசுபாசா 8. பக்ரி
9. மேவாரி 10. செய்புரி 11. மால்வி 12. சாட்டிசுகாரி
13. மார்வாரி 14. ஆசுமீரி 15. பந்தேலி 16. பலாகி
17. லோடி 18. கிராரி 19. ராகோபான்சி 20. தம்தி
21. சடி 22. பர்தேசி 23. கலாரி 24. பாடு
25. பங்கி 26. கோசாவி 27. ஓகி 28. சுவதி
29. நுனியா 30. பைகனி 31. பாண்டோ 32. அதுகுரி
33. பசுதாரி 34. மிர்கனி 35. மகேசுரி 36. போயாரி
37. குர்சார் 38. இராசுகாடி 39. நிமாதி 40. கால்பீ
41. மராரி 42. போவாரி 43. சடாரி 44. பான்சாரி
45. இராசபுதானி 46. கோர்க்காலி 47. மாதுரி 48. குருமாலி
49. மிர்சாபுரி 50. கோசங்கா & பாடி 51. அபு 52. பர்பி
53. முசல்மானி 54. லோதாந்தி 55. போபாலி 56. கோட்வாரி
57. பூலியா 58. சங்கலி 59. இரங்கடி 60. அகரி
61. புவானி 62. வாணி 63. கந்தால் 64. இரிவை
65. பரத்பூரி 66. கோத்யானி 67. பிரதாப்காடி 68. கங்கேரி
69. கங்காபாடி 70. ஆக்ராவாலி 70. மேர்வாரி 72. தேவநாதரி
73. உத்தாரி 74. பாமி 75. உத்கேதி – போலி 76 பூலி
77. கோரக்பூர் 78. சார்மாலி 79. பான்சாரி 80. கோர்த்தி
81. போசுபுரி      

 

(1951 கணக்கு (சென்சசு) அறிக்கை ‘மொழிகள்’ பக்கம் 72)

ஒன்று இரண்டல்ல 81 மொழிகளைச் சேர்த்து ‘இந்தி’ என்ற பெயருக்கு அதிகமான ஆள் சேர்த்துக் கொண்டார்கள்.

இந்த 81 மொழிகளும் சிறு சிறு மொழிகள் என்று எண்ணிவிட முடியாது. இலட்சக்கணக்கில் மக்கள் பேசக்கூடிய மொழிகள் பலவுண்டு. மார்வாரி என்ற மொழி இராசசுதானில் பேசப்படுவது. அது இங்கு 45 இலட்சங்களுக்குமேல் பேசப்படும் மொழியாக உள்ளது. இது இந்திப் போர்வைக்குள் மறைகிறது. இதேபோன்று மேவாரி 20 இலட்சம். செய்புரி 14 இலட்சம். பக்ரி 9 இலட்சம். சட்டிசுகாரி 9 இலட்சம். மால்வி 3 இலட்சம். கால்பி 3 இலட்சம். இங்ஙனம் பெரியதும் சிறியதுமாக யாவற்றுக்கும் மதமாற்றம் செய்வதுபோல் மொழிமாற்றமல்ல மொழி மாறாட்டம் செய்துவிட்டனர். மொழிமாற்றம் என்றால் மொழி சொல்லிக் கொடுத்ததல்ல. அவர்கட்கு இன்றும் இந்தி தெரியாது  பெயரளவில் மாறுதலைச் செய்யும் வேலை வட இந்தியாவில் நடைபெற்றிருக்கிறது.

புள்ளி விவரங்களுக்குச் சான்றுகள்:

மத்தியபாரத்

மொழி     1941           1951

இந்தி           14,40,906   58,42,114

மால்வி    16,78,087   5,23,374

நிமாரி           2,78,138     180,696

போபால்

மொழி     1931            1941                      1951

இந்தி      6,464           67,988                  6,52,722

உருது           6,91,065     6,99,523     1,31,600

இங்ஙனம் வியக்கத்தக்க மாறுதல்கள் பற்றி, ‘‘கணக்கு (சென்சசு)’’ அலுவலர் குறிப்பிடும் பொழுது ‘‘கணக்கு (சென்சசு) புள்ளி விவரங்களின் மொழிப் பகுதியைப் பார்த்தால் திடீரென அதிகமான பேர்கள் இந்தியைத் தங்கள் தாய்மொழியாகக் கொடுத்திருப்பது தெரியவரும். இதற்குக் காரணம் என்னவென்றால் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுதான் ஆகும். தங்கள் தாய்மொழி இந்துசுதானி என்றோ இராசுதானி நிமா. மால்வி என்றோ வற்புறுத்தி யாரும் முன்வரவில்லை’’.

(1951) ‘‘கணக்கு (சென்சசு’’ அறிக்கை பக்கம் 74.

தாய்மொழி என்பது மாற்றமுடியாத ஒன்று. இந்தி ஆதரவாளர்களால் தாய்மொழியைக் கூட மாற்றிவிட முடிகிறது. ஏனைய மொழிகளைத் தாய்மொழியாகவும், இந்தி மொழியோ, எழுத்தோ தெரியாதவர்கட்கும் கூட இந்தியைப் பெயரளவில் தாய்மொழியாக்கிவிட்டார்கள்.

பீகார் இந்தி மாநிலம் அல்ல!

இனிப் பீகார் மாநிலத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனைய மாநிலங்கட்கெல்லாம், மாநில மொழிகளை, அம்மா மாநிலங்களின் பெயரால் இருப்பதுபோல் பீகார் மாநிலத்துக்கும் ‘‘பீகாரி’’ என இருந்தது. ஆனால் இன்று மறைகிறது. அல்ல, மறைக்கப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் பேசப்படும் பெரும்பான்மை மொழி பீகாரி என்று மொழியமைப்பேயாகும். அம்மொழி மூன்று பிரிவுகளாக இருக்கிறது. 1. மகதி, 2. மைதிலி, 3. போசுபுரி இம்மூன்று மொழிகளும் – சிறு சிறு வேறுபாடுகளைத் தவிர இலக்கணத்தாலும், சொற்களாலும் நெருங்கிய தொடர்புடையன. இவற்றை ‘மகதபிராகிருதம்’ என்று மொழியாளர்கள் கூறுவார்கள். பிராகிருதம் என்றால் சிதைவு என்று பொருள் மகதம் என்பது பீகார் பகுதிக்குப் பழைய காலத்திலிருந்த பெயர். இதிற்றான் பாடலிபுரத்தைத் தலைநகராகக் கொண்ட நந்த பரம் பரையினரும், மௌரிய அரசர்களும் ஆண்டனர். மௌரிய ஆட்சியில் ‘சந்திரகுப்தர்,’ பிம்சாரர், அசோகர் ஆகியோரின் பொற்காலத்தில் மகதநாடும், மகதமொழியும் உயர்நிலையிலிருந்தன. புத்தமத கோட்பாடுகள் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வந்தது மகத மொழியேயாகும். இதோடு மைதிலி, போசுபுரி ஆக மூன்றுமொழிகள் இன்னுமிருக்கின்றன. இம்மொழியமைப்பில் பீகாரில் வழக்காற்றிலுள்ள மொழிகட்கும் இந்திக்கும் தொடர்பு கிடையாது.

மகதி, மைதிலி, போச்புரி ஆகிய மூன்று பீகார் மொழிகளுடன் பெங்காலி, அசாமி, ஒரியா என்ற மூன்றையும் சேர்த்து ஆறு மொழிகளையும் ஒரு தனிக் குழுவாக மகதபிராகிருதக் குழுவாக எண்ணப்படுகின்றன. எந்த அளவுக்கு ஒருமைப்பாடு இருக்கிறதென்றால், ‘‘திராவிடக்குழு மொழிகள் தனி அமைப்பாக இருக்கின்றனவல்லவா அதுபோன்று இந்த ஆறு மொழிகட்கும் ஒரே இலக்கணம் அமைக்கலாம்’’ என்கிறார் மொழி ஆராய்ச்சியாளர் அறிஞர்(டாக்டர்) கிரையசன்.

1961 (சென்சசு) கணக்குகளை எடுத்து வெளியிட்ட அதிகாரியே ‘‘பீகாரி மொழிகளிடமிருந்து அடிப்படை அமைப்புகளிலேயே இந்தி அதிகமான அளவு வேறுபட்டிருக்கிறது’’ என்று தவிர்க்க முடியாதபடி உண்மையைத் தருகிறார்.

பீகாரில் இந்தி நுழைந்த கதை வேடிக்கையானது. இரண்டு மூன்று கணக்கு(சென்சசு)க்கு முன்பு இந்தி மொழியினர் தங்களையும் பீகாரி மொழி பேசுபவர்களுடன் சேர்த்துச் சொல்லிக் கொண்டார்கள். அதனால் பீகாரிகளும் பெருமையோடு இதை ஏற்றுக் கொண்டார்கள். (சென்சசுக்) கணக்கில் ‘‘பீகாரியும் இந்தியும்’’ என்று போட்டுக் கொண்டார்கள். வரவர இந்திக்குத் தே சிய மொழி எனப் பட்டம் தரப்பட்டது கண்டு ‘‘இந்தியும் பீகாரியும்’’ என மாற்றினார்கள். கடைசியில் இரண்டும் சேர்ந்து இந்தி என்ற தலைப்பு வந்து விட்டது அல்லது வருவித்துக் கொண்டார்கள்.

1951 (சென்சசு) கணக்குப்படி பீகார் மாநிலத்தில் மக்கள் தொகை 4 கோடியே 2 இலட்சம் பேர்கள் இதில் 3 கோடியே 20 இலட்சம் பேர்கள், அதாவது 100க்கு 80க்கு மேற்பட்டவர்கள் இந்தியே பேசுபவர்களாகக் கணக்கு காட்டுகிறது. இந்த இந்தி பேசுபவர்களாகவுள்ள கணக்கு, தவறானது என்பதை கணக்கு (சென்சசு)  அதிகாரிகளே கூறிவிடுகின்றனர்.

‘‘(பீகார் மாநிலத்தில்) 3 கோடியே 19 இலட்சம் பேர்கள் இந்தியைத் தாய் மொழியாகப் பேசுபவர்களாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளார்கள்; உண்மையில் பீகாரில் உள்ள மக்களில் வெகு சிலரே இந்தி மொழியைப் பேசுபவர்களாக இருப்பார்கள்.’’

1951 கணக்கு (சென்சசு) – மொழிகள் பக்கம் 37.

பீகார் மாநிலத்து இந்தி பேசுவோர் கணக்கில் பீகாரி மொழிகள் மட்டும் அல்லாமல் உருது, தமாரியா, குர்மாலி, சோட்டா, நாகபுரி, கவாரி, கார்வாரி, கார்வானி, பிலாசுபுரி, சத்ரி ஆகிய பல மொழி பேசுவோரையும் இந்தியத் தலைப்புக்குள் அடக்கிவிட்டனர். இதைவிடப் பெரியதொரு புள்ளிவிவரப் புரட்டு யாண்டும் இருக்க முடியாது.

இனிக் கடைசியாக உத்திரப் பிரதேசத்தை எடுத்துக் கொள்வோம். அம்மாநிலம், இந்தி வெறியும், ஆதிக்க வெறியும் ஒருங்கே கிளம்பும் இடமாகவும், தேசியத் தலைவர்கள், ஆளும்கட்சித் தலைவர்கள், ஆட்சி அலுவலர்கள் முதல் அனைவரும் ஒருங்கே சேர்ந்து இந்தி ஆளும்மொழியாவதற்கு வழிகோலும் இடமாகவும், மொழிப்போர் முனைசென்று வெற்றி கண்டுவரும் வீரர்கள் தங்கும் பாசறையாகவும் உள்ளதெனில் மிகையன்று.

இம்மாநிலத்தில் இந்தி பேசும் மக்கள் கணக்கையும் பார்க்க வேண்டுமா? ஒரே ஒரு சான்று காட்டினால் உண்மை விளங்கிவிடும். அதாவது 1931 இல் எடுத்த சென்சசுக் கணக்கு இம்மாநிலத்திற்குரிய மொழியான ‘‘இந்துசுதானி’’ பேசுபவர்கள் நூற்றுக்கு 99 பேர் எனக் காட்டுகிறது. 1951 சென்சசுக் கணக்கோ 100க்கு 99 பேர் இந்தியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள் எனக் கணக்குக் காட்டுகிறது. இதுபோதும் மொழி மாற்ற வேலைக்குச் சான்று. பலபடத் துருவிப் பார்ப்பது வீண் வேலையாகும்.

1931 இல் எங்கோ பல பட்டரை மொழிகளில் ஒன்றாக மூலையிற் கிடந்த இந்தியை 1941 இல் முற்றத்துக் கிழுத்துவந்து ‘‘இந்தி அன்னை’’ எனப் பெயர் சூட்டினார்கள். 1951 இல் இந்தி அன்னையை, அரியணை ஏற்றி ‘‘நாடாளும் அரசி’’ என முடிசூடிவிட்டார்கள். ஆம். அறிவுள்ள பிள்ளைகளைப் பெற்ற இந்தி அன்னை, அரசு கட்டிலேறினாள். அபத்தப் பிள்ளைகளைப் பெற்ற ஏனைய அன்னைமார்கள், இந்தி அரசிக்குப் பணிப் பெண்களாயினர். பலபல பன்னிப் பேசினும் இதுதானே உண்மைப் பொருள்.

வட இந்தியாவில், முதன்மையான பெரிய மாநிலமொழிகளான, பீகாரி, இந்துசுத்தானி இரண்டும் பேரில்லாமலே மறைந்துவிட்டன. ஏனைய பெரு மொழிகளிலும் கைவைத்துள்ளனர். இவையன்றி 250க்கு மேற்பட்ட சிறு மொழிகள் போன பக்கம் தெரியவில்லை. இந்திப் போர்வைக்குள் ஒழிந்திருக்கின்றன.

இப்பித்தலாட்டங்களால் ஏற்பட்ட மாற்றங்கள், கூட்டங்கள், மறைப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு உண்மையில் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் தொகைமட்டும் கணக்கிடப்பட்டால், ஏறத்தாழ ஒரு 5 கோடி மக்களும் 100க்கு 15 விழுக்காடும் தான் தேருமென்பது நிச்சயிக்கலாம்.

இங்ஙனம் ‘‘செய்யதக்கவல்ல’’ செய்வதை விட இன்றைய நிலைமையில் ஆளும் உரிமை எங்களிடம் இருக்கிறது. எவ்விதத் தகுதியோ பெரும்பான்மைக் கணக்கோ இல்லாவிடினும் எங்கள் மொழிதான் ஆட்சி மொழியாக வரவேண்டும்’’ எனச் சொல்லியிருந்தால் வாய்மையாகவும் இருக்கும்.

செய்தக்கவல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங்கெடும் – தமிழ்மறை.

–      குறள்நெறி:  வைகாசி 02, 1995 / 15.05.1964 பக்கம் 3-5