நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: தொடர்ச்சி)
நாலடி நல்கும் நன்னெறி 25
சமயங்கள் வெவ்வேறு: ஆயினும் அவை உணர்த்தும் நெறி ஒன்றே!
ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.
நாலடியார் பாடல் 118
கருத்து:
பசுக்கள் வெவ்வேறு வண்ணங்களை உடையனவாக இருந்தாலும் அவை தரும் பாலின் நிறம் வெண்மைதான். அதுபோல், சமயங்கள் வெவ்வேறு வகையில் இருந்தாலும் அவை அறிவுறுத்தும் அறநெறி ஒன்றே!
பதவுரை:
ஆ = பசுக்கள்; வேறு உருவின = நிறத்தாலும் வடிவத்தாலும் வெவ்வேறு உருவங்களைக்; ஆயினும்=கொண்டிருப்பினும்; ஆ பயந்த பால் = பசுக்கள் தரும் பாலும் பால் மூலம் பெறும் தயிர், நெய் முதலிய பாற் பொருள்களும்; வேறு உருவின= வெவ்வேறு வண்ணங்களை; அல்லவாம் = உடையன அல்லவாம்; அறநெறி = அறத்தின் வழி; பால்போல்=பால் போன்று;ஒருதன்மைத் தாகும்= ஒத்ததன்மையுடையனவாகும்; ஆபோல் = பசுக்கள் போல் ; உருவு பலகொளல் ஈங்கு=பல வேடங்களையுடைய சமயங்களும் இங்கு
சமயங்கள் கொள்கையினால், வழி பாட்டு முறைகளினால், சடங்குகளால், நோன்பு முறைகளால், நூல்களால், வெவ்வேறாக உள்ளன. ஆனால் அவை உணர்த்தும் அடிப்படை அறநெறி ஒன்றுதான். இவ்வுண்மையையே பசுக்கள் பல வண்ணமாக இருந்தாலும் அவைதரும் பாலின் நிறம் ஒன்றுதான் எனக் கூறி உணர்த்துகிறார் பாடலாசிரியர்.
இப்பாடல் சமயப்பொறைக்கு வழி காட்டுகிறது. வெவ்வேறு சமயத்தவர் தத்தம் சமயமே உயர்ந்தது என்றோ தங்கள் சமயம் கூறும் படைப்புக் கடவுளை உயர்ந்ததாகவோ கூறக்கூடாது. வழிபாட்டு முறைகளினாலும் நடைமுறைகளாலும் ஒவ்வொரு சமயமும் வெவ்வேறு வகையாகத் தோன்றலாம். சமயக் கடவுள்களின் தோற்றங்களும் வெவ்வேறு நிலையாக இருக்கலாம். ஆனால், அவை உணர்த்தும் அடிப்படை நெறி ஒன்றே. அவ்வாறிருக்கும் பொழுது ஒவ்வொருவரும் தத்தம் சமயமே உயர்ந்தது என்று சொல்லாட, போராட வேண்டிய தேவை என்ன? எனவே, சமயங்களின் அடிப்படை ஒருமை உணர்வைப் புரிந்து கொண்டு சமயப்பொறையுடன் வாழ வேண்டும் என நாலடியார்ப் பாடல் உணர்த்துகிறது எனலாம்.
நாடெங்கும் சமயச்சண்டைகள் தலைவிரித்தாடுகின்றன. அவற்றை நிறுத்துவதற்கு இப்பாடலைப் பொருளுடன் விளக்கி உணர்த்தலாம். சமயப் பொறையே நமக்குத் தேவை. சமயக்கருத்துகளில் உள்ள வேண்டாதனவற்றை விலக்கி உட்கருத்தான அறநெறியை உணர்ந்து போற்றுவோம்!
–
இலக்குவனார் திருவள்ளுவன்






Leave a Reply