இன்றைய நூலாய்விற்குரிய 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் என்னும் நூலின் ஆசிரியர் இலக்குவனார் மொழிப்போர் நூற்கலைஞர் நிவேதிதா உலூயிசு, எழுத்தாளராக மட்டுமல்லாமல், ஆய்வாளர்,பெண்ணிய வரலாற்றாளர், குமுகச்செய்றபாட்டாளர் ஆவார்.எனவே, இவரது நூல்கள் பலவும் அறியப்படாமல் உள்ள அறிய வேண்டிய செய்திகளை அறியச்செய்யும் வகையில் உள்ளன.

முதல் பெண்கள், ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை, சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை, வடசென்னை – வரலாறும் வாழ்வியலும், அறியப்படாத கிறித்தவம் (இரண்டு பகுதிகள்), பெயரற்றவர்களின் குரல் முதலிய நூல்கள் இவரது ஆய்வுப் புலமையை வெளிப்படுத்துவன. அவ்வாறுதான் இந்நூலும் அமைந்துள்ளது. 

இவரின் ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை என்ற நூல்  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு  தமிழ்ப் பேராயம் வழங்கும்  போப்பு மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றுள்ளது.

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இயல் இசை அருங்காட்சியகக் கண்காட்சியை வடிவமைத்துத் தந்தார். இவரின் மரபு நடைகள், ஊர்தி உலாக்கள் சென்னையின் பண்பாட்டையும் வரலாற்றையும் மக்களிடம் அறிமுகப்படுத்த உதவுகின்றன. 2023 ஆம் ஆண்டு கோத்தே பயிலகத்துடன்  இணைந்து வண்ணாரப்பேட்டை மரபு நடையை வடிவமைத்து நடத்தினார். பூந்தமல்லி, இராயபுரம், காசிமேடு முதலிய பகுதிகளில் மரபு நடை நடத்தியுள்ளார்.

இலாட்லி தேசிய விருது (2024), இலாட்லி வட்டார விருது (2021), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வழங்கும் தோழர் கே.முத்தையா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, இலக்குவனார் மொழிப்போர் நூற்கலைஞர் விருது ஆகிய  விருதுகள் இவரின் படைப்பாற்றலுக்குச் சான்று பகர்கின்றன.

தமிழ்நாட்டு மொழிப்போர் வரலாறுகள் இன்றைய தலைமுறையினர் ஓரளவுகூட அறியப்படாத நிலையில் உள்ளன. அதுவும் மொழிப்போரில் பெண்கள் முனைப்புடன் ஈடுபட்டமை வெளிவராத நிலையிலேயே உள்ளன. அவற்றை எல்லாம், அன்றைய இதழ்கள், அழைப்பிதழ்கள் முதலியவற்றின் மூலம் நமக்குச் சிறப்பாக எடுத்துத் தந்துள்ளார். இந்நூலை மாணாக்கர்களுக்குத் துணைப்பாட நூலாக வைக்கலாம். இந்நூலின் கட்டுரைகளைப் பாட நூல்களில் சேர்க்கலாம்.

மொழிப்போரால் ஆட்சிக்கு வந்த அரசுகள் மொழிப்போரை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தத் தவறி விட்டன. இனியாவது வகுப்புகள் தோறும் மொழிப்போர் வரலாறுகளும் மொழிப்போராளிகள் வரலாறும் பாடங்களாக வைக்கப்பட வேண்டும்.

இனி, 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூல் குறித்துப் பார்ப்போம்.

இந்நூல் மொத்தம் 18 கட்டுரைகளை உடையது. அவை பின்வருமாறு

1. அறிமுகம்

2. போர்க்களத்தில் பெண்கள்

3. காந்தியைக் கேள்வி கேடட நீலாவதி அம்மையார்

4. போராட்டத்துக்கு உரமிட்ட தலைவர்கள்

5. 1938 பெண்கள் மாநாடு முதல் அறிவிப்பு

6. தலைவர் நீலாம்பிகை அம்மையார்

7. பெரியாருக்குப் பெரியார் எனப் பெயர் சூட்ட வேண்டும் – தியாகராய நகர் மாதர் முன்னேற்றக் கழகம், அன்னை தருமாம்பாள் ..

8. மாநாட்டு நிகழ்ச்சிகள்

9. அன்னை மீனாம்பாள், டாக்டர் தருமாம்பாள், பண்டிதை நாராயணி, பார்வதியம்மையார் உரைகள்

10. வ,பா.தாமரைக்கண்ணி அம்மையார் – வரவேற்புக்குழுத் தலைவர்

11. நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள்

12. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் முறையாகப் பெண்கள் கைது

13. எண்மர் கைது

14. பெரியார் மீது நடவடிக்கை

15. பெண்கள் கைதை ஒட்டிய பிற போராட்டங்கள், கைதான பெண்கள் சிறுகச் சிறுக விடுதலை

16. வேலூர் முதலாவது சென்னை மாநிலத் தமிழ்ப் பெண்கள் மாநாடு

17. கட்டாய இந்தி எதிர்ப்பு

18. பின்னுரை

நூலின் முன்னுரையில் நூலாசிரியர் நிவேதிதா உலூயிசு, அன்று பெரியார் என்ன செய்தார்? தமிழ்நாட்டை மொழிப்போருக்கு அவர் எப்படித் தயார் செய்தார் என அறிந்து கொள்வதிலும் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்வதிலும் நம் முனைப்பைக் காட்ட வேண்டிய காலம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல நிறைகள் கொண்ட தலைவர்களிடமும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவ்வாறே பெரியாரிடமும் சில குறைகள் உள்ளன. ஆனால், பெரியாரை இழித்துப் பேசியும், அவருக்குரிய பெருமைகள் எல்லாம் உண்மையானவை யல்ல எனப் பழித்துக் கூறியும் அவரை ஏமாற்றுக்காரர் போல் விவரிததும் எழுதியும் பேசியும் வருவோர் உள்ளனர். அவர்கள் இந்நூலைப் படித்துப் பார்த்தால் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் அரிய பணிகள் நன்கு புலனாகும். ஆனால், அது மட்டும்தான் இந்நூலின் நோக்கமல்ல. இந்நூலின் முதன்மை நோக்கமே 1938 மொழிப்போரில் ஈடுபட்ட பெண்களின் பங்களிப்பு வெளிப்படாமையை வெளிப்படச்செய்வதே ஆகும். அதனை ஆசிரியர் செவ்வனே செய்துள்ளார்.

(தொடரும்)