அயல்நாடுகவிதை

நல்ல நண்பர்கள் தேவை! – யாழ் பாவாணன்

நல்ல நண்பர்கள் தேவை!

நண்பர்கள் எம்மை நாடி வரலாம்.
நண்பர்களைத் தேடி நாம் போகலாம்.
“ஆயிரம் நண்பர்களை இணைத்தாலும் கூட
ஓர் எதிரியைக் கூட ஏற்படுத்தி விடாதே!” எனப்
பாவரசர் கண்ணதாசன் சொல்லிவைத்தார்!
நண்பர்களை அணைக்கத் தான்
நானும் விரும்புகின்றேன்.
நண்பர்கள் எதிரியாவதைக் கண்டதும்
நானும் ஒதுங்குகின்றேன்.
எதிர்ப்பட்ட எதிரியும் நண்பராகலாம்
எச்சரிக்கையாகப் பழகுகின்றேன்.
நண்பர்களே வேண்டாமென
நானும் ஒதுங்கவில்லை – இத்தால்*
நண்பர்கள் தேவையெனக் காத்திருக்கிறேன்.
நண்பர்களால் வானுயரப் புகழீட்டிய
நண்பர்களால் தான் உணர்ந்தேன்
நண்பர்கள் எனக்குத் தேவை என்றே!
நண்பர்கள் இல்லையென்றால் – தனக்கு
உளநோய் தான் வந்திருக்குமென
நண்பர்கள் சொல்லித் தான் அறிந்தேன்
நண்பர்கள் கூட நல்மருந்தென்றே!
என்னை நண்பர் ஆக்குங்கள்…
என்னை எதிரி ஆக்காதீர்கள்…
நான் எதிரியாவதை விட
நல்ல நண்பராகவே இருந்துவிடுகிறேன்!
நல்ல நண்பர்களால்
நானும் நீடூழி வாழலாமென்ற
தன்நலம் கருதியே அழைத்தேன்
நாளையாவது நல்ல நண்பர்களாக
நாமிருக்கலாமென்றே!

யாழ் பாவாணன்

*இத்தால் = இதனால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *