(தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (2) – தொடர்ச்சி)

பொய் பேசும் கன்னட இனவெறியர்கள்!

தமிழ்நாட்டுக்கு உரிய காவிரியைத் திறந்து விட வேண்டுமெனக் காவேரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று வாரியம், உச்ச நீதிமன்றம் கூறுகின்றன.

எந்த நீதிக்கும் சட்டத்துக்கும் அறத்துக்கும் கட்டுப்பட மறுக்கிறது கருனாடகம். கேட்டால், எங்களிடமே தண்ணீர் இல்லை என்கிறது.
உண்மை நிலவரம் என்ன?

கிருட்டிணராவ சாகர் அணை
முழுக் கொள்ளளவு 124.8 அடி உயரம்
இன்றைய கொள்ளளவு 90 அடி
கபினி அணை
முழுக் கொள்ளளவு 65 அடி உயரம்
இன்றைய கொள்ளளவு 57 அடி
ஆரங்கி அணை
முழுக் கொள்ளளவு 129 அடி
இன்றைய கொள்ளளவு 127 அடி
ஏமாவதி அணை
முழுக் கொள்ளளவு 117 அடி
இன்றைய கொள்ளளவு 91

வானிலை ஆய்வறிக்கையின்படி, கருனாடகத்தில் காவிரி நீர்ப் படுகையில் 21.7 செமீ மழை பெய்துள்ளது. வரும் நாட்களில் கருனாடகாவில் மழை இரட்டிப்பாக இருக்கும்.
அப்படியானால், காவிரியில் நீர் இல்லை எனக் கருனாடகம் கைவிரிப்பதன் பொருள் என்ன?

எங்கள் அணைகள் வழிய வழிய நிரம்பிக் கருனாடகமே வெள்ளக்காடாகும் நிலை வந்தால்தான், உபரி நீரை வெளியேற்றி, தமிழ்நாட்டை எங்களின் வடிகாலாகப் பயன்படுத்திக் கொள்வோம் – இதுதான் 1974 முதல் கருனாடகத்தின் நிலைப்பாடு. இதில் எந்தக் கட்சி மாறுபாடும் இல்லை.

கருனாடகத்தில் காவிரிச் சிக்கல் தலையெடுக்கும் போதெல்லாம் கன்னடர்கள் தமிழர்களை வெட்டிக் குவிக்கிறார்கள். பேருந்துகளை எரிக்கிறார்கள். இது கருனாடக அரச பயங்கரவாதம். ஏனென்றால் இது வரை கருனாடக அரசு கன்னட இனவெறியர்கள் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்ததில்லை.

காவிரிச் சிக்கலை வெறும் உழவர் சிக்கலாகப் பார்ப்பது தமிழ்நாட்டு அரசியலின் பெரும் தவறு. தஞ்சாவூரில் வேளாண்மையே நடக்கா விட்டாலும் நமக்குத் தண்ணீர் தேவை. காவிரி தமிழ்நாடெங்கும் சல சலவென ஓட வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர் குறையாது பாதுகாப்பாக இருக்கும். ஆற்று மீன்வளம் இருக்கும். தமிழ்நாட்டின் பக்கம் அவ்வளவு நீதி இருந்தும் தமிழ்நாடு மயான அமைதியாக இருக்கிறது.

ஆனால் கருனாடகத்தில் கன்னட இனவெறியர்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். கன்னடர் நடிகர் சிவராசு குமார் போன்ற நட்சத்திர நடிகர்கள் “நம் காவிரி நம் உரிமை” எனக் களத்தில் நிற்கிறார்கள்.

கருனாடக அரசைக் கலைத்து, ஒன்றிய அரசு அணைகளைப் பொறுப்பில் எடுத்து, நமக்கான உரிமை நீரைத் திறந்து விட வேண்டும். ஒன்றிய அரசு மறுத்தால் நாம் வரி கொடா இயக்கம் நடத்த வேண்டும்.

கருனாடகம் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.

இந்த வழியில் போராடாமல் நமக்கு உரிமையான ஒரு சொட்டுக் காவிரி நீரையும் நம்மால் பெற முடியாது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 320