3 ] தமிழ்நாடு , க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்

(க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? – தொடர்ச்சி)
தமிழ்நாடு
க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்
தமிழ்நாடு மூவேந்தர்களால் ஆளப்பட்ட காலத்தில் இற்றை நாள்போல் அரசியல் கட்சிகளோ சமூகச் சீர்திருத்க் கட்சிகளோ இருந்ததாகச் சான்றுகள் எவையும் இலலை. ஏனெனில், அன்று அரசர்கள் மக்கள் நலனே தங்கள் நலன் எனக் கருதிய காலம். மக்களும் ‘மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம்’ எனக் கருதி வாழ்நதனர்.
சங்க காலத்திற்குப் பிறகு ஆண்ட அரசர்கள் ஆட்சிப் பொறுப்பைப் பொருட்படுத்தாமையால் அமைச்சர்களே சிலர் முற்பட்டு ஆட்சியைக் கைப்பற்றி ஆளத்தொடங்கினர். அப்போதுதான் மக்களிடையே அரசப் பற்றின்மை தோன்றி அமைச்சர்கள்பால் கருத்தைச் செலுத்தலாயினர். ஆட்சி சரியில்லாத காரணத்தால் நாட்டில் ‘வற்கடம்’ உண்டாயிற்று. மக்கள் ஆறலைத்தல் முதலிய தீய செயல்களில் ஈடபடலாயினர். சிறுசிறு கூட்டத்தினராகச் சேர்ந்து கொண்டனர். வள்ளுவர் வாழ்ந்த காலத்திலும், இந்தச் சூழ்நிலையிலிருந்தது போலும். ஆகவே, நல்ல நாட்டிற்கு இலக்கணம் கூறவந்த வள்ளுவர்,
“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லாது நாடு” (எண் : 735)
என்று நவின்று போந்தார்.
ஆனால், இன்றைய தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளைப் போல் இருந்ததில்லை என்பது உறுதி. இந்தியத் துணைக்கண்டத்தில் ஆரியர் அடியெடுத்து வைத்தது முதல் கட்சிகள் தோன்றத் தொடங்கின. தேவர், அசுரர், வானரர் முதலிய குழுவினர் தனித்தனிக் கட்சியினரே இந்துக்கள் புத்தர்கள், சமணர்கள், முஸ்லீம்கள், கிருஸ்துவர்கள், சைவர்கள், வைணவர்கள், சீக்கியர்கள் முதலியவர்களும் தனித்தனி கொள்கைகளைக் கொண்டவர்களே. எனவே, இக்குழுவினர்களும் கட்சிகள் போன்றவர்கள்தாம். ஒவ்வொரு வகையான கொள்கையைப் பின்பற்றியவர்கள் – ஒருவகை மதத்தினர் (கட்சியினர்).
கட்சிக்கும், மதத்திற்கும் எந்த வேறுபாடும் இன்று இல்லையென்பது ஆராய்ச்சியறிவுடைய அனைவரும் ஒப்புக்கொள்ளத்தக்கதே.
அன்று தோன்றிய மதம், கட்சி முதலியவற்றைவிட இன்று தோன்றியுள்ள – தோன்றுகின்ற கட்சிகளால், நாட்டு மக்கள் நலம் குலைக்கப்படுகிறது. பிறநாடுகளில் மூன்று அல்லது நான்கு கட்சிகளுக்கு மேல் இல்லை. இவையும் நாட்டு நலத்திற்காகவே பாடுபடும், பாடுபடுகின்றன.
தனிப்பட்டவர் நலனுக்கே கட்சிகள்
ஆனால், இன்றைய கட்சிகளில் பல தனிப்பட்ட ஒருவர் (அதன் தலைவர்) நலனுக்காகவே பாடுபடுகின்றன. அச்சூழ்நிலையை உருவாக்கிவிடுகின்றனர் பாதந்தாங்கிகள். முதன்முதல் ஆங்கிலேயர் இந்நாட்டை ஆண்டபோது உருவாயிற்று. ‘காங்கிரசு! அது தோற்றுவிக்கப்பட்ட நோக்கம் வேறு, தோற்றுவித்தவர் ஓர் ஆங்கிலேயரே. நாளடைவில் அதில் இந்தியர் பலர் உறுப்பினரான பிறகு அதன் கொள்கையே மாறி “இந்திய தேசிய காங்கிர” சாக மாறிற்று.
அதற்குப்பின், தென் இந்திய நலவுரிமைச் சங்கம் தோன்றிற்று. பின்னர் நீதிக்கட்சி உண்டாயிற்று. பிறகு “திராவிடர் கழகம்” தோன்றியது. தமிழ்நாடு மட்டுமின்றி, சென்னை மாகாணத்தையே உள்படுத்தி ஏற்பட்டது திராவிடர் கழகம். பொதுமக்கள் நலம் கருதியே பாடுபட்டது. தன்னலம் கருதுபவருக்கு அதில் இடம் அன்றும் இல்லை. இன்றும் இல்லை. அவ்வாறு தன்னலம் கருதிய ஒருசிலர் பிர்ந்து சென்று வேறு கட்சியமைத்தனர். அதுதான் கண்ணீர்த்துளிகள் கட்சி தி.மு.க என்பது.
எண்ணற்ற கட்சிகள்
இவ்வாறு தனிப்பட்டவர் விருப்பு, வெறுப்பு காரணமாகவும், தன்னலம், தலைமைப் பதவி ஆசை காரணமாகவும் பல கட்சிகள் தோன்றின. தமிழ்நாட்டில் மட்டும் 17 கட்சிகள் உள்ளன.
இன்னும் எத்தனைக் குட்டிக் கட்சிகள் கிளைக்குமோ? யாரே அறியவல்லார்? அல்லாமலும், சாதி மத அடிப்படையில் தோன்றியுள்ள கட்சிகள் பலப்பல. இவை யாவும் எந்தப் பொது நல அடிப்படையிலும் தோன்றியனவல்ல. ஓரிரு கட்சிகள்தாம் தன்னலமற்ற தொண்டாற்றத் தோன்றியவை. அவற்றிலும், சில அரசியலைக் கைப்பற்ற முனைந்து அலமந்து நிற்கின்றன. இதனால், விபிஷணக் கூட்டம் பெருகி வருவதைக் காண்கிறோம்.
இன்றைய நிலையில் பொதுமக்கள் நலனே பெரிதெனக் கருதிப்பாடுபடுகின்ற ஒரே தலைவர் பெரியார் அவர்கள். ஒரே கட்சி திராவிடர் கழகமேயாகும்.
ஒரு கட்சித் தலைவருடைய சில மாறுபட்ட கருத்தை வைத்தும், தன்னுடைய சொந்த நன்மை கருதியும், புற்றீசல் போல் தலைவர்களும், கட்சிகளும் வெளிப்பட்டுத் தமிழ்நாட்டைச் சீரழிக்கப் பொதுமக்கள் இடங்கொடுத்துக் கொண்டே போனால், இறுதியில் நாட்டு நிலைமை என்னவாகும்?
பொதுமக்கள் இவற்றையெல்லாம் நாட்டுப் பொதுநலக் கண்ணோட்டத்துடன் காணவேண்டும். தனிப்பட்ட ஒருவர் ஒரு கட்சியின் மீது வெறுப்போ அல்லது அதன் தலைவர் மீது வெறுப்போ ஏற்பட்டால் உடனே பத்துப் பேரைச் சேர்த்துக் கொண்டு ஒரு கட்சியை அமைக்கின்ற நிலை இந்த நாட்டில்தான் இருக்கிறது. ஏனெனில், கல்லாதவர்கள் பாமரர் எதைச்சொன்னாலும், நம்பிவிடக்கூடிய ஏமாளிகள் இந்த நாட்டில்தான் மிகுதியாக உள்ளனர். எனவே, வயிற்றுப் பிழைப்புக்கு அரசியல்வாதிகள் மலிந்து வருகின்றனர் இந்நாட்டில்.
இதற்கெல்லாம் நாட்டு நலம் விரும்பும் நல்லோர் இடந்தரலாமா? ஒரு கட்சியில் வெறுப்புற்றவர் வேறு கட்சி அமைப்பதைவிட, உள்ள ஒரு நல்ல கட்சியில் சேர்ந்து கொள்ளலாம். ஒரு தலைவர் மீது வெறுப்புக் கொண்டவர் தனித்து நின்று அமைதியாகப் பணியாற்றி வாழலாம். இதனை விட்டு, உடனே தனிக்கட்சி உண்டாக்கி, தனக்கு வேண்டாத
கட்சியும், தலைவரும் ‘ஒழிக’ என்று சில கூலிப்படையினரை ஏவி, கூக்குரலிடச் செய்வது விரும்பத் தக்கதாகுமா? அற்ப எண்ணம் படைத்த கட்சிகள் தலையெடுக்கச் செய்யாமல் தடுக்கவேண்டியது பொதுமக்கள் கடமையாகும்.
அவர்களின் கூட்டங்களைப் புறக்கணித்தலே நல்ல பயன் தரும்.
இனியும், இத்தமிழ்நாட்டில் இத்தகைய பாழ் செய்யும் பல குழுக்கள் உண்டாகாதவாறு பொதுமக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்டவர் விருப்பு, வெறுப்புக்கு மதிப்பு தரக்கூடாது. அவர்களை ஆதரிக்கவோ, அனுசரிக்கவோ கூடாது. அத்தகையோரைப் பொதுவாக யாவரும் நாட்டுப் பகைவர் என்றே கருதி நாடாது ஒழிவார்களாக! வாழ்க தமிழ்நாடு! ஒழிக உட்பகை!
(நன்றி : விடுதலை. 01.04.62)
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை



Leave a Reply