(வெருளி நோய்கள் 1121-1125 தொடர்ச்சி)

செருபியர்கள் மீதான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் செருபிய வெருளி.
செருபிய மொழி, நாடு, இனம், கலை, பண்பாடு முதலானவற்றின் மீது மிகுந்த வெறுப்பும் எதிர்மறைப்போக்கும் பேரச்சமும் இத்தகையோர் கொண்டிருப்பர்.
செருபிய எதிர்ப்புணர்வை உருவாக்கும் வண்ணம் சில திரைப்படங்களும் வந்துள்ளன.
00

செருப்படி விழும் என அளவு கடந்து பேரச்சம் கொள்வது செருப்படி வெருளி.
வாய்ச் சண்டைகளில் செருப்பால் அடிபடுவது குறித்த பேரச்சம் இருப்பதுபோல் அரசியல் தலைவர்களுக்குப் பொது மக்களிடம் இருந்து விழும் செருப்படி குறித்த பேரச்சம் உள்ளது.
பெரியார் ஈ.வே.இராமசாமி முதலான தலைவர்கள், தங்கள் மீது ஒரு செருப்பை வீசினால் ஒற்றைச் செருப்பை விசினால் யாருக்கும் பயனில்லை என்று சொல்லி மற்றொரு செருப்பை வீசச் சொன்ன நிகழ்வுகளும் வீசப்பட்ட செருப்பை ஏலத்திற்கு விட்டுக்கட்சி நிதி திரட்டிய நிகழ்வுகளும் உள்ளன.
அரசியல் தலைவர்களின் கருத்துகளுக்கு எதிரான குறியீடாகவும் செருப்படி விளங்குகிறது. இதையே நான், ‘பிரபாகரனின் செருப்படி ஒரு குறியீடு’ என்னும் என் கட்டுரையில்(அகரமுதல மின்னிதழ் நாள் 08.11.2016) குறிப்பிட்டு இருந்தேன்.
“செருப்பு வீச்சு என்பது ஒன்றும் புதிதல்ல. உலகெங்கும் அங்கும் இங்குமாக அவ்வப்பொழுது நடைபெறுவதுதான்!” மேலும், “செருப்பு வீசியவர்கள் தனிப்பட்ட பகை உணர்வில் வீசவில்லை என்பதாலும் கருத்தியல் அடிப்பிடையிலும், முறைகேட்டிற்கு எதிர்ப்பாகவும் வீசினர் என்பதாலும் இவர்களை அந்தந்தப் பகுதி மக்கள் போற்றவே செய்கின்றனர்.” என்றாலும் தங்கள் கருத்திற்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளதைக் காட்டுவதால் அரசியலாளர்கள் செருப்படிக்கு அஞ்சுகின்றனர். வீசப்படும் செருப்பு மேலே படாவிட்டாலும் எதிர்ப்பு முயற்சி குறித்து அஞ்சுகின்றனர்.
செருப்பு அணிந்து நடப்பதால் ஏற்படும் ஒலி அடிப்படையில் பிலிப்-பிலாப்பு(Flip-flop) எனப்பெற்றது.
00

செருமானிய நாடு தொடர்பானவற்றில் ஏற்படும் மட்டற்ற பேரச்சம் செருமானிய வெருளி.

முதல் உலகப்போரின்போது இங்கிலாந்து மக்களிடம்தான் செருமன் வெருளி தோன்றியது.செருமானிய மக்கள், அவர்களின் பண்பாடு, கலை, நாகரிகம், அவர்களின் வாதங்கள், படைப்புகள் என அந்நாட்டுத் தொடர்பானவற்றில் வெறுப்பும் பேரச்சமும் கொள்ளும் நிலையே இது.
00

செலவு குறித்த வரம்பற்ற பேரச்சம் செலவு வெருளி.
‘பாமா விசயம்’ என்னும் திரைப்படத்தில், கண்ணதாசனின்
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
என்னும் பாடல் இடம் பெறும்.
இயல்பாகவே வருவாய்க்கு மீறிய செலவால் கலைப்படுவோர் உள்ளனர். அதே நேரம் ஆடம்பரத்தால் செலவை மிகுதியாக்கிக் கொண்டு வரவுக்கு மீறிச் செல்வதால் அல்லல் படுவோரும் உள்ளனர்.
இலம்பாடு வெருளி(Peniaphobia), செல்வ வெருளி(Plutophobia) உள்ளவர் களுக்கும் செலவு வெருளி வருகிறது.
00

பெற்றோர் காலத்து இசையைக் கேட்டு எரிச்சல் அடைந்து தேவையற்ற பேரச்சம் கொள்வது செல்லிசை வெருளி.
பெற்றோர் காலமாகிய சென்ற கால இசையைக் குறிக்கும் வகையில் சுருக்கமாகச் செல்லிசை எனப்படுகிறது.
தலைமுறை இடைவெளியினால், பெற்றோர் காலத்து இசைகளைக் கேட்கப்பிடிக்காமல் வெறுக்கத் தொடங்கி விடுகின்றனர். நாளடைவில் வெறுப்பு வளர்ந்து அதனைக் கேட்கவே பேரச்சம் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவர்களின்பிள்ளைகள் காலத்தில் இவர்கள் விரும்பும் இசை இவர்களின் பிள்ளைகளுக்குப் பிடிக்காமல் போகும். இசை மீது விருப்பம் இருக்கும். ஆனால் தம் கால இசை மீது அளவு கடந்த விருப்பு வருவதால் மூத்தோர் கால இசை மீது வெறுப்பு வந்துவிடுகிறது.எல்லாக் கால இசையை விரும்புவர்களும் பழைய இசைகளே சிறப்பானது எனக் கருதுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
paremusophobia என்பதை pare musophobia எனப்பிரித்து எழுதக் கூடாது. ஏனெனில், Musophobia எலி வெருளியைக் குறிக்கும். இங்கு muso என்பது இசையைக் குறிக்கிறது.
00