(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08: தொடர்ச்சி)

  தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் ஒழிக்கப்படுவதும் அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் தொடர்ந்தாலும் கொலைகாரனைத்தான் வரவேற்றுக் குலவுகிறார்களே ஒழிய, ஒன்றிய அரசினர் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கேரளச் செவிலியர்கள் தாக்கப்படும் முன்பே பேரிடர் வரும் என்று கடத்தல் நாடகம்போட்டு மீட்டு வரும் ஒன்றிய அரசு, தமிழ் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உதவியாக இருந்ததுடன் கொலைகாரக் கூட்டாளிகளுடன் கைகோத்துக் கொண்டு தொடர்ந்து தமிழர்நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இந்தியராக எண்ணினால் இணையுரிமை கொடு! இல்லையேல் தனியுரிமை கொடு! எனக் கேட்டு ஒன்றியஅரசை வழிக்குக் கொணரும் திறமைகூட நம்மிடம் இல்லை.

எங்கும் தமிழ் இல்லை! எதிலும் தமிழ் இல்லை!

  தொலைபேசி முதலான ஒன்றிய அரசு தொலைபேசிகளில் வணக்கம் ஒலிக்காது; நமசுகாரம்தான் நச்சரிக்கும்.

  பண எடுப்பு மையங்களில் ஆங்கிலமும் இந்தியும் உள்ளன. ஆனால் பலவற்றில் தமிழைக் காணோம்!

  வங்கியின் படிவங்கள் தமிழைப் புறக்கணிக்கின்றன. நாம் அவ்வங்கிகளைப் புறக்கணிப்பதில்லை!

  அங்கன்வாடி முதலான பெயர்களைச் சூட்டிக் கொண்டு தமிழை நாமே வெளியேற்றிக் கொண்டுள்ளோம்.

  தமிழகக்காவல்துறை ஆங்கிலேயர்க்குச் செயல்படுவதுபோல் அறிவிப்புகள், வழிகாட்டும் குறிப்புகள் யாவற்றிலும் தமிழ் இல்லை. தமிழன்னைக்குக் காவல் தேவையில்லை என விட்டுவிட்டார்கள் போலும்!

  தொடர்வண்டி அறிவிப்புகளில் தமிழ் இல்லை. எச்சரிக்கை, அபாய அறிவிப்பு என்றெல்லாம் தமிழ்நாட்டில் இந்தியிலும் மலையாளத்திலும் காண முடியும். ஆனால், தமிழர்கள் எக்கேடு கெட்டால் என்ன? அவர்களுக்கு எதற்கு எச்சரிக்கை என்று தமிழில் தருவதில்லை!

  மின்னேணி முதலான அனைத்து அவசர உதவி அறிவிப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் தமிழைக் காணமுடியாது. தமிழர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று விட்டுவிட்டார்ளா? இப்படியாவது தமிழர் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என எண்ணுகிறார்களா? எனத் தெரியவில்லை.

  உணவகங்களில் உணவுப் பெயர்கள் தமிழில் இல்லை! உணவு நிரலும் தமிழில் இல்லை! தமிழையா   சாப்பிடப்போகிறார்கள்! தருவதை வயிற்றில் திணித்துக் கொண்டு ஓடட்டும் என எண்ணுகிறார்களோ!

  தங்கும் விடுதிகளான உறைவகங்களில் அறைகளின் பெயர்கள் தமிழில் இல்லை. கட்டண விவரங்கள், வசதி வாய்ப்புகள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்கள் பணத்தில் வாழ்ந்து கொண்டு தமிழர்களி்ன் மொழியான தமிழைப் புறக்கணிக்க இவர்களுக்கு எவ்வாறு துணிவு வந்தது? தமிழர்கள் வாய்ப்பேச்சு வீரர்கள். முரண்டுபிடிக்கும் பொழுது மெதுவாகத்தட்டினாலே வீழ்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை போலும்! நமக்குள்ள உரிமைகளைக்கூடக் கேட்க முடியாமல் வாய் மூடி இருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

 உறைவகங்களில் தங்குவதற்கான பதிவில் தமிழ் இல்லை. உணவகங்களில் நாம்தான் பணம் கொடுக்கிறோம். ஆனால் திருமணம் முதலான விழா அல்லது நிகழ்வுக் குறிப்புகளை அவர்கள் தமிழில் எழுத மாட்டார்களாம்! என்ன கொடுமை இது!

  கடைகளில் தரும் விலைச்சீட்டுகளில் தமிழ் இல்லை.

தமிழ் நல அரசாணைகளைப் பின்பற்றாத மேலோர்

 அரசாணைகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் மதிக்காத பொழுது மக்கள் எங்ஙனம் மதிப்பார்கள்? சான்றுக்கு ஒன்று! ஊர்திகளில் தமிழில் பதிவு எழுத்துகளைக் குறிக்கும் அரசாணையை அமைச்சர்களோ தலைமைச் செயலக அதிகாரிகளோ துறைத்தலைவர்களோ மதிக்காத பொழுது வேறு யார்தான் மதிப்பார்கள்! கணக்குக் காட்ட ஓர் அரசாணை அவ்வளவுதான்! இப்படித்தான் தமிழ்நாட்டில் தமிழ் முழுமையான ஆட்சி மொழியாக இல்லை.

தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நாம்

  தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் படிக்கவும் பணியாற்றவும் வாய்ப்பு உள்ளபோது யாருக்கும் உதவாத தமிழ் என்று அனைவரும் புறக்கணிக்கத்தானே செய்வார்கள்! இப்படி எல்லாம் இயன்ற வரை தமிழை எல்லா இடங்களில் இருந்தும் துரத்தி விட்டு யாரோ சிலர் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என முழங்கினால் போதுமா? தமிழ்நாட்டில் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது.

குறைத்தே காட்டப்படும் தமிழ் மக்களின் எண்ணிக்கை

தமிழர்களாக இருந்தும் தமிழ் தெரியாதவர் உள்ளதால், தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைத்தே காட்டப்படுகின்றது; தமிழ் மக்கள் எண்ணிக்கையையும் கணக்கெடுப்பில் புறக்கணிப்பதாலும் உலகில் தமிழ் மக்களின் எண்ணிக்கையும் குறைத்தே காட்டப்படுகின்றது.  இது பற்றிய அறிவும் நமக்கு இல்லை.  எடுத்துக்காட்டாகச் சில பார்ப்போம். ஒரு காலத்தில் முழுமையும் தமிழ்நாடாக/ தமிழ்த்தீவாக இருந்த இலங்கை பின்னர் மெல்ல மெல்லச் சிங்களப் பகுதியாக மாறி இப்போது பெரும்பான்மை சிங்களப் பகுதியாக மாறிவிட்டது. இருப்பினும் குறைவாக மாறிய தமிழ் மக்களின் எண்ணிக்கையும் முழுமையாகக் காட்டப்படவில்லை.  விக்கிபீடியாவில், ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் தலைப்பில்’ இலங்கையிலும் ஈழத்திலும் உள்ள கொழும்பு, யாழ்ப்பாணம் முதலான நகரங்களே குறிக்கப்பெறவில்லை. எனவே, தமிழர் எண்ணிக்கை குறைவாகத்தானே காட்டப்படுகின்றது.

இனவியல்: மொழிகளின் உலகம்(Ethnologue: Languages of the World)  என்பது மொழிகள் விவரம் பற்றிய பதிப்பாகும்; இவ்வுலக ஆவணத்தில், ‘மொழிகள்’ என்னும் பிரிவில் ‘தமிழ்’ என்னும் தலைப்பில் தமிழ் பேசப்படும் நாடுகளில் ஒன்றாகப் பருமா அல்லது மியன்மா குறிக்கப் பெறவில்லை. ஏறத்தாழ 25 நூறாயிரம் தமிழர்கள் வாழ்ந்த இந்த நாட்டில் இப்போது 20 நூறாயிரத்திற்குக் குறையாமல் உள்ளனர். எனினும் உலகப் புள்ளிவிவர ஆவணத்தில் இது குறிக்கப் பெறவில்லை. இவ்வாறு உலக மக்கள் கணக்கெடுப்பில் தமிழர்கள் எண்ணிக்கை குறைவாகவே காட்டப்படுகிறது.