வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது

இவ்வாண்டு தொடங்கப்பட்டுள்ள வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது எழுத்தாளர் அபிராமி கணேசனுக்கு வழங்கப்படுவதை அறிவிப்பதில் வல்லினம் இலக்கியக்குழு மகிழ்கிறது.

கெடா மாநிலத்தில் உள்ள குரூண் எனும் சிற்றூரில் பிறந்த அபிராமி கணேசன் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியத்துறை மாணவியாவார். இருபத்து மூன்று வயதான இவர் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பொதிகை’ இதழில் தனது எழுத்து முயற்சியைத் தொடங்கினார். பின்னர் வல்லினம் இதழில் கட்டுரைகள் எழுத முனைப்பு காட்டினார்.

அபிராமி கணேசன் தனது கட்டுரைகள் வழி அடையாளம் காணப்பட்டார். சூழலியல் தொடர்பான அவரது விரிவான கட்டுரைகளும் மலேசியச் சமூகச் சூழல் குறித்த ஆய்வு கட்டுரைகளும் அவரைத் தனித்து அடையாளம் காட்டின. எழுந்து வரும் புதிய எழுத்தாளர் ஒருவர் கொடுக்கும் தொடர் உழைப்பும் கண்டடையும் புதிய தளங்களும் அவர் நம்பிக்கைக்குறிய கட்டுரையாளராக அடையாளம் காட்டுகிறது.

வல்லினம் இவ்வருடத்துக்கான இளம் எழுத்தாளர் விருதை கட்டுரை பிரிவுக்கானதாக முடிவெடுத்துள்ளது. விருதுத் தொகையாக  இரண்டாயிரம் வெள்ளியுடன் (இங்கிட்டுடன்-RM 2000) விருதுக் கோப்பையும் வழங்கப்படும். வரும் காலங்களில் இளம் எழுத்தாளர்களின் பிற இலக்கிய முயற்சிகளும்  விருதுக்குக் கருதப்படும்.. இவ்வாண்டுக்கான விருதைத் தொடர்ந்து கட்டுரைகளில் கவனம் செலுத்திவரும்  சூழலில்  தகுதி கொண்ட படைப்பாளராக அபிராமி கணேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்விருது இனி வரும் இளம் படைப்பாளர்கள் பலருக்கும் ஊக்குவிப்பாக இருக்கும் என நம்புகிறோம்.