(தமிழ்ச்சொல்லாக்கம்  91- 95 தொடர்ச்சி)

  1. அ. Donation – நன்கொடை

இந்து கன தனவான்கள் மெம்பர்களாக விருக்கப் பிரியப்படாமற்போனால் நன்கொடை (Donation)களாகவாவது கொடுக்க இட்டப்பட்டால் கொடுத்து வரலாம்.

இதழ் :           சிரீலோரஞ்சனி 15-4-1890, புத். 4, இல – 1 பக். – 8, சி.கோ. அப்பு முதலியார் : (சிந்தாதிரிப்பேட்டை) பத்திராசிரியர்.

  1. ஆ. Donation – நன்கொடை

இந்து மதாபிமான சங்கம். இச்சங்கம் தாபித்து இரண்டு வருடமாகிறது. இதில் மெம்பராய் சேரவேணுமாகில் மாதம் சபைக்கு 4 அணாவும், சங்கத்திற்கு 1 அணா முதல் சந்தாவாக முன்னாடி செலுத்தி வரவேண்டியது. கிளைச் சபையாக சேர்க்கவேண்டுமாகில் வருடம் ஒன்றிற்கு ரூ. 5 கொடுக்கவேண்டியது. கல்வி முதலிய விசயங்களில் தேர்ச்சியடைந்த வித்வான்களும் பண்டிதர்களும் கெளரவ மெம்பர்களாகச் சேர்க்கப்படுவார்கள். நன்கொடை (Donation) கொடுக்கப் பிரியப்பட்டவர்கள் கொடுத்து வரலாம்.

மேற்படி இதழ்      :           (1-5-1890) புத் – 4. இல . 2. பக். – 16.

எழுத்தாளர்            :           தி.மா. பழனியாண்டி பிள்ளை.

  1. இன்ப்ளூயன்சா – முடக்குக் காய்ச்சல்

இன்ப்ளூயென்சா என்னும் இங்கிலீசு பெயரையுடைய முடக்குக் காய்ச்சல் சென்னை, பெங்களூர், (இ)ரேச்சூர் முதலிய சென்னை இராசதானி அநேக இடங்களில் வலைவீசி சிலரைக் கொள்ளையுங் கொள்ளுகிறது. கடந்த பட்சம் ஒரு (இ)ச்திரி இச்சுரம் பொறுக்காமல் கிணற்றில் விழுந்து தற்கொலையும் செய்து கொண்டாள்.

இதழ் :           சிரீலோரஞ்சனி (1890 – ஏப்ரல்)

மேற்படி புத். பக். 7.

  1. Mills – ஆலைகள்

இப்போது இவ்வுலகத்தினற்கோர் பெரும்பேறென்று சொல்லும்படியாகிய புகைவண்டி யென்ன, தந்தி யென்ன, நீராவிக் கப்பலென்ன, அச்சு இயந்திரங்களென்ன, Millsகளென்னும் ஆலைகளென்ன, Baloonsகளென்னும் ஆகாய ரதங்களென்று சொல்லும்படியாகிய மகா அற்புதமான கருவிகளையும், மற்ற சாமான்களையும் உண்டு பண்ணியவர்கள் யார்? அம் மெய்ச் சமயமாகிய கிறித்து சமயத்தை அனுட்டித்தவர்களன்றோ?

 

மேற்படி இதழ்      :           (1-5-1890) புத்தகம் – 4. இல – 4.

கட்டுரை     :           கிறித்துமதம் முளைத்ததேன்? பக்கம்-28.

கட்டுரையாசிரியர்        :           பீமநகர் சங்காபிமானி

  1. Power loom – அடிக்கும் தறி
  2. Pendulam – தொங்கியாடி

அச்சடிக்கிற விதத்தை உண்டாக்கிய சான் பாசுட்டு (John Faust) என்பவரைப் பிசாசின் தோழன் என்றும், பிசாசைக் கைவசப்படுத்திக் கொண்டு புத்தகம் புத்தகமாய் உற்பத்தி செய்கிறானென்றும் சொன்னார்களன்றோ? நூற்கிற யந்திரம், சாயமிடும் யந்திரம், அடிக்கும் தறி இவைகளை உண்டு செய்தவர்களும் கொஞ்சப்பாடா பட்டார்கள்? ஒன்றுமில்லாத ஒரு பெண்டுலம் (அதாவது கடிகாரங்களில் ஆடும் அரசிலை போன்ற தொங்கியாடி’ என்பது) கண்டுபடித்தவனைக்கூட அல்லவா ‘குடுகுடுபாச்சா Mr. Swing Swang என்று பரிகசித்தார்கள்!

மேற்படி இதழ்      :           (1-10-1890) புத்தகம் -4 இல- 12, பக்கம் – 94

கட்டுரையாளர்    :           ஓர் இந்து

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்