(உ.வே.சா. வின் என் சரித்திரம் 87 : அத்தியாயம்-53 : அம்மை வடு-தொடர்ச்சி)

அப்போது மதுரை இராமசாமி பிள்ளை என்ற தமிழ் வித்துவானொருவர்
அங்கே இருந்தார். அவர் பிள்ளையவர்களுடைய மாணாக்கர். ஆறுமுக
நாவலரிடம் பழகியவர்
. தாம் இயற்றிய சில நூல்களைப் பிள்ளையவர்களிடம்
படித்துக் காட்டி அவர் கூறிய திருத்தங்களைக் கேட்டு வந்தார். அவரைப் பற்றி
நான் சில முறை கேள்வியுற்றிருந்தேன். பிள்ளையவர்கள் அங்கிருந்தவர்களில்
ஒவ்வொருவரையும் எனக்குப் பழக்கம் செய்வித்தார்.

ஆசிரியர் விருப்பம்

என் உடம்பில் மெலிவைக் கண்ட ஆசிரியர் என் தந்தையாரைப்
பார்த்து, “இவருக்கு இன்னும் நல்ல சௌக்கியமுண்டாகவில்லை. இங்கே ஆகார
வசதிகள் போதியபடி இல்லை. இவருடைய தாயார் இடும் உணவை உண்டுதான்
இவர் உடம்பு தேற வேண்டும். ஊரிலேயே இன்னும் சில தினங்கள் இருந்து
உடம்பு சௌக்கியமானபிறகு வரலாம்” என்று சொல்லி வந்தார். “இவர் நம்மை மீட்டும்
ஊருக்கு அனுப்பி விடுவாரோ!” என்று அஞ்சினேன்.

“ஆனாலும் இவரைப் பிரிந்திருப்பது எனக்குச் சிரமமாகவே இருக்கிறது.
இவர் ஊருக்குப் போன பிறகு நானும் சில ஊர்களுக்குப் போய் வந்தேன்.
அப்பால் குருபூசை வந்தது. பின்பு மகாமகம் வந்தது. பாடம் நடக்கவில்லை.
இனிமேல் பாடத்தை நிறுத்தி வைப்பது உசிதமன்று. ஒரு யோசனை
தோன்றுகிறது. தாங்கள் அப்படிச் செய்தால் அனுகூலமாக இருக்கும்” என்று
ஆசிரியர் என் தந்தையாரை நோக்கி மறுபடியும் கூறினார்.

“என்ன செய்ய வேண்டும்?”

“இவருடைய தாயாரை அழைத்துக் கொண்டு பூசையோடு வந்து
தாங்கள் இவ்விடம் சில காலம் இருந்து இவரைக் கவனித்துக் கொண்டால்
நலமாக இருக்கும்.”

“அப்படியே செய்கிறேன். அதில் என்ன இன்னல் இருக்கிறது?” என்று
என் தந்தையார் உடன்பட்டார். அப்போது எனக்கு உண்டான மகிழ்ச்சி
எல்லையற்றது.

தந்தையார் உடனே விடைபெற்றுச் சென்று என் தாயாரை அழைத்து
வந்தார். பிள்ளையவர்கள் நாங்கள் இருப்பதற்கு வேண்டிய வசதிகளை மடத்துக்
காரியத்தர்களைக் கொண்டு திருவாவடுதுறையில் செய்வித்தார்.

மீண்டும் பெரிய புராணப் பாடம் வழக்கம்போல் நடந்தது. நன்னூல்
விருத்தியுரையைச் சிலரும் காண்டிகையுரையைச் சிலரும் பாடம் கேட்டு
வந்தனர். அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன்.

இரண்டு மாணாக்கர்கள்

பிள்ளையவர்களிடம் மற்ற மாணாக்கர்களோடு இரண்டு
அபிசேகத்தர்களும் பாடம் கேட்டனர். அவர்கள் இருவர்பாலும்
மாணாக்கர்களிற் சிலர் வெறுப்புக் கொண்டவர்களைப்போல நடந்து வந்தனர்.

முதலில் அதற்குக் காரணம் எனக்கு விளங்கவில்லை; பிறகு தெரிந்தது. என்
ஆசிரியர் திருவிடைமருதூருலாவை இயற்றி அரங்கேற்றிய காலத்தில்
அவ்விருவரும் பல வகையான இடையூறுகளை விளைவித்தார்களாம்.

“சிவபெருமான் திருவீதியிலே செல்லும்போது பேதை முதல் பேரிளம் பெண்
இறுதியாக உள்ள ஏழுபருவ மகளிரும் காமுற்றார்கள்” என்ற செய்தி அவ்வுலாவில் வருகிறது. திருவிடை மருதூரில் வசித்த இராச பந்துக்களான சில மகாராட்டிரர்களிடம் மேலே சொன்ன இருவரும் சென்று, “இந்தத் தலத்தில் சுவாமி வருகையில் வீதியில் உள்ள பெண்கள் காமம் கொண்டு பிதற்றினார்களென்று இவ்வூர் உலாவை இயற்றிய ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இந்த வீதியில் நீங்கள் குடியிருக்கிறீர்கள். உங்கள் சாதி திரீகளுக்கு அபவாதம் அல்லவா இது?” என்று சொல்லிக் கலகமூட்டி
விட்டார்களாம். பிள்ளையவர்களுக்கு இதனால் சில அசௌகரியங்களும்
நேர்ந்தனவாம்.

ஆனால் அவ்விருவரும் பாடம் கேட்டு வருகையில் குணநிதியாகிய
பிள்ளையவர்கள் அவர்களிடம் சிறிதேனும் வெறுப்பைக் காட்டாமல்
பிரியமாகவே நடத்தி வந்தார். மற்ற மாணாக்கர்களுக்கோ அவ்விருவரிடத்திலும்
வெறுப்பு இருந்தே வந்தது. இச்செய்திகளை நான் கேட்டபோது எனக்கும்
அவர்களிடத்தில் கோபம் மூண்டது. நன்னூலில் அடிக்கடி அவர்களைக்
கேள்வி கேட்டுத் திணற வைப்பேன். அவர்கள் முகம் வாடி இருப்பார்கள்.
இடையிடையே அவர்கள் முன் செய்த விசமத்தனமான காரியத்தைக்
குறிப்பாகச் சொல்லிக் காட்டுவேன். பிள்ளையவர்களிடத்திலிருந்த மதிப்பும்
இளமை முறுக்குமே அவ்வாறு நான் செய்ததற்குக் காரணம்.

இப்படி அடிக்கடி அவர்கள் எங்களிடம் அகப்பட்டுத் துன்புறுவதைக்
கண்ட ஆசிரியர் அவ்வாறு செய்ய வேண்டாமென்று குறிப்பாகச் சொல்லுவார்.
எங்களுக்கிருந்த ஆத்திரம் தீரவேயில்லை. ஆசிரியர் அவ்வாறு சொல்லும்
தினத்தில் மாத்திரம் சும்மா இருப்போம். மறுபடியும் கண்டனம் கிளம்பும்.
எங்கள் ஆசிரியர் இவ்விசயத்தை ஒரு நாள் சுப்பிரமணிய தேசிகரிடம்
சொல்லி, “இந்தப் பிள்ளைகளுக்கு அவர்களிடம் கோபம் உண்டு. அடியேனிடம்
அவ்விருவரும் தவறாக முன்பு நடந்து கொண்டார்கள். அதைத் தெரிந்து
அவர்களைப் படாதபாடு படுத்துகிறார்கள். நான் இந்த விசயத்தில் ஒருவாறு
சம்பந்தமுடையவனாதலால் இவர்களைச் சமாதானம் செய்ய இயலவில்லை.
சந்நிதானத்தில் ஒரு வார்த்தை கட்டளையிட வேண்டும்” என்று
கேட்டுக்கொண்டார். உடனே தேசிகர் எங்களை மாத்திரம் அழைத்துவரச்
செய்து, தக்க நியாயங்களை எடுத்துக்காட்டி, “நம்மிடம் வந்திருக்கும்
அவ்விருவர்களிடமும் விரோதம் பாராட்டுவது அழகன்று” என்று சொன்னார்.
அது முதல் நாங்கள் அவர்கள் பால் இருந்த கோபம் நீங்கி அன்போடு
பழகலானோம்.

திருச்சிற்றம்பலக் கோவையார்

அவ்விருவர்களுள் ஒருவராகிய மருதபண்டாரமென்பவருக்கும் எனக்கும்
ஆசிரியர் திருச்சிற்றம்பலக் கோவையார் பாடம் சொல்லி வந்தார்
. நாங்கள்
அதைக் கேட்பதோடு தனியே இருந்து சிந்திப்பதும் உண்டு. ஒருநாள் மடத்து
முகப்பில் தம்பிரான்கள் சிலரும் காரியத்தர்கள் சிலரும் கூடியிருந்தார்கள்.
அவர்களிற் சிலர் என்னை நோக்கிக் கோவையாரிலிருந்து சில செய்யுட்களைச்
சொல்லிப் பொருளும் சொல்ல வேண்டுமென்று விரும்பினர். நான் பைரவி
இராகத்தை ஆலாபனம் செய்து சில செய்யுட்களைச் சொல்லி விரிவாகப்
பொருளும் உரைத்தேன்
. யாவரும் திருப்தியுற்றார்கள்.

அப்பொழுது அங்கே கேட்டுக் கொண்டிருந்த பூசை வைத்தியலிங்கத்
தம்பிரானென்னும் பெரியார், “கோவையார் புத்தகம் உங்களிடம் இருக்கிறதா?”
என்றார். “இல்லை” என்றேன். உடனே அவர் எழுந்து தம்முடைய அறைக்குச்
சென்று அங்கே வெகு சாக்கிரதையாக வைத்திருந்த திருவாசகமும்
கோவையாரும் சேர்ந்த பழைய அச்சுப் பிரதி ஒன்றைக் கொணர்ந்து
கொடுத்தார். “இப்படி இலாபம் கிடைக்குமானால் தினந்தோறும் நான் இவ்வாறு
உபந்நியாசம் செய்வேனே” என்று சொல்லி அதை வாங்கிக் கொண்டு படித்து
வரலானேன்.

இடையிடையே ஆசிரியர் திருப்பெருந்துறைப் புராணச் செய்யுட்களை
இயற்றி வந்தார்.
குமாரரது கலியாணத்தில் ஏற்பட்ட செலவில் அவருக்குக்
கடன் இருந்தது. அதை நீக்குவதற்கு வழி தெரியவில்லை. அத்துயரமும், பாடம்
சொல்லும் வேலையும் சேர்ந்தமையால் இயல்பாக உள்ள உத்சாகத்தோடு
புராணத்தை இயற்ற முடியவில்லை; அது மெல்ல நடந்து வந்தது.

(தொடரும்)