தொல்காப்பியமும் பாணினியமும் – 8 : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை-இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-தொடர்ச்சி)
தொல்காப்பியமும் பாணினியமும்
8
பழந்தமிழர் நாகரிகத்தைப் பேசும் நூல்
பழந்தமிழர் நாகரிகத்தைப்பற்றிப் பரக்கப் பேசும் நூல் தொல்காப்பியம். மக்கள் வையத்து வாழ வழிவகுத்துக் காட்டும் இலக்கிய நெறியினை எடுத்து இனிதியம்பும் ஒப்பற்ற தனிப் பெரும் நூல் இது. தமிழினத்தின் பரந்துபட்ட பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் தொல்பெரு நூலாகத் தொல்காப்பியத்தைச் கருதுவதில் யாதொரு தடையும் இல்லை. இந்நூலைத் தம் விழுமிய சொத்தாக எண்ணித் தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்.(புலவர் தி.வே. விசயலட்சுமி,தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள், அகரமுதல 24.07.2016)
தொல்காப்பியரைப் பின்பற்றிய யாசுகர்
தமிழுக்கே உரிய இடைச்சொல் உரிச்சொல்களை ஆராய்கின்ற முறைமை வடமொழி நூலாராம் யாசுகருடைய நிருத்தத்தில் காணப்படுகின்றதாம். ஆகவே யாசுகரைப் பின்பற்றித் தொல்காப்பியர் கூறியிருப்பர் என அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார் கருதுகிறார். (History of grammatical theories in Tamil : pages 198, 301) யாசுகருடைய காலம் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டமையின், அவ்வாறு கருதுதல் பொருந்தாது. யாசுகர் தொல்காப்பியரைப் பின்பற்றி நூல் செய்திருத்தல் கூடும் என்று கூறினால் மிக மிகப் பொருந்துவதாகும். ஆனால் சாத்திரியார் அவர்கள் வடமொழிப் பற்றின் காரணமாக இவ்வுண்மையை உணர்ந்திலர் போலும். வடமொழியாளர் பிறரால் பின்பற்றப்பட வேண்டியவர்களே யன்றிப் பிறரைப் பின்பற்ற மாட்டார்கள் என்ற துணிபு பல நூல்களையும் கற்றறிந்த சாத்திரியாரையும் விட்டிலை போலும். சாத்திரியார் நினைப்பது போல் ஆசிரியர் தொல்காப்பியர் அவ்வாறு வட மொழிப் பிராதி சாக்கியங்களையும், யாசுகருடைய நிருத்தத்தையும் பாணினியினுடைய இலக்கணத்தையும் பின்பற்றித் தம் நூலை அமைத்திருப்பின் வெளிப்படையாகக் குறிப்பிட்டுக் கூறியிருப்பர். அவ்வாறு கூறாததனால் சாத்திரியார் கருத்து ஆய்வு முறைக்குப் பொருத்தமற்றது என அறிதலே ஏற்புடைத்து, இந்திய மொழிகளின் தாயாம் தமிழ், ஆரியத்திற்கும் தாயாம் என்ற உண்மை அறிபப்படும் காலம் சேய்மையில் இன்று.
” சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்
முதுமொழி நீ அனாதியென மொழிவதும் வியப்பாமே “
என்ற பேராசியர் சுந்தரனார் கூற்றை உன்னுக. – பேரா.சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி : பக்கம் : 114
தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கண நூல் உருவாகவே வாய்ப்பில்லை
தொல்காப்பியர் காலத்திலோ அதற்கு முன்னோ சமற்கிருதத்தில் இலக்கண நூல் உருவாகவே வாய்ப்பில்லை. “ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துகளை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.)” என்கிறார் மறைமலை அடிகள்(தமிழின் தனிச்சிறப்பு) அத்தகையவர்கள் தமிழர்களுக்கு முன்னோடியாக இலக்கண நூல் படைத்தனர் என்பது நம்பும்படியாகவா உள்ளது? தமிழ் முதலிய பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை மொழி பெயர்த்து வைத்துக் கொண்டு தங்கள் நூல்களே முதன்மையானவை என்று பொய் கூறும் ஆரியத்தினர் இதிலும் அவ்வாறே பொய் கூறியுள்ளனர்.
“ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக் கொண்டது” என்கிறார் பேரா.சி.இலக்குவனார். “பிராமணர்கள், தமிழ் நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே தமிழர்கள் எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர். பிராமணர்கள் அப்போது அங்கு வழக்கத்திலிருந்த தமிழ் வரி வடிவெழுத்துகளோடு சமசுகிருத ஒலிகளை வெளியிடக் கூடிய சில வடிவெழுத்துகளையும் சேர்த்துத் தமிழ் வரி வடி வெழுத்துகளைத் திருத்தி அமைத்தனர்” என்று திரு. எல்லிசு கூறுவதை எடுத்துக்காட்டாகத் தருகிறார்(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 39). மேலும், தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர்தான் ஆரியர்கள் எழுத்து வடிவைத் திருத்தி அமைத்துக் கொண்டனர் என்றும் விளக்குகிறார்(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 44). எனவே, தொல்காப்பியக் காலத்திற்கு முன்னர் ஆரியர்க்கு எழுத்து வடிவே இல்லாத பொழுது ஐந்திரத்தைச் சமற்கிருத நூலாகச் சொல்வது முழுப்பொய் அன்றி வேறில்லை. அதுபோல் பாணினியத்தையோ வேறு நூலையோ தழுவித் தொல்காப்பியம ்எழுதப்பட்டதாகக் கூறுவதும் பொய்யிலும் புரட்டிலும் கை வந்தவர்கள் செயல்களாகும். (ஐந்திரம் தமிழ் நூலே! – இலக்குவனார் திருவள்ளுவன், தொல்காப்பிய விழா மலர், தொல்காப்பிய மன்றம், கனடா, 2023)
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply