(தமிழ்ச்சொல்லாக்கம்  106-110  தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

111. Room – சிற்றில்

அறை – அடி, சொல், சிற்றில் (Room), திரை, பாறை, மறை, மலையுச்சி.

நூல்   :           தமிழ் வித்தியார்த்தி விளக்கம் (1894) முதற் பாகம், பக், 2

நூலாசிரியர்         :           பு: த. செய்யப்ப முதலியார் (சென்னை சென்ட் மேரீசு காலேசு தமிழ்ப் பண்டிதர்) (தமிழ்நாட்டில் பயிற்சிமொழி தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்றவர்)

112. விசாலாட்சி – அழகிய கண்ணையுடையவள்

நூல்   :           தமிழ் வித்தியார்த்தி விளக்கம் (1894) முதற் பாகம், பக், 78

நூலாசிரியர்         :           பு. த. செய்யப்ப முதலியார் (சென்னை சென்ட் மேரீசு காலேசு தமிழ்ப் பண்டிதர்) (தமிழ்நாட்டில் பயிற்சிமொழி தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்றவர்)

113. Phaeton :           புரவி வண்டி (புரவி – குதிரை)

114. மோட்சம்    :           நல்வீடு

115. நிகேதனம் :           வீடு

நூல்   :           சிரீ பத்மநாப சுவாமி சந்திரகலாசைமாலை (1894) பக்கங்கள் : 7, 11, 16.

நூலாசிரியர்         :           அபிநவ காளமேகம் அநந்த கிருட்டிணையங்கார் (சிரீ வானமாமலை மடம், ஆசுதான வித்துவான்)

116. மருபூமி – பாலை நிலம்

அதனிடத்தில் (பிரமத்தினிடத்தில்) மருபூமியில் (பாலை நிலத்தில்) சலம், கிளிஞ்சலில் வெள்ளி, கட்டையிற் புருசன், படிகத்தில் வண்ணம் முதலியவைபோல் சிவப்பு, வெளுப்பு, கறுப்பு இந்தக் குணமயமானதும் ஏறக்குறைவன்றி ஒவ்வொன்றும் சமமாயிருக்கிற குணசுரூப மானதும் வாக்குக் கெட்டாததுமாகிய (என்றால், மித்தையானதுமாகிய) மூலப் பிரகிருதி யிருந்தது.

நூல்   :           மாயாவாத சண்ட மாருதம் (1895)பக்கம் – 137.

நூலாசிரியர்         :           ஓர் இந்து

117. பைண்டிங் – கட்டடம்

அநேக வருடங்களாய்ப் பாடசாலைகளிற் கற்கப்பட்டு வருகின்ற மகாலிங்க ஐயர் இலக்கணச் சுருக்கமானது, பலரால் பலவித மச்சிடப்பட்டு, எழுத்து சொன் முதலிய பிழைகளுடன் கூடி நிற்பதைக் கண்டு, தக்க பண்டிதர்களைக் கொண்டு பரிசோதித்து, நந்தேயபாசைகளின் அட்சரங்களிற்கு மிகவுஞ் சிறந்த எசு.பி. சி.கே. என்னும் யந்திர சாலையிற் பதிப்பித்ததுடன், ஒவோரியலின் கடையிலிலும் அவ்வவ் வியலையெட்டிய பரீட்சை வினாக்களுங் கூட்டியுளோம். குசிலிக்கடைப் பதிப்பிற்கும் இதற்கும் விலையில் வேற்றுமை சிறிதேயாயினும், காகிதம், அச்சு, திருத்தம், கட்டட முதலியவைகளில் மிகவும் சிறந்ததாயிருக்குமென் றறிவிக்க  நாடுகின்றோம்.

– இப்படிக்கு,

அரங்கநாத முதலியார் அண்ட் கம்பனி

சென்னை மே ௴ 1உ. 1-5-1896

நூல்   :           மழவை, மகாலிங்க ஐயர் இயற்றிய இலக்கணச் சுருக்கம்

(1861) பக்கம் – 1,

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்