(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 81 : தமிழைப் பழிக்க விடுவதோ!-தொடர்ச்சி)

          `அன்னையிற் சால அன்புளம் காட்டி

          என்புலம் ஓம்பி இலங்கிட அருளினை!         95

          நின்பணி அஃதேல் நேருதல் அன்றி

மறுமொழி கூற யானோ வல்லேன்?

மறையுமென் வாழ்வு வளர்தமிழ்ப் பணிக்கே

என்றுளம் கொண்டேன் என்பணிக் கஃதும்

          நன்றெனின் இன்னே நவிலுதி தாயே’ 100

          என்றலும், எழிலி யாப்பின் இயலும்

பாவும் வகையும் பாவின் இனமும்

யாவும் உணர்த்திக் காவியத் துறையில்

வல்லமை பயிற்றினள், நல்லவள் அதன்றலை    

          இசைத்துறைப் பாடலும் இயற்றிடச் செய்தனள்;  105

          கற்பனைத் திறனும் கவிதை வளமும்

பொற்புடன் அணிகலம் பொலிந்திடப் புனையும்

காவியத் தலைவிஎன் றிவளைக் கழறிடப்

பாவியல் வல்ல பாவை யாகினள்;      

          கற்றவர் மெச்சிடக் கவியரங் கேறினள்,       110

          குற்றமில் மீனவன் நற்றமிழ்ச் சுவடியின்

துணைகொடு தமிழிசைத் தொண்டுகள் ஆற்றினள்;

இணையிலை இவட்கென யாவரும் ஏத்திடப்

பட்டி மண்டபம் பாங்கறிந் தேறினள்; 

          எட்டிய திவள்புகழ் இருநிலம் அனைத்தும்;  115

          இவ்வணம் மொழிப்பணி இயற்றிப் பொதுநலச்

          செம்மனம் உடையாள் சிறந்தனள் பெரிதே.         117

—————————————————————

          நேருதல் – உடன்படல். இருநிலம் – பெருநிலம்.

+++++++

(தொடரும்)