(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26 தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம்

6. தாய்மொழிப் படலம்

  1. வாய்மொழி பொதிந்திடுசொன் மாலைபல வேய்ந்து
    தாய்மொழி வளர்த்திடு தமிழ்ப்புலவர் தம்மை
    ஆய்மொழி புனைந்தில கரியணை யிருத்திப்
    போய்மொழி பெறாதிலகு பொன்முடி புனைவார்.
  1. தேங்குபுகழ் தாங்கிய செழும்புலவர் கொள்ள
    ஓங்குமுகில் தோய்முக டுயர்ந்தமலை யேறி
    ஆங்கவர்கள் கண்டநில மானவை யனைத்தும்
    பாங்கொடு கொடுத்துயர் பசுந்தமிழ் வளர்த்தார்.
  1. என்றுமுயர் செந்தமி ழியற்புலவர் கொள்ளக்
    கன்றினொடு தூங்கிவரு கைப்பிடி புணர்ந்த
    வென்றுகொடு வந்தவெறி வேழமது தந்து
    நன்றியொடு தொன்றுவரு நற்றமிழ் வளர்த்தார்.
  1. மாணிழை புனைந்துமண வாமல ரணிந்தும்
    பாணரொடு கூடவரு பாடினியர் கொள்ளச்
    சேணமரு வுங்குதிரை தேரொடு கொடுத்துங்
    காணிய படிக்கவர் கலைத்தமிழ் வளர்த்தார்.

இராவண காவியம் – புலவர் குழந்தை

(தொடரும்)