இராமகிருட்டிணனின் ‘சொற்களின் புதிர்ப்பாதை’ 

எளிய கவித்துவமான படைப்பு – பாரதிபாலன்

1/3

மார்கழி 09, 2050  / 25.12.2019 அன்று இரசியப் பண்பாட்டு மையத்தில் எசு.இராமகிருட்டிணனின் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இராமகிருட்டிணனின் “சொற்களின் புதிர்ப்பாதை ” என்ற நூல் குறித்து முனைவர் பாரதிபாலன் ஆய்வுரை ஆற்றினார். இதன் எழுத்து வடிவம் வருமாறு

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் இலக்கியம் என்ற மாபெரும் கடலில் இறங்குகிறார்கள்,  நுழைகிறார்கள். இந்த இலக்கியத்துக்குள் நுழைவதற்கு எத்தனையோ வாயில்கள்  திறந்திருக்கின்றன. அவரவர் சூழலுக்கு ஏற்ப அவரவர் வாயில்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள்!

எசு. இராமகிருட்டிணன் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாயில் ‘இரசிய இலக்கியங்கள்’.

இளம் வயதில் தனக்கு ஏற்பட்ட இரசிய இலக்கியத்தின் தாக்கத்தால், ஆற்றுப்படுத்துதலால் உந்தப்பட்டு எழுத வந்தவர் எசு. இராமகிருட்டிணன்!

பின்னர்ப் பழந்தமிழ் இலக்கியம் தொட்டு தமிழில் இலக்கிய வளமைகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு தன் திசைகளை விரிவுபடுத்திக் கொண்டவர்.

இடையறாத வாசிப்பு, தொடர் சந்திப்புகள் முடிவுறாப் பயணங்கள் என்று கற்ற பாடங்களைப், பெற்ற பட்டறிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் விரிந்த மனம்! இதுவே எசு. இராமகிருட்டிணனின் இலக்கியத்தின் அடித்தளமாக அமைகிறது! இதனை இவர் மனம் விரும்பிச் செய்கிறது.

“செல்லும் இடமெல்லாம் எனக்கு நண்பர்கள் உண்டு; பேச்சும் எழுத்தும், ஊர் சுற்றுவதும் தான் என் வாழ்வு! என்பது அவரிகன் பிரகடனம்!

 “நான் வாசித்த எல்லாவற்றையும் சேர்ந்த ஒரு பகுதியே நான்”  என்பார் தியோடர் உரூசுவெலட்டு!  இதேபோன்று, , “இதுவரை நான் உண்ட உணவின் ஒரு பகுதியாக என் உடலும், என் வாசிப்பின் ஊடாக உருவான என் மனமும் சேர்ந்த வைதான் நான்”    என்று குறிப்பிடுகிறார் எசு.இராமகிருட்டிணன்!

ஆழ்ந்த வாசிபிப்பின் வழியாக அடையும் உன்னதம்!

 ஒரு புத்தகத்தை வாசிப்பதன் மூலமே நாம் பார்க்காத, புது உலகத்தைப் பார்க்க முடியும்! புத்தக வாசிப்பு என்பது நம்மை வேறொரு மனநிலைக்கு, வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது!

“இந்த உலகத்தில் நாம் இருக்கிறோம்! நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் உலகம் இருக்கிறது! அந்த உலகத்தைப் பார்க்கத்தான் தனிக் கண்கள் வேண்டும்! ”

அப்படியான தனிக் கண்கொண்டு பார்த்த பார்வை தான்  “சொற்களின் புதிர் பாதை”  என்ற இந்த நூல்! இந்தப் பாதை செல்லும் தொலைவு என்னவோ சிறிதுதான்! என்றாலும் அது தரும் அனுபவமும் சுகமும் விரிவானது

எசு. இராமகிருட்டிணன் படைப்புகளுக்கு கிடைத்த வெளிச்சம் அவருடைய இலக்கிய உரைகளுக்கும் கிடைத்துள்ளது! இப்படி அமைவது அபூர்வம்! தமிழில் செயயகாந்தனுக்கு  அப்படி வாய்த்தது!

 “சொற்களின் புதிர் பாதை”  என்ற இந்த நூல்! 26 கட்டுரைகளின் தொகுப்பு நூல்!  புற வடிவ நிலையில் வேண்டுமானால் இது கட்டுரையாக இருக்கலாம், ஆனால் அது ஏற்படுத்தும் மன உணர்வு  என்பது ஒரு கவிதையைப் போல, ஒரு சிறுகதையைப் போல, ஒரு புதினத்தைப் போல வாசிப்பு இன்பத்தைத் தந்து விடுகிறது. நம் மனநிலையை வெவ்வேறு நிலைக்கு அப்படியே உயர்த்திச் சென்று விடுகிறது. 

இந்தக் கட்டுரைகள் வெறும் தரவுகளால் மட்டும்  எழுதப்பட்டவையல்ல மனத்தால் எழுதப்பட்டவை.  காலத்தின் குரலாக ஒலிக்கிறது!

“இவர் துல்லியமாகக் கவிதைக் கண்கொண்டு பார்க்கிறார்”  என்று இரசிய எழுத்தாளர் இவான் துர்கனேவு பற்றி ஓர் உரையில் எசு. இராமகிருட்டிணன் குறிப்பிடுகிறார்.

      அப்படியான கவிதைக்  கண்பார்வையில் தான் இந்தச் சொற்களின் பாதை விரிகிறது. பல முகங்களையும், பல புதிய திசைகளையும் இந்தப்  பாதை நமக்குக் காட்டுகிறது !. இந்தப் பாதையில் நடக்கின்ற சுகமும், நடக்கின்ற போது நாம் காண்கின்ற காட்சிகளும் அந்தக் காட்சிகள் வழியாக விரிகின்ற உலகங்களும்  நமக்கு தனி அனுபவமாக வாய்த்து விடுகிறது.

சிறுகதைகள் குறித்தும் கவிதைகள் குறித்தும் குறிப்பாக நவீனக் கவிதைகளின் நுட்பங்கள் குறித்தும் குறும்புதினங்கள் குறித்தும் பல்வேறு கட்டுரைகள் குறித்தும் சில நிகழ்வுகளைக் குறித்தும் அவர் சந்தித்த எழுத்தாளர்களைப்பற்றியும் அறிஞர்களைப் பற்றியும் வாசித்த,  பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், இத்துடன் தன் தனிப்பட்டறிவுநலன்கள் குறித்த மனப் பதிவாகவும் இந்த நூல் அமைகிறது!  இந்திய எழுத்தாளர்களைப்பற்றி குறிப்பாக,  மலையாள படைப்பாளிகள் குறித்து மிக நுட்பமாக,  அவர்களுடைய தனித்தன்மைகளைத் தனித்த பண்புகளை அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தைக் குறித்தும், ஒரு படைப்பாளனுக்கு கிடைத்திருக்கும் பரந்த வெளிகளைக் குறித்தும் பரவசத்தோடு பேசுகிறார்.

இதேபோன்று அவர் மேற்கொண்ட பயணங்கள் மூலம் கற்றவைகளையும் ஆழ்ந்த வாசிப்பின் மூலம் பெற்றவைகளையும் நமக்குத் தருகிறார்.   மிக சுருக்கமாகச் சொல்வதென்றால்,  “சொற்களின் புதிர் பாதை“  என்ற  இந்த நூல் ஓர் எளிமையான நேர்மையான உரையாடல்!.

இந்த உரையாடல் நமக்குப் பல புதிய சொற்களைத் தருகிறது. அந்தச் சொற்கள் பல புதிய பொருள்களைத் தருகிறது. அந்தப் பொருள்கள் வாழ்வனுபவத்தால் பெற்றவை!

இங்கே நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.எசு. இராமகிருட்டிணனின் மொழி அலாதியானது! தனித்துவம் மிக்கது! இந்தக் கட்டுரையில் அவர் வகைப்படுத்தி, வரிசைக்கிரமமாக அமைக்கப்பட்ட வாக்கிய அடுக்குகளில் வீசும் ஒளியும், மனத்தை ஈர்க்கும் மொழிகட்கும் முதன்மையானதாகிறது. அந்த மொழி தரும் சுவை தான் இந்த நூலின் சிறப்பு! ஒருவிதமான வசீகர மொழி!

(தொடரும்)