(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 05. நெஞ்சே எழு! – தொடர்ச்சி)

ஆங்கு வீசும் தென்றற்காற்று மலர் பறிக்க வல்லானொருவன், மலரைப் பறிக்கத் தன் கைக் கோலால் கிளைகளை அலைக்கழித்தல்போல், மராமரத்துக் கிளைகளை, அலைக்கழித்து, அம்மலர்களை வழிச் செல்லும் மக்களின் தலை முடியில் சென்று உதிருமாறு செய்யும்.

நெஞ்சே! காற்றின் செயல் கொடுமை வாய்ந்ததாகத் தோன்றினும் அக்காற்று இல்லையேல் அம்மலர்கள் மலர்ந்தும் பயனிழந்து போயிருக்கும். அக்காற்று வீசியதால் அதன் மணம் காற்றில் பரவிப் பயன் பெற்றது. அம்மலரும் மக்கள் முடியில் படிந்து மாண்புற்றது அந்நிகழ்ச்சி, நம் பிரிவு முயற்சி நம் காதலிக்குக் கொடுமை புரிவதாகாது. மாறாக வாழ்வுப் பயனை அவள் அடையுமாறு பண்ணி, பிறரையும் வாழ்விக்கப் பண்ணும் என்ற உண்மையை. உணர்த்தாதோ?

“நெஞ்சே! மராமரக் காட்சியைக் கடந்து சென்றால் காட்டுப் பன்றியைச் செந்நாய் தாக்கும் காட்சியைக் காண்பை; செந்நாய் வாளாவந்து பன்றியைத் தாக்காது. மலைக்குகையில் குட்டி ஈன்ற தன் காதற்பிணவு பசியால் வருந்துவதைப் பொறாதே, அது கேழலைத் தாக்கும்; அந்நிகழ்ச்சி மனைவி மகிழுமாறு மாநிதி ஈட்டி வருவது கணவன் கடமையாம்: அக்கடனாற்றச் செல்வான், இடைவழியில்

நெஞ்சு வருந்தும் கொடுமை புரியினும் கேடின்றாம் என்ற உண்மையை உணர்த்தாதோ?

“நெஞ்சே! பன்றி செந்நாய் போராட்டத்தையொட்டி நிகழும் பிறிதொரு நிகழ்ச்சி மற்றோர் உண்மையை உணர்த்துவதாய் இருக்கும். கேழலோடு தொடர்ந்து வரும் பெண் பன்றி தன் காதலனைச் செந்நாய் தாக்கக் கண்டதும், தன் காதலனுக்குத் துணையாய் நின்று நாயோடு பொரிட நினையாது, அவை போராடும் அவ்விடத்தில் நிற்கவும் அஞ்சி, கண்மண் தெரியாமல் கடுவேகமாக ஓடிவிடும். அவ்வாறு ஒடுங்கால் எதிரே ஈச்சமரம் நிற்பதையும் அறியாது, அதன்மீது மோதிக் கொள்ளும். பன்றியால் மோதுண்ட அவ்வீச்சமரத்துக் காய்கள் கனிந்து உதிர்வதற்கு மாறாகச் செங்காய்களாகவே உதிர்ந்து மண்ணில் வீழ்ந்து பாழாம்.

இக்காட்சியும் நிகழ்ச்சியும் கணவன் கடமை மேற்கொண்டு உழைக்கும்போது, அவன் மனைவி அவனுடன் இருந்து உறுதுணை புரிவதை விடுத்து அவ்வினை கண்டு வெருண்டு அகன்றால், அதனால் அவளும் வாழ்விழப்பள்: தன்னை அடுத்து வாழ்வாரையும் வாழ்விழக்கப் பண்ணுவள் என்ற உண்மையை உணர்த்தாவோ?

“நெஞ்சே! அவ்விடத்தையும் கடந்து சென்றால் காட்டு வழியைக் கடந்து செல்வோரின் நீர் வேட்கையை நீக்கி உதவும் உயர்ந்த உள்ளம் கொண்ட சிலர், ஆங்குக் கிணறு ஒன்று எடுக்கத் தொடங்கி, ஓரளவு எடுத்ததும், அதில் நீர் ஊறாமை கண்டு இதில் நீர் ஊறாது என எண்ணி, அதை அந்நிலையிலேயே விட்டுச் சென்ற ஆழ்ந்த பள்ளம் ஒன்று தோன்றும்.

அவ்வழியாக வரும் யானைக்கூட்டம், அதைக் கண்ணுற்றதும் அது தம் வெண்கோடுகள்பால் விருப்பம் கொண்டு தம்மை வேட்டையாடிப் பிடிக்க எண்ணிய வேடர், வெட்டி வைத்த பள்ளமாம் எனப்பிறழ உணர்ந்து, அதைத் தூர்த்துப் பாழ் செய்யும், இக்காட்சி நாட்டிற்கு நற்பயன் அளிக்கும் கருத்தோடு தொடங்கும் வினை விரைந்து பயனளிக்காமை கண்டு, இடையே கைவிட்டு விடுதல் கூடாது. வெற்றி காணும் வரை தொழிலாற்றுதல் வேண்டும். இடையே விடின், அது காணும் பிறமக்கள், அவ்வினை தம்மை வாழ்விழக்கத் தொடங்கப் பெற்ற வினையாம் எனப் பிறழ உணர்ந்து அதை அழிக்க முனைவர். அதைப் போலவே நல்லெண்ணம் கொண்டு நான் தொடங்கிய இவ்வினை, நம் காதலிக்குக் கேடு சூழத் தொடங்கியது என்ற பிழைபட்ட உணர்வால் நீ தடை செய்ய, இடையிலேயே நின்று விடுமாயின் நீள் பழியாம் என்பதை உணர்த்துவதாகாதோ? –

“நெஞ்சே! என்னோடு வந்து, அக்காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் நேரில் கண்டால், உன் அறிவும் திருந்தும்; ஆகவே, எழுந்து என்னைத் தொடர்ந்து விரைந்து வருக” எனக்கூறி மேலே செல்லத் தொடங்கினான்.

“மனையிள நொச்சி மெளவல் வான்முகைத்
துணைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல்
அவ்வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ்மென் கூந்தல், தடமென் பனைத்தோள்,

5. மடந்தை மாணலம் பசப்பச் சேய்நாட்டுச்
செல்லல்; என்று யான் சொல்லவும், ஒல்லாய்,
வினை நயந்து அமைந்தனை; ஆயின், மனைநகப்
பல்வேறு வெறுக்கை தருகம்; வல்லே
எழுஇனி வாழி என் நெஞ்சே! புரியிணர்.

10. மெல்ல விழ அஞ்சினை புலம்ப, வல்லோன்
கோடு அறை கொம்பின், வீ உகத்தீண்டி,
மரா அம் அலைத்த மணவாய்த் தென்றல்
சுரம் செல் மள்ளர் சுரீயல் தூற்றும்
என்றூழ் நின்ற புன்தலை வைப்பில்

15. பருந்து இளைப்படூஉம் பாறுதலை ஒமை
இருங்கல் விடரகத்து ஈன்று இளைப்பட்ட
மெல புனிற்று அம்பினவு பசித்தெனப், பைங்கண்
செந்நாய் ஏற்றை, கேழல் தாக்க,
இரியல் பிணவல் தீண்டலின், பரீஇச்

20. செங்காய் உதிர்ந்த பைங்குலை ஈந்தின்
பரல்மண் சுவலமுரண் நிலம் உடைத்த
வல்வாய்க் கணிச்சிக் கூழ் ஆர் கூவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்
வெண்கோடு நயந்த அன்புஇல் கானவர்

25. இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழிசெத்து
இருங்களிற்று இனதிரை தூர்க்கும்
பெருங்கல் அத்தம் விவங்கிய காடே.”

தினை : பாலை

துறை : பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், இடைவழியில் மீளக் கருதிய நெஞ்சைக் கழறியது.

புலவர் : காவன் முல்லைப் பூதனார்.

1. மெளவல்-முல்லை; வான்-வெள்ளிய; முகை-
அரும்பு.

2. மாவீழ்-வண்டுகள் விரும்பும்;

3. அவ்-அழகிய, கைஇ-பின்னப்பெற்று

6. ஒல்லாய்-கேட்டு அதன்படி நடவாமல்.

7. ஆயின்-ஆராய்ந்தால்: மனைநக-மனைவி மகிழ்

9. இணர்-பூங்கொத்து

10. சினை-கிளை. புலம்ப-வருந்த; வல்லோன்-மலர்
பறிப்போன்

11. கோடு-கிளையை: அறை-அடிக்கும்: கொம்பின்—
கைக்கோல்போல்: வீஉக—மலர் உதிர: தீட்டி—
தாக்கி

13. மள்ளர்-மக்கள்; கரியல்-கூந்தலில்

14. என்றூழ்-வெப்பம்; புன்தலை-இழிந்த இடங்
களை உடைய; வைப்பீன்-ஊர்களை உடைய

15. இளைப்படும்-ஈன்று கிடக்கும்; பாறுதலை
விரிந்த உச்சி

18. கேழல்-ஆண்பன்றி

19. இரியல்-அஞ்சி ஓடும்; பிணவல்-பெண் பன்றி:
பரீஇ-அறுபட்டு

21. பரல்-விதைகளோடு கூடிய; சுவல-மேட்டு நில
மாகிய; முரண் நிலம்-வலிய நிலம்

22. வல்வாய்-கூரிய வாய்: கணிச்சி-குந்தாலி; கூழ்
ஆர்-கூழ் உணவு உண்ணும்; கூவலர்-கிணறு வெட்டுவார்

23. உவலை— தழை மூடிக் கிடக்கும்

24. நயந்த-விரும்பிய

25. இகழ்ந்து-தீங்கற்று என நினைந்து இகழ்ச்சியாக;
இயவின்-வழியிடையே; செத்து-கருதி

(தொடரும்)