தலைப்பு-சாதிக்கட்சிகள் இல்லாமையே நன்று- சி.இலக்குவனார் : thalaippu_chaadhikatchigal_thonraamaliruthalnandru_S.Ilkakkuvanar

சாதிக் கட்சிகள் தோன்றாமலிருத்தலே சாலவும் நன்று!

  இந்நிலையில் சாதிகளின் பெயரால் கட்சிகளை உருவாக்கித் தேர்தல்களில் போட்டியிட முனைவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்சி என்று அமைத்துக் கொண்டு தேர்தலில் ஈடுபடுவாரேல் தேர்தல் களம் போர்க்களமாக மாறி நாட்டின் அமைதியும் மக்களின் நல்லுறவும் கெட்டுவிடும் என்பதில் எட்டுணை ஐயமின்று. ஆதலின் சாதிகளின் பெயரால் கட்சிகள் அமைக்க வேண்டாமென அன்புடன் வேணடுகின்றோம். கொள்கைகள் அடிப்படையில் கட்சிகள் அமைவதுதான் மக்களாட்சி முறைக்கு ஏற்றதாகும். நாட்டுக்கு நலம் பயக்கும் கொள்கைகளை மக்களிடையே பரப்பவும் அக்கொள்கை வழி மக்களை நடத்திச் செல்லவும் தம்மை ஆளாக்கிக்கொண்ட தொண்டர் கூட்டமே அரசியல் கட்சியாகும். பதவிகளில் அமர்வதற்காகச் சாதிகளின் பெயரால் அமையும் கூட்டம் தேர்தல் காலத்தில் தோன்றுவதும் பின்னர் மறைவதும் இயல்பாய்க் கொண்டுள்ளமையின் மக்களாட்சி முறைக்கு ஒத்த கட்சியாகாது. ஆகவே சாதிக் கட்சிகள் தோன்றாமலிருத்தலே சாலவும் நன்று.

பேராசிரியர் முனைவர்  சி.இலக்குவனார் :

குறள்நெறி(இதழ்2 மலர்14): 01.08.1965