தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி)
சங்கப்புலவர்கள் மரபில் அகவற்பாக்கள் பலவற்றை எழுதியுள்ள பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பாவகைகளிலும் பாக்கள் யாத்துச் செந்தமிழ்வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பை அளித்துள்ளார். விருத்தம், கண்ணி, கீர்த்தனை வடிவங்களில் இசைப்பாடல்களையும் எழுதித் தமிழிசை இயக்கத்திற்கு எழுச்சியும் ஏற்படுத்தியுள்ளார். தமிழர் தலைவர்கள் பற்றியும், தமிழறிஞர்கள் பற்றியும் பாடல்கள் எழுதியுள்ளதுடன், வாழ்த்துப் பாடல்கள், இரங்கற்பாக்கள், பொங்கல் வாழ்த்துக் கவிதைகள், திருமணநாள் வாழ்த்துகள், படையல் கவிதைகள் எனப் பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் கவிதைப் படைப்புகளைப் பிரிக்க இயலும். தமிழினத் தந்தை பெரியார் ஈ.வெ.இரா., தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், வள்ளல் அழகப்பனார், மனிதருள் மாணிக்கம் நேரு, பேரறிஞர் அண்ணா, கருமவீரர் காமராசர், நாவலர் இரா.நெடுஞ்செழியன், பொன்மனச் செம்மல் ம.கோ.இராமச்சந்திரன், அறிவியல் அறிஞர் கோ.து.நாயுடு, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், கல்வி வள்ளல் கருமுத்து தியாகராசர், இந்தியை எதிர்த்துத் தீக்குளித்த செந்தமிழ் மறவன் சின்னச்சாமி, முத்தமிழறிஞர் கலைஞர் என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஒருசாலை மாணாக்கர் கிருட்டிணமூர்த்தி போன்ற நண்பர்களுக்கும் பிற தமிழன்பர்களுக்கும் பாடிய திருமண வாழ்த்து, பணித் தோழர் அ.கி.பரந்தாமனார் முதலிய தமிழறிஞர்களுக்குப் படைத்தளித்த பிறந்தநாள் பெருமங்கல வாழ்த்து என இப்பட்டியல் மேலும் நீளும்.
பாடல்கள் பிறந்த சூழல் எதுவாயினும், அனைத்தும் உயிரோட்டம் உள்ளவையாகவும் உயர்ந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவும் உணர்ச்சி மிக்கவையாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டவையாகவும் அமைந்தமையையும் “தமிழ்க் கவிதை வரலாற்றில் பேராசிரியர் இலக்குவனாருக்குச் சிறப்பான ஓர் இடம் உண்டு” என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர். பேராசிரியர் பின்பற்றிய கவிதை மரபும் கையாண்ட உவமை அணிகளும் உருவகச் சிறப்புகளும் எளிய நடையும் புதிய சொல்லாக்கங்களும் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றின் தாக்கங்களும் மரபு வழியிலான புதுக்கவிதைத் தோற்றத்திற்கு வழிகாட்டிய சூழலும் அறிஞர்களால் சிறப்பிக்கப் பெற்று, செம்மொழித்தமிழுக்கான பங்களிப்பில் அவரது முதன்மைச் சிறப்பை உணர்த்துகின்றன.
பேராசிரியர் அவர்களின் கவிதைப் பணிகளைக் குறித்துப் பேராசிரியர் முனைவர் ம. இராமச்சந்திரன் என்பார், “இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு” என்னும் தலைப்பில் ஆய்வேட்டை அளித்து ஆய்வியல் நிறைஞர்; பட்டம் பெற்றுள்ளார். இவ்வாய்வேட்டில் இவை குறித்து அவர் விரிவாக விளக்கியுள்ளார்.
“எழுத்து என்பது இலக்குவனாரைப் பொருத்துக் கவிதையாகும். எந்த ஒரு செய்தியையும் கேள்விப்பட்ட மாத்திரத்தில் அகவல் நடையில் எழுதிவிடுவார்” என்கிறார் அவரது மாணாக்கரான கவியரசு நா.காமராசன். “இலக்குவனார் உரைநடைகூடச் செய்யுள் நடைபோலத் திட்ப நுட்பம் செறிந்து விளங்குகிறது. ஓசை நயம் பொருந்திப் படிப்போர்க்குக் கழிபேருவகை ஊட்டும் தன்மை உடையதாய் விளங்குகிறது. . . . . . .அகவல் ஓசை பொருந்தி அமைந்துள்ளது. செய்யுள் நூல் போல ச் செவிக்கு இன்பம் பயக்கின்றது.…” என்கிறார் ஆய்வாளர் முனைவர் ம. இராமச்சந்திரன். இவ்வாறு பேராசிரியரின் உரைநடையே செய்யுள் இன்பம் போல் சிறந்துள்ளது எனில் அவரின் பாடல்கள் சிறப்பு பெற்றுள்ளமையில் வியப்பு எதுவும் இல்லை எனலாம்.
செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் சிறந்த கவித் திறனையும் தமிழ்ப் புலமையையும் தமிழ்ப் பற்றையும் சான்றாண்மையையும் தமிழுக்காக வாழும் தகைiமையையும் வறியவர்க்கு உதவும் வள்ளல் தன்மையையும் அறவுணர்வையும் பகுத்தறிவு நோக்கத்தையும் தீமைகளை எதிர்க்கும் துணிவையும் உண்மையைக் காப்பதற்கான போராட்ட உணர்வையும் குறள் நெறி வாழ்வையும் அவரது கவிதைகள் பற்றிய ஆய்வின் மூலம் பேராசிரியர் ம.இராமச்சந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply