(ஆனி 27, 2046 / சூலை 12, 2015 தொடர்ச்சி)

thamizh_and_malayalam_a

தாய்த்தமிழும் மலையாளமும் 3

  ஒருவேளை மலையாள மொழியின் தோற்றக் காலத்தில்தான் அவ்வாறு தமிழாக இருந்தது; இப்பொழுது அவ்வாறில்லை எனக் கருதினால் அதுவும் முற்றிலும் தவறாகும். சான்றிற்கு இன்றைய நிலைக்குச் சிலவற்றைப் பார்ப்போம். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் வகுப்பு மலையாளப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று வருமாறு:

பாவ பாவ பாவ நோக்கு

                புதிய புதிய பாவ நோக்கு

கய்ய வீசும் பாவ நோக்கு

                கண்ணிமய்க்கும் பாவ நோக்கு

தலயாட்டும் பாவ நோக்கு

                தாளமிடும் பாவ நோக்கு

எனிக்குக் கிட்டிய பாவ போல

                வேறெயில்ல பாவகள்

பாவை(பொம்மை) பாவ என்றும் எனக்கு என்பது எனிக்கு என்றும் வேறில்லை என்பது வேறெயில்ல என்றும் பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளன. முதலில் கூறியது போல், கையை, இமைக்கும் என்பன முறையே பழந்தமிழ் வழக்கின் அடிப்படையில் கய்ய, இமய்க்கும் என இடம் பெற்றுள்ளன.

ஒரு சிறுவர் கதையைப்பார்ப்போம்:

சங்காத்திமார் களிக்கான்போயி. தவள மாத்ரம் வெள்ளத்தில் சாடி. மற்றுள்ளவ ரேயும் விளிச்சு. ஒரோருத்தரும் ஒரோ வஃச்து வீதம் கொண்டு வண்ணுசெறிய தோணி உண்டாக்கி. தோணியில் சந்தோஃசத்தோடெ போயி.

இவற்றுள் (தமிழ் நாட்டிலும் வழக்கத்திற்கு வந்து விட்ட) வஃச்து, சந்தோஃசம் என்பன நீங்கலாகப் பிற அனைத்தும் தமிழ்ச் சொற்களே. உன் உறவோ நட்போ வேண்டா எனச் சொல்ல உன் சங்காத்தமே வேண்டா எனச் சொல்வது இன்றைக்கும் தமிழ்நாட்டில் உள்ள வழக்கே. அதனடிப்படையில் பிறந்ததே சங்காத்திமார்(நண்பர்கள்) என்பதாகும்.சங்கம் என்னும் சொல்லின் அடிப்படையில் இச்சொல் பிறந்துள்ளது.

முதல் வகுப்புப் பாடம் என்பதால் இவ்வாறு உள்ளது எனக் கருத வேண்டா. இலக்கியப் பாடல் ஒன்றைப் பார்ப்போம். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தாலாட்டுப் பாடல்வரிகள் சிலவற்றின் மொழி பெயர்ப்பு வருமாறு:

  1. பூங்காவின் மலரே ஃசுவர்ணத்தின் உருவமே

                   காலத்தெ சூரியன்டெ வெண்கல் பிம்பமே

 

  1. பூங்கொடி கண்டேன் மனம்குளிர்ந்து நிந்நேன்

 

  1. புதியதொரு லோகம் சமய்க்காம் நீசமாய்

                 போரிடும் லோகத்தெ வேரொடெ வீழ்த்தாம்

 

ஃசுவர்ணம், நீசம் என்னும் இரு சொற்கள் தவிர அனைத்தும் தனித் தமிழ்ச் சொற்களே. பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளன.

இலக்கியப் பாடல் என்றில்லாமல் மக்கள் வழக்கில் இடம் பெறும்திரைப்பாடல் வரிகளைச் சான்றுக்குப் பார்ப்போம்:

                காற்று வந்நு காற்று வந்நு கள்ளனெப் போலெ

                காட்டு முல்லக்கி ஒரு உம்ம கொடுத்து காமுகனெப் போலெ

‘உம்ம’ என்பது இன்றும் முத்தத்திற்கு மக்கள் பயன்படுத்தும் பேச்சு வழக்குதானே! சமற்கிருதக் கலப்பில்லாத இவ் வரிகள் தமிழாகத்தானே விளங்குகின்றன.

 ‘அகராதி  என்பது ஒரு மொழியின் சொல்வளத்தைக் காட்டும். அந்த வகையில் பள்ளி மாணாக்கருக்கான ஆங்கில-மலையாள அகராதி ஒன்றில் உள்ள சொற்களில் ஏ வரிசையில் தொடக்கத்திலுள்ள ஒரு பகுதிச் சொற்களை, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பதம் போல் பார்ப்போம்.

Aback      –   பிந்நோக்காம், புறக்கில்

Abase      –   தரம் தாழ்த்துக

Abate       –   குறய்க்க, சரிப்பிக்குக

Abbreviate   –   சுருக்குக

Abdomen    –   உதரம், வயிறு

Abeyance    –   சுவல்பக் காலம் நிறுத்தி வைக்கல்(சொற்பம், சொல்பம்

                                                        ஆகி, சுவல்பம் ஆனது.)

Aboard      –   கப்பலில்

Abode      –   இரிப்பிடம்

Abolish –   இல்லாதாக்குக

Aboriginal    –   ஆதிவாசி

Abound     –   நிறயுக

Above      –   மீதெ, உயரத்தில்

Abuse           –   நிந்திக்குக

Account       –       கணக்கு, கணக்காகுக

Ache       – வேதன

Add        –   கூட்டுக

Adjourn     –   மாற்றிவெக்குக

Affect       –       பாதிக்குக

Afraid       –   பயமுள்ள

Against     –       எதிராயி

Ago        –   பண்டு

Agree       –   சம்மதிக்குக

Agreement         –       உடம்படி

Aid        –   துண

Air         –   வாயு

இவை யாவும் தமிழ்ச் சொற்களாக அல்லது தமிழ்ச் சொற்களின் பேச்சு வடிவாக உள்ளன. எனவே, மலையாளம் என்பது நம் முன்னோர் சோம்பலினாலும் பிறவற்றாலும் திருத்தமற்றுப் பேசியதும் அவ்வாறு பேசியதை   அறியாமையாலும் மொழிப்பகைவர் வஞ்சகத்திற்கு இரையாகியும் எழுத்து வடிவில் கொணர்ந்ததும் பின்னர் அதற்கு எனத் தனி வரிவடிம் அமைத்துக் கொண்டதும் ஆகும். எனவே, மலையாள வரிவடிவம் வேறாக இருந்தாலும் ஆரியச் சொற்கள் நீங்கலான சொற்கள் யாவும் தமிழுக்குரியனவே.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்

ilakkuvanar_thiruvalluvan+5