(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14 தொடர்ச்சி)

தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 15


பெண்ணை உயர்த்து!

 தன்மதிப்பும், தெய்வ உணர்வும் ஆண்களுக்கு மட்டுமே எனச் சிலர் அறியாமையால் எண்ணலாம். ‘தையல் சொல் கேளேல்’ என ஔவை சொன்ன சூழலைப் புரிந்து கொள்ளாமல் பெண்களை இழிவு செய்யக்கூடாது என்பதே பாரதியாரின் எண்ணம். பெண்களை ஆணுக்கு இணையாய் நாடெங்கும் பரப்பியதே அவரது புரட்சிப் பாக்கள்.

        “தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ?

தாய் பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை

        வாய்க்கும் பெண் மகவெல்லாம்  பெண்ணேயன்றோ?

(பாரதியார் கவிதைகள் : பக்கம் 268 | சுயசரிதை)

எனப் பெண்களையும் தெய்வமாகப் போற்றுகிறார்.

“பெண் விடுதலை வேண்டும்” (பாரதியார் கவிதைகள் : பக்கம் 182 | உறுதி வேண்டும்)

        “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி

                பேணி வளர்த்திடும் ஈசன்

        மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல

                மாத ரறிவைக் கெடுத்தார்

        கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்

                காட்சி கெடுத்திட லாமோ?”

பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்

                பேதைமை யற்றிடுங் காணீர்” (பாரதியார் கவிதைகள் : பக்கம் 205 | முரசு)

“தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே” (பாரதியார் கவிதைகள் : பக்கம் 208 | புதுமைப் பெண்)

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

        அறிவிலோங்கியிவ் வையம் தழைக்குமாம்”

(பாரதியார் கவிதைகள்: பக்கம் 208 | புதுமைப் பெண்)

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா

        பெண்மை வெல்கவென்று கூத்திடு வோமடா

… … … … … … … … …

துன்பம் தீர்வது பெண்மையி னாலடா

… … … … … … … … …

உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!

(பாரதியார் கவிதைகள் :பக்கம் 210 | பெண்மை)

எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கே பெண்

        இளைப்பில்லை காணென்று கும்மியடி”

(பாரதியார் கவிதைகள் : பக்கம் 211 | பெண்கள் விடுதலைக் கும்மி)

பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லையென்றால்

        பின்னிந்த உலகினிலே வாழ்க்கை இல்லை”

 (பாரதியார் கவிதைகள் : பக்கம் 268 | சுயசரிதை)

எனப் பற்பல பாடல்களில் பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்துப் பெண்களை உயர்த்தும் பாரதியார், “தையலை உயர்வு செய்” (ஆ.சூ 50) எனக் கட்டளையிடுகிறார்.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

இலக்குவனார் திருவள்ளுவன்