தலைப்பு-என்றுதமிழ்? - thalaippu_endruthamizh.

தலைப்பு-என்றுதமிழ்02 - thalaippu_endruthamizh02

இந்தியினை எதிர்க்கின்றோம் அறுபதாண்டாய் என்கின்றீர் ஏற்றமென்ன தமிழுக்குச் செய்துவிட்டீர்?
வந்த இந்தி ஆங்கிலத்தால் சொந்தத் தமிழ் தானழியும்
வடுநீக்க வழியென்ன கண்டு விட்டீர்?

எந்த மொழி வளமளிக்கும் என்றெண்ணிப் படிக்கின்றீர்
எம்தமிழை அதனாலே அழித்து விட்டீர்
செந்தமிழைக் காப்பதற்குப் பிறமொழிகள் பிணிநீக்கிச்
செந்தமிழில் கல்வியினைக் கற்கவேண்டும்

எதிர்க்கின்றோம் இந்தியினை என்றுசொன்னால் இந்நாள்மட்டும்
எம்தமிழை மீட்பதற்கு என்ன செய்தீர்?
எதிர்ப்பதொன்றே கொள்கையாக எண்ணாமல் இன்பத் தமிழ்
எம்நாட்டில் விளைவதற்கு வழியும் செய்வீர்!

கதிரொளியால் மறைந்தோடும் காலைப்பனி போலயிங்குக்
கனித்தமிழில் கற்றாலே கசப்பு மாறும்
கதிர்மணியை நிலமேற்கும் கசடான பதர்மொழிகள்
கன்னித் தமிழ் நிலத்தினிலே எருவாய் ஆகும்

இந்திமொழி படிப்பதனால் வேலைவாய்ப்பு நாமிருக்கும்
இடம்தேடி வருமென்று சொல்லு கின்றார்
இந்தியினைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள் வடநாட்டில்
இந்தியிலே கேட்கின்றார் நாளும் ‘பிச்சை’

செந்தமிழர் இந்தியாவில் செந்தமிழைக் காத்திடவே
முடியாது என்றுணர்ந்து எழுவ தென்று?
சிந்திப்பீர், மொழியழிந்தால் இனமழியும் நாடழியும்
சினந்தெழுந்து சீறுகின்ற வேங்கை யாகு!

தமிழ்நாட்டில் அயலினத்தார் இல்லாமல் தமிழ்நாடு
தமிழர்நா(டு) என்றாகும் நாளைக் காண்போம்
இமைக்கின்ற நேரத்தில் இனம் அழிக்கக் காத்திருக்கும்
இரண்டகன்கள்; இனப்பகைவர் உள்ளார் இங்கே.

உமிப்பதர்கள் உலகாண்ட தமிழினத்தை உருவற்றே
உருக்குலைக்கும் செயலொழிக்க ஒன்று சேர்வீர்
தமிழினமே! தன்மானம் இல்லாது போனதனால்
தர்ப்பைப்புல் தனைவாளாய் அஞ்சுகின்றீர்

– “அன்னைத் தமிழை அரியணை ஏற்றுவோம்” 2006

mozhipoar eekiyar01மொழிப்போர் மறவர் அனைவருக்கும் வீரவணக்கம்!
புதுவைத் தமிழ்நெஞ்சன்
(புதுவைத்தமிழ்நெஞ்சன்)

(புதுவைத்தமிழ்நெஞ்சன்)