எம்மை ஆள எமக்குத் தெரியும்!

 

வடவோர்சிலர் தமிழோர் தமை
வதையே புரிகுவதா – இறை
மதவோர் பலர் இனமோர் நமை
இழிவெனப் பழிப்பதுவா

கரமோடு உளிசெய் நம்கடவுளர்
கருவறை தடுப்பதுவா – மறை
களவொடு சதிசெய் நால்வருணம்
நம்கருப்பத்தில் விதிப்பதுவா

இறையாண்மை இலா மண்ணில்
இருப்பது இறைத்தன்மையா
முறைசாரா முடிமன்னன் தில்லி
வீணமர்வது பழந்தமிழருக்கா

பயனிலாத்தமிழுடன் பண்ணிலா
இசையும் இங்கு பலன்தருமா
பதவிஆசையில் தமிழ்த்துரோகம்
செய்யப்பன்றிகளும் மேவுமா

ஆளுநர் உயர்சாதி தனிஅதிகாரி
உயர்சாதி நீதியரசரும் அரசுத்
தலைமைச் செயலரும் இவர்சாதி
உறங்குதே தமிழ்ச்சாதி தெருவீதி

மறவோர் நாம் திறவோர் நாம்
மறந்தே உறங்குவதா- மதி
பிறழ்வோர் சிரம்தாழ்த்த கரம்
உயர்த்தத் தயங்குவதா

கடுவெள்ளம் காவிரிகண்டதுபோல்
கரைமோதும் அலையெனவே
இடுகாட்டுக்கு இவரை அனுப்பவே
பறைசொல்லிப் பாடுவோமே

கடும் சிலம்பினைஎடடா – கயவர்
விடும் புராணப்புரட்டு இடிடா
தொடக் கைகழுவும் சூதுநிறை
கள்ளரைத் தூரத்தே நிறுத்தடா

ஐந்திணைக்கூட்டம் நாமடா- வட
ஆரியர் ஆதிக்கம் நிறுத்தடா
பைந்தமிழ் வீரம் மானம் காதலை
தகவல் உலகுக்குக் காட்டடா!

– முனைவர் ம.குமரவேல்