(கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – தொடர்ச்சி)

கவிஞாயிறு தாராபாரதி 7 & 8

 

சாதியெனும் அமைப்புகளேன்? சங்கம் வைத்துச்
சந்தையென மனிதரையேன் தரம் பிரித்தாய்?
போதைநிலைப் பொய்க்கணக்கின் போக்கில் இன்று
பொதுநிலையே மனக்கணக்காய் போன திங்கு!
தீதெனினும் தொடர்கின்ற தீயாய்ச் சாதி!
தேசத்தின் கறையிவைதான்! தெரிந்தி வற்றை
வீதியிலே தூக்கியெறி! மெய்யாய் நல்ல
வேள்விக்கோர் தேதிகுறி! விடியும் என்றார்! (7)

மண்புழுவாய்ப் பிறந்திருந்தால் மண்ணைத் தின்னும்
மந்திரம்தான் தெரிந்திருக்கும்; மனிதர்க் கெங்கே?
எண்ணளவில் அதிகரிக்கும் ஏழை மக்கள்!
இதைத்தானா சுதந்திரத்தின் ஏற்றம் என்றோம்?
கண்ணெதிரே தெருவிலிவர்! காசு கொண்டோர்
காலமாயும் காணிநிலம் காண்பர்!; ஆயுள்
தண்டனைதான் பசியிவர்க்கு! சனத்தில் பாதி
தவித்திருக்கப் பாரதமோர் ஏழைச் சந்தை! (8)

– சந்தர் சுப்பிரமணியன்

கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்