thamizhannai-thamizhthaay06

தொன்மத்தில் சொல்வளத்தில் தூய்வடிவில் மாறுகின்ற

இன்றைக்கும் ஏற்ற எழில்நடையில் – நின்று

தினம்வளரும் நேர்இல் திறமிவற்றில் என்றும்

தனக்குவமை இல்லாத் தமிழ்!

நாவில் நடைபழகி நர்த்தனங்கள் ஆடியொலி

மேவி மொழியாக மெலெழும்பும் – பூவில்

அனைத்துக்கும் முந்தோன்றி ஆளு(ம்)மொழி கட்குள்

தனக்குவமை இல்லாத் தமிழ்!

ஓசை வகைவிளம்பி உட்புணர்வுக்(கு) ஓர்முறையைப்

பேசுமொழி ஒன்றேகாண் பூவுலகில் – தேசோ(டு)

இனிக்கும் இயல்வடிவில் ஏழிசையின் ஈர்ப்பில்

தனக்குவமை இல்லாத் தமிழ்!

முன்னைக்கு முன்னை முதுமகளோ! இல்லையிவள்

பின்னை வருமொழிகொள் பேரெழிலோ! – என்னே!

அனைத்து மொழிகட்குள் அன்றின்றென் றெங்கும்

தனக்குவமை இல்லாத் தமிழ்!

விஞ்சும் விருப்பங்கள் வித்தாகி மேலெழுந்து

கொஞ்சும் மொழியாகக் கொப்புளிக்கும் – நெஞ்சின்

அனற்சுடராய் வாயகலில் அற்புதங்கள் செய்யும்

தனக்குவமை இல்லாத் தமிழ்!

கன்னிக்கும் உண்டோகாண் கர்ப்பம்! குமரியிவள்

தன்னைக் குழைத்துமொழி தந்துநின்றாள்! – முன்னி

அனையாகி மண்ணில் அருமொழிகள் ஆக்கும்

தனக்குவமை இல்லாத் தமிழ்!

ஆண்டுகள் ஆயிரமாய் ஆனபினும் காப்பியத்தால்

மாண்டோர் புகழ்பரப்பும் மாமொழியாம் – யாண்டும்

நினைவலைகள் நீளும் நெடுங்கடலாய் நிற்கும்

தனக்குவமை இல்லாத் தமிழ்!

பத்தும் பதினெட்டும் பார்புகழும் எட்டுமிங்கே

சொத்தென்று கொண்டுயர்ந்த தூய்மொழியாள்! – நித்தம்

இனிக்கின்ற வாறே இலக்கியங்கள் சேர்க்கும்

தனக்குவமை இல்லாத் தமிழ்!

சங்கம் அமைத்தன்றே சான்றோர்கள் மானுடத்தில்

முங்கி முதற்கண்ட முத்திதுவே! – பொங்கி,

கனக்கின்ற கற்பனைசேர் காவியங்கள் காக்கும்

தனக்குவமை இல்லாத் தமிழ்

நற்சொற்கள் நூறிருந்தும் நம்வாழ்வில் நாவடக்கம்

அற்றேனோ வீணாய் அழிகின்றோம்? – சுற்றும்

கனியிருக்கக் காய்கவரும் காதலேன் என்னும்

தனக்குவமை இல்லாத் தமிழ்!

 ChandarS01