தமிழனே சொந்தக்காரன்! – ஆற்காடு க.குமரன்
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2020/03/thalaippu-thamizhane-sonthakkaaran-arcodu-ka.kumaran.png)
தமிழனே சொந்தக்காரன்!
வந்தாரை
இருகரம் நீட்டி
வரவேற்ற தமிழன்!
வந்தார்கள்
வென்றார்கள்
கொன்றார்கள்
வாய்க்கரிசி,
வரவேற்க
நீட்டிய கைகளில்!
வாழ வந்தவனை
வாழ வைத்து விட்டு
வாழ வந்தவனிடம்
வாழ வழி கேட்கும்
வக்கற்ற தமிழனே!
என்ன வளம் இல்லை
இந்தத் திருநாட்டில்
எடுத்துச் செல்பவன் பாடுகிறான் இருப்பவன் சுவைக்கிறான்!
பிழைக்க வந்தவனால்
பிழைப்பை இழந்து
பிழைக்க வந்தவனிடம்
பிச்சை எடுக்கும்
பிச்சைக்காரர் கூட்டம்
சுவைத்துச் சுவைத்து நசிந்து போனவன் தமிழன்
கைதட்டி தன் கைவரிகளைத் தொலைத்தவன் தமிழன்
பொழுது போக்குகளில்
வாழ்நாள் பொழுதைப் போக்கியவன்
சிந்திக்கத் தொடங்கிய
சில காலத்தில்
சிகரம் தொடும் நேரத்தில்
மலிவு விலை மதுக்கள்
இலவச பொருட்கள்
தன்னிலை அகதிகளாகச் சொந்த மண்ணில்
குடியுரிமைச் சட்டம்
தமிழ்க் குடியை காக்கும்!
அண்டை நாட்டில்
பண்டைத் தமிழன்
மண்டை ஓடும் மண்ணில் இல்லை!
எங்கள் நாட்டில் எந்நாட்டவரும்
இல்லாமல் இல்லை!
அடுத்தவனை நம்பி
அவனை ஆதரித்து
அவனை ஆராதித்து
அகதியாய் ஆகாதீர்!
தமிழ் மண்ணுக்குத்
தமிழனே சொந்தக்காரன்!
தமிழ்க் கோவில்களில் மட்டுமல்ல
தமிழ்க் கோட்டையிலும்
தமிழ் ஒலிக்கட்டும் அதைத் தமிழனே முழங்கட்டும்!
உழைப்போம்
தழைப்போம்!
இவண்
ஆற்காடு க குமரன், 9789814114
Leave a Reply