தமிழவள்!

கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார் தமிழர்

குலக் கொழுந்தாக அன்னைத் தமிழை

வஞ்சி வஞ்சி யெனவே அவளும்

வளர்ந்தாள் அவளும் வளமாய் அறிவாய்!..

செஞ்சி செஞ்சி சீர்பெற அழகாய்

செய்தனர் புலவர் கவியென வடிவாய்

மன்னர் எழுந்தனர் மாதவள் செழிக்க

மயக்கம் தீர்க்க சங்கம் பிறக்க…

ஊரும் உலகும் அவள் பெயர் படிக்க

உருண்டது காலம் பலர்வழி நடக்க…

வளர்ந்தது சோலை ஆடலும் இனிக்க

வந்து விழுந்தது இசையென முழக்க..

அணிந்தாள் அன்னை உடைபல உடுத்த

அணிகலன் எடுத்து பதித்தனர் முத்தாய்

பொன்னும் மணியும் எழுத்தென இருக்க

எழுதினர் ஓலைகள் இன்தமிழ் நிலைக்க!..

பானை ஓடுகள் பகன்றின்று சிறக்க

படிப்பும் அறிவும் ஒளிவிட வடிக்க..

 வடித்தனர் கோயில் சிலைகள் நிற்பாய்

வார்த்தனர் ஓவியம் சென்றன பிடிப்பாய்..

கற்களும் எழுதின உளிகளின் வடிப்பாய்

கல்விக் கூடங்கள் தோன்றின அவளடி நடப்பாய்!

படித்தவர் பாடினர் கவிதைகள் விதைப்பாய்!.

பாரோர் கூட அவள் மடி சுமப்பாம்!..

அவள் மடி தவழ்ந்தவர் ஆடினர் களிப்பாய்

அதன்வழி பிறந்தன கலைகளும் உவப்பாய்!.

மண்ணென நிலைத்தெழ மருந்துவ சித்தர்

மகிழ்வென பகிர்ந்திட வான்வெளி வித்தர்

ஆய்ந்திட அறிஞர்கள் புலவர்கள் புகுந்தெழ

புகழ்ந்தது தமிழர் உலகமே தனியென ..

இன்றும் என்றும் அவளாம் கன்னி

இருப்புகள் தேங்க வைத்தாள் மன்னி

பொறுப்புகளோடு புகழும் அரசி

பொங்கும் நலங்கள் செய்வோம் உரசி!

பாவலர் மு. இராமச்சந்திரன்

தலைவர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.