தமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் !

தமிழ்வாழ்க என்றுவெறும் கூச்சல் போட்டால்
தமிழ்வாழ்ந்து விடுவதில்லை !உதட்ட சைந்து
அமிழ்தென்று சொல்லுவதால் மட்டும் யார்க்கும்
அங்கங்கள் நிறைவதில்லை !இயங்க வேண்டும் !

தமிழில்தான் திருமணங்கள், வடவர் தம்மைத்
தள்ளிவைத்தே மனைவிழாக்கள் எல்லாம் செய்து
தமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் !
தமிழாக வாழ்ந்தாலே உயரம் கூடும் !

உத்திரத்தை ஒட்டடைகள் தாங்குமென்று
ஒருபோதும் அறிவுள்ளோர் ஏற்ப தில்லை !
சித்திரத்து விளக்கொளிதான் பகலே என்று
சிந்திக்க எவர்க்கேனும் துணிவு மில்லை !
நத்தைகள் நீர்சுமந்தே அணைநி ரப்ப
நம்பிக்கை கொண்டெவரும் முயல்வ தில்லை !
முத்தமிழை வளர்க்கின்ற முயற்சி யில்நாம்
மூங்கைகளாய் முடங்கிவிட்டோம் !மறுப்பும் இல்லை !

புத்தகத்தை அச்சேற்றி விற்று விட்டால்
பொன்னுலகு பிறக்குமென்று கனவு கண்டோம் !
தத்துவங்கள் தினம்பேசிக் களைத்து விட்டோம் !
தமிழ்வளர்க்க இயலாமல் இளைத்து விட்டோம் !
மொத்தமாய்க் கவியரங்கம் பட்டி மன்றம்
குத்தகைக்கு எடுத்துநாமும் அலசி விட்டு
மத்திட்ட தயிராகப் பிரிந்து விட்டோம் !
மாற்றார்க்கு நூறுவழி திறந்து விட்டோம் !

சாதிகளை அரசியலை இனபே தத்தைச்
சத்தமின்றி இலக்கியத்தில் நுழைய விட்டோம் !
வீதிகளில் இருந்ததமிழ் வித்தை யெல்லாம்
விற்றுவிட்டோம் செல்வந்தர் வாசல் சென்று !
சாதிக்கும் பேரறிவோ இருட்டுச் சந்தில்!
சந்தர்ப்ப வாதங்கள் அரசின் நெஞ்சில்!
நாதியற்றுக் கிடக்கிறது நாபிச் சொந்தம் !
நமக்குள் ஏன் ஆயிரமாய் பேதம் கொந்தும் ?

தமிழுக்கோ தமிழர்க்கோ ஊறு என்றால்
தம்கட்சி தம்சாதி என்றில் லாமல்
தமிழறிஞர் ஓரணியில் திரள வேண்டும்!
தமிழ்த்தொண்டர் தலைமையில் இயங்க வேண்டும் !
தமிழர்நாம் எனும்நிலையில் மதமும் மீறி
சம்மதமாய்க் கைகோர்த்து இணையும் நாளில்
தமிழன்தான் இந்தியாவின் தலைமை ஏற்பான் !
தமிழர்கள் இணைந்தாலே எல்லாம் கூடும் !

கவிக்கோ துரைவசந்தராசன், பண்ணைத் தமிழ்ச்சங்கம்