தரணி ஆளும் தமிழ் 

 

உலகறியும் மொழிகளிலே தமிழ் மொழிபோல்

உயர்தனிச்  செம்மொழி வேறில்லை !

இலக்கண இலக்கிய வரலாற்றோடு

இலங்கும் தமிழுக்கிணை ஏதுமில்லை !

 

பொதிகை மலைச் சாரலாய்ப்  புவிமீது

பார்போற்ற வாழும் மொழித் தமிழாகும் !

வாழ்வியலாம் வள்ளுவத்தில் நிலைபெற்று

வான் போற்றும் தமிழெங்கள் அமுதாகும் !

 

சங்கம் வளர்த்த மாமதுரை வீதியெங்கும்

அங்கமாய்த் தமிழ்த்தூண்கள் அரணாகும் !

மூவேந்தர் புகழ் பாடிப்  பாரெங்கும் 

முத்தமிழே இனி எங்கள் உரமாகும் !

 

வரிவடிவத் தமிழின் தொன்மைக்குச் சான்றாகி 

வைகையாற்றுத் தமிழர் நாகரிகமாய்க்  கீழடி !

உலகின் முதல் மொழித் தமிழென்று 

உணர்த்துகின்ற அகழாய்வே எங்கள் தாய்மடி !

 

ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட திருக்குறளே

இணையிலா உலகப் பொதுமறை !

ஓராயிரம் ஆண்டுப் பழமை உரைக்கின்ற

ஆத்திச்சூடி நாமறிந்த திருமறை !

 

பிராமி வடிவம் தமிழுக்கு மூலமென

மாங்குளத்துக்  கல்வெட்டு விளக்கியது !

இன்றளவும் ஒலிவடிவம் வரிவடிவம் காத்து

குன்றமென நின்றே தமிழ் துலங்கியது !

 

தமிழைப்போல் இனிதான மொழி வேறில்லையென 

தரணிக்கு எடுத்துரைத்தான் நம் மகாகவி !

தமிழெங்கள் உயிருக்கு நேரென்று நெஞ்சுயர்த்தி

அமுதமொழித் தமிழ்தான் என்றான் புரட்சிக்கவி !

 

உலகெங்கும் கால்பதித்த தமிழரின் மேன்மை

பலகாலம் பறைசாற்றும் தமிழின் மாண்பை !

தன்னிலிருந்து மலர்ந்த சொல் தம்இழ்  

தரணி ஆளும் தமிழுக்கு மகுடமாகும் !

 

கவிச்சுடர் கா..கல்யாணசுந்தரம் , சென்னை  600100 
9443259288