S.Ilakkuvanar+10

யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல்

யாங்கா கியர் என வினவுதி ராயின்?

ஆண்டநம் மக்கள் அடிமைக ளாயினர்;

பூண்டநம் பண்பு போலிய தாகின்று

நற்றமிழ் மறந்தனர்; நானில மதனில்

பிறமொழிப் பற்றில் பெரியோ ராயினர்;

தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை;

ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும்

அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்;

தமிழைக் கற்றோர் தாழ்நிலை உறுவதால்

தமிழைப் பயிலத் தமிழரே வந்திலர்;

ஆட்சி மொழியும் அன்னை மொழிஎனச்

சொல்லள வாக்கினர்; தூத்தமிழ் வெறுக்கும்

அயல்மொழிக் காதலர் ஆட்சி கொண்டுளர்;

உயர்கல் விக்குறு ஊடக மொழியாய்த்

தமிழ்மொழி அமையத் தடுப்பவர் தமிழரே!

ஆங்கில மொழிக்கே அளிப்பதில் பாதியும்

தமிழ்மொழிக் களித்திலர் தமிழைப் போற்றுவோர்;

அல்லவை பெருகவும் நல்லவை குறையவும்

மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் இன்றே

– தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்