(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.13 – 1.6.17 தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம்

6. தாய்மொழிப் படலம்

ஷ வேறு வண்ணம்

          18.     ஏடுகை யில்லா ரில்லை யியலிசை கல்லா ரில்லை

                 பாடுகை யில்லா யில்லை பள்ளியோ செல்லா ரில்லை

                 ஆடுகை யில்லா ரில்லை யதன்பயன் கொள்ளா ரில்லை

                 நாடுகை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா.

          19.     தமிழென திருகட் பார்வை தமிழென துருவப் போர்வை

                 தமிழென துயிரின் காப்புத் தமிழென துளவே மாப்புத்

                 தமிழென துடைமைப் பெட்டி தமிழென துயாவுப் பட்டி

                 தமிழென துரிமை யென்னத் தனித்தனி வளர்ப்பர் மாதோ.

          20.    நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம்

                 வீடெலாந் தமிழ்த்தாய்க் கோட்டம் விழவெலாந் தமிழ்க்கொண்டாட்டம்                  பாடெலாந் தமிழின் றேட்டம் பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம்

                 மாடெலாந் தமிழ்ச்சொல் லாட்டம் வண்டமி ழகத்து மாதோ.

     21.     உண்டியை யுண்ணார் பொன்பட் டுடையினை யெண்ணார் கன்னற்

                 கண்டினைப் பேணார் செம்பொற் கலன்களைப் பூணார் வண்ணச்

                 செண்டினைச் சூடார் சாந்தத் திரளினை நாடார் யாழின்

                 தண்டினைத் தீண்டார் யாருந் தமிழ்மொழி பயிலாக் காலே.

          22.     பாடுபவ ருக்குமுரை பண்ணுபவ ருக்கும்

                 ஏடதுவி ரித்துரை யிசைப்பவர் தமக்கும்

                 நாடுநக ரோடவர் நயப்பவை கொடுத்தும்

                 தேடிவரு வித்துமுயர் செந்தமிழ் வளர்த்தார்.

+++

        19. ஏமாப்பு – கருத்து. பட்டி – உறைவிடம். 20.

பாடு – வேலை. தேட்டம் – செல்வம். பணை – வயல். மாடு – பக்கம். சொல்லாடல்

(இருவரிடைப்) பேச்சு.

21. செண்டு – பூச்செண்டு. சாந்தத்திரள் – சந்தனக் கலவை.

+++

இராவண காவியம் – புலவர் குழந்தை

(தொடரும்)