தலைப்பு-மெய்யறம்-மெய்யைத்தொழுதல் : thalaippu_meyyaaithozhuthal

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 
மெய்யறம் (மாணவரியல்)
[வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.]
4.மெய்யைத் தொழுதல்

  1. மெய்யுல கெல்லாஞ் செய்முதற் கடவுள்

உலகத்தை எல்லாம் உருவாக்கக் கூடிய முதன்மையான கடவுள் உண்மையே ஆகும்.

  1. உலகப் பொருட்கெலா முயிரென நிற்பது.

உலகத்தில் உள்ள பொருட்களுக்கு எல்லாம் உயிராக நிற்பது உண்மையே ஆகும்.

  1. அறிவா யெங்கணுஞ் செறிவா யமைந்தது.

உண்மை, உலகம் எல்லாம் ஞானமாக நிறைந்து விளங்குகிறது.

  1. பகுத்தறி யுயிர்வினைப் பயனதற் களிப்பது.

உண்மை, மனிதர்களின் செயல்களின் விளைவை அவர்களுக்கு அளிக்கிறது.

  1. உலகந் தனதரு ணலனுற வாள்வது.

உண்மை, தனது அருளினால் பல நலன்களை உலகத்திற்கு அளித்து ஆள்கிறது.

  1. தொழுமுறை யதனைமுப் பொழுது முள்ளல்.

எப்பொழுதும் மெய்ப்பொருளை நினைப்பதே அதனைத் தொழும் முறையாகும்.

  1. உள்ளியாங் குறங்கி யுள்ளியாங் கெழுதல்.

உண்மை, தான் நினைக்கும் வண்ணம் தன்னை மறைக்கும் மற்றும் தன்னை வெளிப்படுத்தும் இயல்புடையது.

  1. எம்மதக் கடவுளுந் தம்ம தெனக்கொளல்.

எல்லா மதக்கடவுளும் நம்முடைய கடவுள் என்று ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

  1. உலகி லதனடு வோர்ந்து நிற்றல்.

உலகத்தில் உண்மையின் நடுநிலைமையை அறிந்து கொள்ளவேண்டும்.

  1. அந்தண ராகி யதனிலை யடைதல்.

உண்மையின் நிலையை(விருப்பு வெறுப்பு அற்ற உயர்ந்த நிலை) அடைய வேண்டும்.

 

அட்டை,மெய்யறம்,வ.உ.சி. : attai_meyyaram 03

வ.உ.சிதம்பரனார்