(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6 தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

7

7.ஆசிரியரை யடைதல்

 

  1. அறிவினைத் தருபவ ராமா சிரியர்.

அறிவினைத் தருகின்றவர் ஆசிரியர் ஆவார்.

  1. இருபா லாருந் தருவதற் குரியவர்.

ஆண், பெண் இருவரும் ஆசிரியர் ஆவதற்குத் தகுதி உடையவர்கள் ஆவர்.

  1. அறிவு வகையா னாசிரி யர்பலர்.

பல வகையான அறிவினை வழங்குவதற்கு ஏற்ப ஆசிரியர்களும் பல வகையாக உள்ளனர்.

  1. எவர்க்கு மொழுக்க மின்றியமை யாதது.

ஆசிரியர்களுக்கு நல்லொழுக்கம் இன்றியமையாதது.

  1. அவர்கடன் மாணவ ரறிதிற னறிதல்.

மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறமையை அறிந்து கொள்வது ஆசிரியரின் கடமை ஆகும்.

  1. நல்வினை விரும்பு நல்லவர்க் கோடல்.

ஆசிரியர் என்பவர் நல்ல செயல்களைச் செய்பவராகவும் நல்ல நல்லவர்களின் நட்பை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

  1. மாணவர் தமைதம் மகாரெனப் பேணல்.

ஆசிரியர் தமது மாணவர்களை தனது மக்களைப் போல் காக்க வேண்டும்.

  1. அறிந்தவை யெல்லாஞ் செறிந்திடச் சொல்லல்.

தாம் அறிந்தவற்றை எல்லாம் மாணவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லுதல் வேண்டும்.

  1. சொல்லிய செய்யவும் வல்லுந ராக்குதல்.

ஆசிரியர் மாணவர்களை, அவர்கள் அறிந்தவற்றைச் செயல்படுத்தும் வல்லவர்களாகச் செய்தல் வேண்டும்.

  1. அறிந்தா சிரியரை யடைந்தெலா மறிக.

எல்லாவற்றையும் அறிந்த, சிறந்த ஆசிரியரை அடைந்து எல்லாவற்றையும் கற்றல் வேண்டும்.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

வ.உ.சிதம்பரனார்