(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்-தொடர்ச்சி)

          கருதிய காதற் களந்தனில் நீதான்

          ஒருமுறை இறங்கினை, திரும்பினை வறிதே! 180

          காதல் எளிதெனக் கருதினை போலும்

சாதல் எய்தினும் சலியா துழைப்பின்

விரும்பிய வெற்றி அரும்புவ துறுதி;

நால்வகை முயற்சியும் நயவா தொருமுறை  

          தோல்வி கண்டுளம் தொய்ந்தனை யாயின்    185

          ஆண்மை என்றதை அறைதலும் உண்டோ?

நாண்மடம் பூண்ட நங்கையர் தம்மனம்

எளிதாய் இசைந்திடின் பெண்மையும் ஏது?

மறுத்தும் வெறுத்தும் மாறியும் சீறியும் 

          தடுத்தும் உரைப்பதே தையலர் இயல்பு; 190

          தொடுத்து முயன்றால் தோள்புணை யாகக்

கொடுத்தல் உறுதி; கோமகன் நீயும்

அடுத்தடுத் தவள்பால் அணுகுதல் வேண்டும்;

தோல்வி கண்டுளம் துவளுவை யாயின்

          பால்மொழி நின்பால் பரிவுறல் யாங்ஙனம்?   195

          மறுத்தனள் அவளென உரைத்தனை இளைஞ!

ஒருத்தி யவள்முனம் ஒருமுறை யேனும்

கருத்தினை விளக்கிக் கழறிய துண்டோ?

அவள்கருத் துன்பால் அறைந்ததும் உண்டோ?         

          மூங்கை நிலையில் மொழியா திருந்துபின்     200

          ஆங்கவள் நெஞ்சம் அளித்திலள் என்றே

வீண்குறை கூறினை; தனிமையில் அவளைக்

காண்கிலை வீணில் கலங்குதி மடவோய்!

ஆதலின் அறிவ! அவள்பாற் செல்லுதி!  

          எத்திறத் தவள்மனம் உவக்கும் எனவுணர்ந்து 205

          அத்திறத் தானே அணுகுதி பயன்தரும்;

பெண்மனம் என்பது கன்மனம் அன்றே

உண்மையின் விரும்பும் ஒருவனைக் காண்புழி      

—————————————————————

          பால்மொழி – பூங்கொடி,

வெண்ணெயின் உருகும் தன்மையை தாகும்;

          ஐயா! நீயும் அவள்பாற் சென்று      210

          பொய்யா மனத்துப் பூத்துள காதலை

எய்யா துரைத்தனை யாயின் அந்தக்

கொய்யாக் கனியைக் கொய்திடல் ஆகும்;

ஒய்யென விரை’கெனக் கோமகற் குரைத்தலும்;     

கோமகன் எழுச்சி

          திரியின் பிழம்பு சிறிது சிறிதாகக் 215

          குறுகி அணைந்து மறையும் நிலையில்

குறைதிரி தூண்டிக் குறையா நெய்யும்

ஊற்றிட நிமிர்ந்தொளி ஓங்குவ தென்னச்

சாற்றிய காமம் தளர்ந்திறும் நிலையில்         

          வீற்றிருந் தோனை விறலி தூண்டி 220

          ஒல்கா ஆசையை ஊட்டின ளாகக்

கொல்லும் காமம் கொழுந்துவிட் டெழுந்து

செல்லும் குருதியில் சேர்ந்துடல் கனல,

`ஒருவர்நெஞ் சொருவர் உற்றறி கில்லேம்;      

          அறியாப் பிழைக்கும் உரியவன் யானே;          225

          இருவர் மனமும் இவ்வணம் துயருறல்

சரியிலை; இன்றே சார்ந்தவட் குரைப்பேன்;

யாண்டுளாள் பூங்கொடி? யாங்ஙனம் அணுகுதல்

வேண்டும்? விறலீ! விளம்புதி கொல்லோ?’      

          என்றுளம் ஏங்கி இரங்கினன் வேண்ட,    230