-மதுரை க. பாண்டியன்

chinnachamy01

படர்ந்திட்ட கொடியதனின் பரிதவிப்பைப் போக்குவதற்கே,

பாரியெனும் மன்னவனும் தன்தேரைத் தந்திட்டான்!

இடர்பட்ட புலவர்தன் வறுமைதனை யொழிப்பதற்கே,

இனிமையுறக் குமணனுமே தன்தலையைக் கொடுத்திட்டான்!

விடமறுத்த வல்லூற்றின் வன்பிடியை விடுப்பதற்கே.

வழங்கிட்டான் தன் தசையை சிபியென்பான் புறவிற்காக!

நடனமிடும் மயிலதனின் நலிவுதனை நீக்குதற்கே

நல்கிட்டான் சால்வையென நவின்றதுவே வரலாறும்!

இந்நாளில் அதுபோல இன் தமிழ்க்காய்த் தன்னுடலை

இன்பமோடு எரிதணலில் இட்டுவிட்ட ஏந்தலுமே,

இந்நாட்டில் இருக்கின்றான்! இன்னுருவாய் வாழ்கின்றான்!

இகமுழுது போற்றுசின்னச் சாமியெனும் பேராளன்!

மந்தமதி கொண்டோரின் அந்தகா ராமெடுக்க

மண்ணகத்தில் மகிமையுற மாண்டவழி கண்டவனும்!

முந்தியெழு ஞாயிறது தருமுணர்வால் அவன் செயலால்

மாநிலத்தில் மதியற்றோர் மனக்கதவும் திறவாதோ?

– குறள்நெறி: பங்குனி 02.1995 / 15.03.1964