(அகல் விளக்கு – மு.வரதராசனார். 55. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 23

கோவைக்குச் சென்றதும் மாலனுடைய கடிதம் பார்த்தேன். வேலை எங்கும் கிடைக்கவில்லை என்பதைக் குறித்து வருந்தி எழுதியிருந்தான். நான் இருக்கும் கூட்டுறவுத் துறையிலேயே தனக்கும் வேலை தேடித் தருமாறு கோரி இருந்தான். ஒரு வேளை சோதிடர் சொன்னதைக்கேட்டே இந்த முடிவுக்கு வந்தானோ என எண்ணினேன். இயன்ற முயற்சி செய்து கேட்டும் பார்த்தேன். பி.ஏ. ஆனர்சு, எம்.ஏ. படித்தவர்கள் போட்டியிட்டுக்கொண்டு வருவதால் பி.ஏ.வில் ஒருமுறை தவறியவர்களுக்கோ, மூன்றாம் வகுப்பில் தேறியவர்களுக்கோ இடமே இருக்காது என்று சொல்லிவிட்டார்கள். அதை அவனுக்கு வருத்தத்தோடு தெரிவித்தேன். பிறகு அவன் எழுதிய கடிதத்தில் வேறு ஏதாவது ஒரு வேலை தேடித்தருமாறு கேட்டிருந்தான். வேறு சில துறைகளில் முயன்றேன். விண்ணப்பமும் அனுப்புமாறு செய்தேன். வேலை ஒன்றும் கிடைக்கவில்லை.

கோவையிலிருந்து என்னை ஈரோட்டுக்கு மாற்றினார்கள். உடனே ஈரோட்டுக்குச் சென்று வேலை ஏற்றேன். அந்த வட்டத்திற்குத் தனி அதிகாரியாக முழுப் பொறுப்பும் என்னிடம் இருந்தபடியால் வேலையைத் திறம்படச் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன். கூட்டுறவு இயக்கத்தில் மிக்க ஆர்வத்தோடு ஈடுபட்ட அவ்வூர் நகர மன்றத் தலைவர் பொதுநல ஆர்வம் மிக்கவர்; உள்ளொன்று புறமொன்று இல்லாத பளிங்குமனம் படைத்தவர்; மேலுக்குப் படபடப்பு உடையவராக இருந்தபோதிலும் உள்ளத்தில் அன்பு நிறைந்தவராக இருந்தபடியால், அவரிடத்தில் எனக்கு நம்பிக்கை மிகுதியாயிற்று.

தன்னலம் இல்லாமல் பொதுத்தொண்டு செய்வதையே அவர் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தபடியால், மக்களிடத்தில் அவருக்குச் செல்வாக்கும் மிகுதியாக இருந்தது. அப்படிப்பட்டவருடைய ஆதரவு எனக்கு விரைவில் கிடைத்தபடியால், என்னுடைய கடமைகளைச் செய்வதில் எனக்குத் தனி மகிழ்ச்சியும் இருந்தது. சில வாரங்களில் அவர் எனக்கு நண்பராகவே ஆகிவிட்டார். நான் குடும்பத்தோடு வந்திருப்பதற்கு நல்ல வீடும் பார்த்து ஏற்பாடு செய்தார். ஊருக்குச் சென்று மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினேன்.

கயற்கண்ணியோடு தனியே வாழ்ந்த வாழ்க்கை இன்பமாகவே இருந்தது. பல கடமைகளைச் செய்து முடித்து அலுத்தபின் வீட்டுக்கு வருவது ஆறுதலாக இருந்தது. அவளுடைய இளைமையழகும் இனிமைக் கவர்ச்சியும் எனக்குக் கள்வெறி ஊட்டி என்னுடைய களைப்பை மறக்கச் செய்தன. தனியே நான் மட்டும் வீட்டில் இருந்தபோது அவள் கரவற்ற உள்ளத்தோடு சிறு பெண்போல் என்னென்னவோ பேசுவாள். என் வயதையும் பொறுப்பான தொழிலையும் மறந்து நானும் சிறு பையன் போல் அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பேன். உண்மையாகவே, அவள் பேசச் சலிக்கவில்லை; நான் கேட்கச் சலிக்கவில்லை. அவள் பேசிய பழைய பேச்சையே பேசினாலும் அதைக் கேட்பது எனக்கு இன்பமாகவே இருந்தது.

தன் தாய் வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பங்களைப் பற்றிப் பேசுவாள். அந்த ஊரில் சில பெண்கள் கணவன்மாரோடு சண்டை போடும் வகைகளைப் பற்றிப் பேசுவாள். என்னுடைய தங்கையும் அவளுடைய கணவரும் பேசும் முறைகளையும் பழகும் முறைகளையும் பற்றிச் சொல்வாள். வாலாசாவில் கண்ட பலவகைப் பெண்களைப் பற்றியும் மதிப்புரை வழங்குவாள். பாக்கியத்தைப் பற்றி அடிக்கடி சொல்வாள். அவரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தனி மதிப்புத் தந்து அன்போடு பேசுவாள். சில சமயங்களில் அவருடைய திக்கற்ற வாழ்வை நினைத்து இரக்கத்தோடு பேசுவாள். அவர் தனக்குச் சொல்லிக் கொடுத்த சமையல் பாகங்களைப் பற்றி எனக்குச் சொல்வாள்; நான் ஒன்றும் விளங்காமலே கேட்டுக் கொண்டிருப்பேன்.

மிளகுவடை, கோதுமை அல்வா, தேன் குழல் இவற்றைப் பாக்கியம் கைப்படச் செய்தால் தனிச் சுவையாக இருக்கும் என்பாள். “உனக்கு என்ன தெரியும்? நீ நேற்று வந்தவள். நான் குழந்தையாக இருந்தது முதல் அவர் கைப்படச் செய்து கொடுத்த தின்பண்டங்களைச் சாப்பிட்டுப் பழகியிருக்கிறேன்” என்று நானும் என்னுடைய இளமை அனுபவங்களை மெல்லச் சொல்வேன்.

வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பதில் பாக்கியத்துக்கு யாரும் இணை இல்லை என்று என் மனைவி சொன்னபோது கேட்ட என் உள்ளம் குழைந்தது. அறிவுத்திறன் உடையவர்கள் எந்தச் சிறு வேலையில் ஈடுபட்டாலும் தனிப்பெயர் பெற முடிகிறது என உணர்ந்தேன். பாக்கியம் தோட்டத்தில் நடத்தும் பள்ளிக் கூடத்தைப் பற்றி மனைவி பல குறிப்புகள் சொன்னாள்.

எந்தப் பையனையும் பெண்ணையும் அடிக்காமலே அன்பாகச் சொல்லித்திருத்தியது பற்றிப் பல நிகழ்ச்சிகளைச் சொன்னாள். பக்கத்துத் தெருவில் ஒரு பையன் பெற்றோர் என்ன சொன்னாலும் கேட்காமல் பள்ளிக்கூடத்துக்கும் போகாமல் அடம் பிடித்தானாம். அவனை முதலில் பாக்கியம் சேர்த்துக் கொள்ளவில்லையாம். “பிள்ளைகள் மிகுதியாக இருக்கிறார்கள். இடம் இல்லை. என்னாலும் கவனிக்க முடியவில்லை” என்று பாக்கியம் சொல்லி மறுத்து விட்டாராம்.

கடைசியில் பெற்றோர் என்னுடைய தாயிடம் வந்து முறையிட்டார்களாம். தாய் சிபாரிசு சொல்லவே சரி என்று பாக்கியம் சேர்த்துக் கொண்டாராம். அந்தப் பையனைத் தோட்டப் பள்ளிக்கூடத்தில் உட்கார வைத்து, படி என்று சொல்லவே இல்லையாம். அவன் பக்கத்தில் உட்கார்ந்து, கதைகளே சொல்லிக் கொண்டிருந்தாராம். இப்படி இரண்டு வாரம் கதை சொல்லிச் சொல்லி அவனுடைய மூளைக்கு உணவு கொடுத்த பிறகு ஒரு நாள் அவனே பெற்றோரைக் கேட்டு ஒரு புத்தகம் வாங்கிக் கொண்டு வந்தானாம். அதையும் பார்த்துவிட்டுப் பாக்கியம் பேசாமலே இருந்தாராம். அவனே அவரிடம் புத்தகத்தைக் காட்டிக் கற்றுக் கொடுக்கும்படி சொல்லும் நிலை வந்ததாம். இப்போது அந்தப் பையன் மற்றவர்களைவிடப் படிப்பில் ஆர்வம் மிகுந்தவனாக இருக்கிறானாம்.

சின்ன பெண் ஒருத்தி திருடுவதில் பொல்லாதவளாக இருந்தாளாம். பக்கத்துப் பெண்களிடமிருந்து நாள்தோறும் ஏதாவது ஒன்று திருடிக் கொண்டு போவாளாம். வீட்டிலும் சுற்றுப்புறங்களிலும் இப்படியே எதையாவது திருடிக் கொண்டு போவதும் அடிபடுவதுமாக இருந்தாளாம். என்ன சொல்லியும் திருத்தமுடியவில்லையாம். நம் வீட்டுத் தோட்டத்திலும் பூவோ வேறு எதுவோ திருடாமல் போவதில்லையாம். பாக்கியம் அவளிடமிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்து மறைத்து வைத்துக் கொள்ளத் தொடங்கினாராம். அவள் தேடித் தேடி அழும்போது, “நீ யாரிடமிருந்தாவது எதையாவது திருடியிருப்பாய், அதனால் உன்னிடமிருந்து பொருள் போகும்படியாகச் சாமி செய்கிறார்” என்று அடிக்கடி சொன்னாராம். கடைசியில் அந்தப் பெண் எப்படியோ உணர்ந்து தானாகவே திருடுவதை விட்டுவிட்டாளாம்.

இதை கேட்டவுடன் நான், “பாக்கியமே சாமி ஆகிவிட்டாரா? சரிதான்” என்றேன்.

“சின்ன பெண்ணைத் திருத்துவதற்கு வேறு என்ன செய்வது?” என்றாள் மனைவி.

“நீ அந்தப் பிள்ளைகளுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்திருக்கிறாயா?” என்று மனைவியைக் கேட்டேன்.

“பாக்கியம் ஏதாவது வேலையாகப் போனால், நான் போய்ப் பார்த்துக் கொள்வேன். ஐயோ! அந்தச் சிறுவர்கள் பொல்லாத அமர்க்களம் செய்வார்கள். இது அது என்று என்னென்னவோ கதை கேட்பார்கள். கதையில் ஏதாவது மறந்து விட்டுவிட்டால், தவறாகச் சொல்லிவிட்டால், பூனைக்குப் பதிலாகக் குரங்கு என்று வாய் தவறிச் சொல்லி விட்டாலும், எல்லாச் சிறுவர்களும் சேர்ந்து கொல்லென்று சிரிப்பார்கள். ஐயோ! அவர்களை மேய்ப்பது துன்பமான வேலை! அந்த அம்மாவுக்குச் சலிப்பே இல்லை” என்றாள்.

“என்ன வரும்படி கிடைக்கும்” என்று கேட்டேன்.

“சில பெற்றோர்கள் பணம் கொடுக்கிறார்கள். சிலர் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்காக அந்த அம்மாவும் பணம் கேட்டு வாங்குவதில்லை. எப்போதாவது கிடைத்ததை, அரிசி காய் முதலியவற்றைக் கொடுத்தனுப்புவார்கள். அவற்றை எல்லாம் நம் வீட்டுக்குத்தான் கொடுத்துவிடுவார். கையில் ஒன்றும் சேர்த்து வைப்பதில்லை. அவ்வப்போது கிடைப்பதை அம்மாவிடத்தில் கொடுத்துவிடுகிறார். அப்படி நூற்றைம்பது ரூபாய் சேர்ந்தது. அதில் இரண்டு மோதிரம் செய்து, உங்கள் தங்கைக்கு ஒன்றும் எனக்கு ஒன்றுமாகக் கொடுத்தார். இதைப் பார்த்து உங்கள் தம்பி தனக்கு ஒன்று வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்” என்று தன் கைவிரலில் அணிந்திருந்த பச்சைக்கல் மோதிரத்தைக் காட்டினாள்.

அதைக் கண்டேன். என் நெஞ்சம் உருகியது. திக்கற்றவர் உழைத்து வயிறு வளர்த்து அதில் மீதியானதைக் கொண்டு இப்படி நகையும் சேர்த்துத் தருகிறாரே என்று அவருடைய உள்ளன்பை நினைத்தேன். கலங்கிய என் கண்களைக் கயற்கண்ணி பார்த்தாள்.

“நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தெரியும். வேண்டா என்று எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன். அந்த அம்மா கேட்கவில்லை. ‘மறுக்கவேண்டா. மறுத்தால் பாக்கியத்துக்கு வருத்தமாக இருக்கும்; வாங்கிக்கொள்’ என்று மாமி சொன்னபிறகுதான் போட்டுக் கொண்டேன்” என்று அவள் தயங்கித் தயங்கிப் பேசினாள்.

“வாங்கிக் கொண்டது தவறு அல்ல. அந்த அம்மா யார்? நாம் யார்? அவருடைய உள்ளத்தின் அன்பை நினைத்துத்தான் உருகுகிறேன்” என்று கண்களைத் துடைத்தேன்.

“அது மட்டும் அல்ல. ஆளுக்கு ஒரு சோளி தைத்துக் கொடுத்தார்கள். ஆளுக்கு ஒரு திருக்குறளும் பெண்ணின் பெருமையும் புதுப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்தார்கள்.”

“நீ படித்து வருகிறாயா? நான் ஒரு நாளும் பார்த்ததில்லையே”.

“நீங்கள் வெளியூர்க்குப் போகும்போது படிக்கிறேன். நீங்கள் வீட்டில் இருக்கும்போது நான் ஏன் படிக்கவேண்டும்?”

சிரித்தேன். “படித்தால் விளங்குகிறதா?” என்று கேட்டேன்.

“திருக்குறள் பாதி விளங்குகிறது. பெண்ணின் பெருமை விளங்கவில்லை. உங்கள் தங்கையைப் பத்தாவது வரையில் படிக்க வைத்தார்கள். என்னை யார் அப்படிப் படிக்க வைத்தார்கள்? கிராமப் பள்ளிக்கூடத்தில் எட்டாவதோடு சரி” என்றாள்.

“அதைப் பற்றிக் கவலை இல்லை. பாக்கியம் எத்தனையாவது படித்தார்? படிக்கப் படிக்கத்தானே அறிவு வளரும்” என்றேன்.

உடனே, “தொட்டனைத்து ஊறும் மணற்கேணி” என்ற குறளைச் சொன்னாள்.

எனக்கு வியப்பாக இருந்தது. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி சொல்லும் என்பதுபோல் இருக்கிறதே பாக்கியத்தோடு பழகியதால்-“

நான் சொல்லி முடிப்பதற்குள், “அந்த அம்மா அடிக்கடி சொன்ன குறள் இது. அதனால் மனப்பாடம் ஆகிவிட்டது” என்றாள்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு