சனாதனம்: உதயநிதிக்கு நன்றி!

உதயநிதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது பா.ச.க.தானே! செல்லாக்காசாகப் போகும் பாசகவைச் செல்லுபடியாக்க வழி வகுத்ததால் பா.ச.க.தானே நன்றி சொல்ல வேண்டும் என்கிறீர்களா? மறுபுறம், இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகத் தமிழ்நாட்டில் இருந்த உதயநிதி தாலின் இன்றைக்கு இந்தியாவில் பேசு பொருளாக ஆகி உள்ளார். அதற்காகப் பா.ச.க.விற்கு உதயநிதிதானே நன்றி சொல்ல வேண்டும் என எண்ணுகிறீர்களா? இரண்டும் உண்மைதான். ஆனால், சனாதனம் என்பது குறித்து இந்தியா முழுவதும் பேசும்படிச் செய்ததற்கும் உலகின் கவனத்தைத் திருப்பியதற்கும் தமிழுலகும் அறவாணர்களும் உதயநிதிக்கு நன்றி சொல்லித்தானே ஆக வேண்டும்.

சனாதனத்தை எதிர்ப்பவர்கள் அதுகுறித்துப் படித்தவர்களே. அதனை ஆதரிப்பவர்கள் சனாதனம் குறித்துப் படிக்காதவர்களும்  அது குறித்துத் தவறாக எழுதப்பெற்ற புகழுரைகளைப் படித்து அறியாமையில் மூழ்கியவர்களும்தான்.

சனாதனத்திற்கு எதிரான பேச்சு இதற்கு முன்பும் பலமுறை பலராலும் பேசப்பட்டுள்ளது.  விழுப்புரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய தொல்.திருமாவளவன் (26, மார்ச்சு,2021, செய்தியிதழ்கள்) “சனாதனத்தை வேரறுப்போம், சனநாயகத்தைப் பாதுகாப்போம்!’  எனப் பேசியுள்ளார். இவ்வாறு அவ்வப்பொழுது அனைவரும் பேசி வரும் செய்திதான். ஆனால், இப்போது உதயநதி நல்ல உவமையுடன் மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.

உவமையை உவமையாகத்தான் பார்க்க வேண்டும். பசுபோல் சாதுவானவன் என்றால் எத்தனைப்படி பால் கறக்கலாம் என்று கேட்கக் கூடாது.

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.(திருக்குறள் 624)

என்கிறார் திருவள்ளுவர். கரடுமுரடான பாதையாக இருந்தாலும் கடந்து சென்று பாரத்தை இழுத்துச் செல்லும் எருதினைப்போன்ற விடாமுயற்சி உடையவனுக்கு வரும் துன்பமே துன்பப்படும் என்கிறா் அவர். இதனால் விடா முயற்சி உடையவனை எருது என ஏசுகிறார் திருவள்ளுவர் என்று சொல்லக் கூடாது.

இவைபோன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடததிய மாநாட்டில் “சனாதன எதிர்ப்பு” என்று குறிப்பிடாமல் “சனாதன ஒழிப்பு மாநாடு” என்று குறிப்பிட்டதை அவர் பாராட்டியுள்ளார். அப்பொழுதுதான் , “சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, முடக்குக் காய்ச்சல்(Dengue fever),  முறைக் காய்ச்சல்(Malaria), மகுடை(Corona), இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் சனாதனமும்,” என்று மக்களுக்கு மரணப்பரிசு தரும் நச்சு நோய்களைப் பூண்டோடு ஒழிப்பதுபோல் சனாதன முறையை ஒழிக்க வேண்டும் என்று சொல்ல வந்தவர் நச்சு நோய்களைக் குறிப்பிட்டு உவமையாகச் சொல்லியுள்ளார்.

சனாதனம் என்பதை உயர்வாகவும் உலகிற்கே பொதுவானதாகவும் கூறுகிறார்களே. அவ்வாறல்ல என்பதைச் சனாதனவாதிகளே கூறுகின்றனர். அதற்கு ஒரு சான்று: காஞ்சி காமகோடி மடத்தின் 68ஆவது ஆச்சாரியரான சந்திரசேகர சரசுவதி, “வருண தருமமே சனாதன தருமம்” எனப் பல முறை குறிப்பிட்டுள்ளார். இவரது பேச்சுகள் ‘தெய்வத்தின் குரல்’  தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. வருண தருமம் அல்லது வருணாசிரமம் என்றால் என்ன? அவரவர் சாதிப்பிரிவிற்கேற்ற தொழில் புரிவது. இதுவே அவரவருக்கு விதித்த கடமையாகும்.  சாதிக்கொரு கடமையை வலியுறுத்துவதுதான் சனாதனம் என்பது தெளிவாகிறது. மக்களில் ஆண் பிராமணர்களை மட்டும் உயர்த்தியும் பிற வகுப்பாரையும் பெண்களையும் இழிவுபடுத்தியும் வரையறுக்கும் வருணாசிரமத்தின் மறு வடிவமான சனாதனம்  அனைவரும் சமம் என்பதற்கு எதிராக உள்ளமையால் ஒழிக்கப்பட வேண்டியதுதானே! இதில் என்ன ஐயம் இருக்கிறது?

சனாதனம் சொல்வன என்ன? “யமி தன் உடன்பிறந்தவனான யமனை  உடலுறவுக்கு அழைக்கிறாள்” என்று கூறுவது இரிக்குவேதத்தின் சனாதனம். “வேதங்களிலும் உடநிடதங்களிலும் மனுசுமிருதியிலும் கீதையிலும் சனாதனம் குறித்துக் கூறப்படுகின்றன. நீண்ட தொலைவு பயணம் மேற்கொண்ட ஒருவரின் மனைவி அவனுடைய உறவினர் அல்லது பணியாளரிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்பது அருத்த சாத்திரம் கூறும் சனாதனம்.” “ அருத்தசாத்திரத்தைப் பொறுத்தரை சனாதனமாகிய குலத் தருமமே நீதியாகும். பிராமணன் எந்த வகைக் குற்றத்திற்காகவும் தண்டிக்கத்தக்கவன் அல்லன் என்கிறது அது. அரச தருமம் நால்வகைப்பட்ட வருணாசிரமத் தருமத்தைப் போற்ற வேண்டும் என்கிறது. ஒருவன் பல மகளிரை மணந்து கொள்ளலாம் என்றும் தன் மனைவியிடத்து வேறு ஒருவன் மூலம் புதல்வனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது.” “வேதம் ஓதுகிறவர்களைக் கடவுள் எனச் சொல்வதன் மூலம் வேதம் ஓதும் பிராமணர்களைக் கடவுளாகத் திரிக்கிறது (அருத்தசாத்திரம்) சனாதனம்.” “பெண்கள் இழிவானவர்கள்(மனுநீதி, தரும சூத்திரங்கள், அருத்த சாத்திரம், காமசூத்திரம், பகவத்துகீதை முதலியன) என்பது சனாதனம்.”

 “புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக் குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்”(மனு 2.214) எனப் பெண்களைக் காமப்பித்தர்களாகக் காட்டுவது சனாதனம். “பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றைக் கேட்பீராக” (மனு9.19) எனப் பெண்களை ஒழுக்கங்கெட்டவர்களாகக் கூறுவதும் சனாதனம்தான்.”

“மக்களிடையே மாறுபாட்டையும் வேறுபாட்டையும் விதைத்து அல்லொழுக்கத்தைப் பரப்பும் சனாதனம் எவ்வாறு நம் மண்ணிற்கு ஏற்ற பண்பாடாகத் திகழ முடியும்? நம் மண்ணிற்கு என்றில்லை, உலகில் உள்ள யாவர்க்குமே மக்களில் ஒரு பகுதியினரைக் கடவுள் நிலையில் உயர்த்தியும்  பிற பகுதியினரையும் பெண்களையும் இழிபிறப்பாகக் கூறும் சனாதனம் என்றுமே ஏற்றதாக அமையாது.” (வேற்றுமையின் வித்தே சனாதனம்!- இலக்குவனார் திருவள்ளுவன், அகரமுதல, 16.06.22)

சைவப் பேரவைத் தலைவர் கலையரசி நடராசன், “சனாதனம் முழுக்கமுழுக்க ஆரியர்களின் வாழ்வியல் முறை. சனாதனத்திற்கும் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்திய ஒன்றியத்தில் உள்ள மக்களுக்கே எந்தத் தொடர்பும் இல்லை.” “சனாதனதருமம், வருணாசிரம தருமம், மனுதருமம் என எந்த வகையில் கூறினாலும், அது மனித குலத்திற்கு எதிரானது தான்,” “ஆரியர்கள் மட்டும் பின்பற்றிய ஒரு முறையை தற்போது அனைவர் மீதும் திணித்திருக்கிறார்கள். அதனை ஒழிப்பது தான் தீர்வு,” என்று பலவாறகச் சொல்வதுதான் உண்மை.

சனாதனம் என்றால் நிலையான, நிலையான கடமை, நிலையான தருமம் என்றெல்லாம் விளக்கம் தருகின்றனர். சமற்கிருத வேர்ச்சொல் அகராதி சம என்றால் பழையை என்றும் ஆதன என்றால் கடந்து செல்வது என்றும் விளக்குகிறது.  தமிழில் ஆதனம் என்பதற்குரிய பொருள்களில் ஒன்று, நீண்ட பாதை.செ.சொ.பி.அகராதி, அதர் = வழி, நீண்ட பாதை, அதர் → அதரம் → அதனம் → ஆதனம் என்கிறது. ஆதலின் நீண்ட பாதையைக் கடத்தல். இச் சொல்லைத்தமிழில் இருந்துதான் சமற்கிருதம் கடன் வாங்கியுள்ளது. எனவே, பழையனவற்றைக் கடந்து செல்வதைக் குறிக்கும் பொழுது, பழையன கழிந்து புதியன புகுவதை ஏற்கும் பொழுது சனாதனம் என்றால் நிலையானது என்று விளக்குவது எப்படி ஏற்புடைத்தாகும்? தருமம் என்றால் கடமை, மதம், மதக்கடமை, விதிமுறை என்று விளக்கம் தருகின்றனர். தமிழில் நாம் கருதும் அறம் என்ற பொருள் இந்தத் தருமத்திற்கு இல்லை என்பதை உணர்ந்தாலே பாதிக் குழப்பம் தீரும். ஏனெனில் நாம் அறம் என்று பொருள்படுத்திக் கொண்டுதான் சனாதன தருமத்தை உயர்ந்ததாகக் கருதுகிறோம்.

பொதுவாகவே சமற்கிருத நூல்கள் குறித்து அவற்றில் இல்லாதன வெல்லாம் இருப்பதாகக் கூறுவதே சமற்கிருத நூலார் வழக்கம். அதிலுள்ள தவறான கருத்துகளை மறைத்து விட்டுத் தமிழ் முதலான பிற மொழி நூல்களில் உள்ள நல்ல கருத்துகளைச் சேர்த்துக் கொள்வார்கள். இந்த இடைச் செருகல்களைக் கொண்டே சமற்கிருத நூல்களைப்பற்றி உயர்வாகப் பேசவும் எழுதவும் செய்வார்கள். தகுதியற்ற சமற்கிருத நூல்களைப் பற்றிச்சிறப்பாக எழுதி வெளிநாட்டினரிடம் அளித்து அவர்கள் வாயிலாக அறிவிக்கச் செய்வார்கள். அவர்களும் நூலைப் படித்துப் பார்க்காமலேயே எழுதிவிடுவார்கள். அதை மேற்கோளாகக் காட்டி அந்தத் தவறான செய்திகளையே பெரிதுபடுத்துவார்கள். இவ்வாறுதான் ஒழிக்கப்பட வேண்டிய சனாதனம்பற்றி இல்லாத சிறப்புகளைப் பற்றியெல்லாம் கற்பித்து நம்புவோரை மடையர்களாக்குகின்றனர்.

சனாதனதருமம் என்பதை உயிருள்ளன உயிரல்லன என எல்லாவற்றிற்குமானதாகக் கூறுகின்றனர். சீனியின் தருமம் இனித்தல், நெருப்பின் தருமம் சுடுதல் என்றெல்லாம் விளக்குகின்றனர். இவ்வாறு பொருள்களின் தன்மைகளையும் இயல்புகளையும் தருமமாகக் கூறுகின்றனர். இத்தகைய தருமம் என்ற சொல்லைத்தான் நாம் தவறாக உயர்வாகக் கருதி சனாதனதருமத்தைச் சிறப்பாகக் கருதுகிறோம்.

சனாதனத்தைப்பற்றித் தெரியாமலேயே, “சனாதனம் என்பது அனைத்து மதங்களிலும் உள்ளது. அந்தந்த காலத்திற்கு ஏற்ப அதில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன.” எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் சனாதனவாதிகள் அதை இந்துமதக்கோட்பாடாகக் கூறுவதை அவர்கள் அறியவில்லை.

சனாதனம் என்பதற்கும் இறை ஏற்பு அல்லது இறை மறுப்பு என்பனவற்றிற்கும் தொடர்பில்லை. அதனை இறைநெறிக்கு ஒப்பாகக் கருதி உயர்த்துவது தவறு. சனாதனத்தை எதிர்ப்பவர்களை இறை மறுப்பாளர்களாகக் கருதக் கூடாது. இறை ஏற்பாளர்களாக இருந்தாலும் இறை மறுப்பாளர்களாக இருந்தாலும் அவர்கள் தன்மானம் மிக்கவர்கள், மனித நேயம் மிக்கவர்கள்.சனாதனம் என்பது மனிதர்களிடையே பிளவு ஏற்படுத்தும் வழி முறை. எனவே அதனை எதிரப்பவர்கள் அனைவரும் சமம் என்று நிலைநாட்ட விரும்புபவர்கள்.

வேதங்களை உயர்வாகக் கருதிக் கொண்டு, வேதங்களால் சிறப்பிக்கப்படுவது சனாதனம் என்று சொல்லி அதை ஏற்க வேண்டுமென்கின்றனர் சிலர். “வேதங்களில் வன்முறையும் அதிகார வெறியும் போற்றப்படுகின்றன” என்கிறார் அறிஞர்  வெண்டி தோனிகர்(Wendy Doniger).  “வேதங்களின் அடிப்படை இலட்சியம் விலங்குத்தனமானது” என்கிறார் அறிஞர் சில்வியன் இலவி (Sylvian Levi). “சனாதனத் தருமம் என்றால் அவரவர் சாதி என்ன என்ன கடமையைச் செய்ய வேண்டும் என்றுசமற்கிருத வேர்ச்சொல் அகராதி சம என்றால் பழைய என்றும் ஆதன என்றால் கடந்து செல்வது என்றும் விளக்குகிறது.  எனவே, பழையனவற்றைக் கடந்து செல்வதைக் குறிக்கும் பொழுது, பழையன கழிந்து புதியன புகுவதை ஏற்கும் பொழுது சனாதனம் என்றால் நிலையானது என்று விளக்குவது எப்படி ஏற்புடைத்தாகும்? வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளதோ அவற்றை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள்.” இவ்வாறு மக்கள் சமன்மைக்கு எதிரான அறநெறிக்கு மாறான வேதங்களின் வடிவான சனாதனத்தை எவ்வாறு ஏற்க முடியும்?

சனாதனத்தைப்பற்றித் தெரியாமலேயே, “சனாதனம் என்பது அனைத்து மதங்களிலும் உள்ளது. அந்தந்த காலத்திற்கு ஏற்ப அதில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன.” எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் சனாதனவாதிகள் அதை இந்துமதக்கோட்பாடாகக் கூறுவதை அவர்கள் அறியவில்லை. சனாதன தருமம்தான் இந்து மதம் அல்லது வேத மதம் என்று அழைக்கப்படுவது;  சனாதனம் என்றால்  இந்துவியத்தைக் கூறுதற்கு இந்துக்களால் பயன்படுத்தப்படும் சொல் என்று சனாதனவாதிகள் கூறுகின்றனர். அவ்வாறிருக்க இதனை எப்படி அனைத்து மதங்களுக்கும் பொதுவானது என்கின்றனர். அவ்வாறு கற்பனையாகக் கருதிக்கொண்டோ அதுபோன்ற பொய்யுரைகளை மெய்யுரையாகக் கருதியோதான் இவ்வாறு கூறி வருகின்றனர்.

சனாதனத்தை எதிர்ப்பவர்கள் சனாதனிகளை எதிர்க்கவில்லை. அவ்வாறு இருக்க உதயநிதியின் பேச்சு எங்ஙனம் கொலைசெய்யத் தூண்டுவதாகும்? “உதயநிதியின் பேச்சு இனப்படுகொலையைத் தூண்டும் பேச்சுதான்” எனப் பாசகவின் செய்தித் தொடர்பாளர் செசாத்து  பூனாவாலா என்பவரும் பிறரும் கூறுவது எங்ஙனம் ஏற்புடைத்தாகும்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை