தேவதானப்பட்டியில் உயிரோடு விளையாடும் அரசுப்பேருந்துகள்
தேவதானப்பட்டிப் பகுதியில்
உயிரோடு விளையாடும் அரசுப்பேருந்துகள்
தேவதானப்பட்டிப் பகுதியில் இயக்கப்படும் பேருந்துகள் முறையான பேணுதலின்றி இயங்குவதால் பொதுமக்களின் உயிருக்குக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், மஞ்சளாறுஅணை, கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் முறையான பேணுதலின்றி இயக்கப்படுவதால்; பொதுமக்கள் உயிருக்குக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளில் சரியான நிறுத்தி, முடுக்கி ஆகியவற்றுக்கு இழுவைத்தன்மை குறைந்து காணப்படுகிறது.
இதற்காக ஓட்டுநர்கள் காரைக்கற்கள்(பேவர்பிளாக் கற்கள்), செங்கல் போன்றவற்றை முடுக்கி அடிப்பாகத்தில் வைத்துவிடுகின்றனர். இதே போலப் பேருந்துகள் பகுதிகள் அங்குமிங்கும் ஆடுவதால் அதற்கு முட்டுக்கொடுத்து இரும்புத்தண்டுகளை வைத்துப் பற்றவைத்து அடித்துள்ளனர். இதனால் மேடு, பள்ளங்களில் பேருந்துகள் செல்லும்போது அந்தத் தண்டுகள் உடைந்து பேருந்தும் ஆடுகிறது. சில பேருந்துகள் நிறுத்தியை இயக்கும் பொழுது வண்டி வேகத்தின் காரணமாக நிறுத்தியின் அடிப்பாகத்தில் காரைக்கற்கள் உள்ளே சென்றுவிடுகின்றன. இதனால் சில நேரங்களில் ஓட்டுநர்கள் உடனடி நிறுத்தத்திற்காக பற்சக்கர இணைப்பைக் கொண்டு பேருந்தை நிறுத்துகின்றனர்.
எனவே மனித உயிரோடு விளையாடும் அரசுப்போக்குவரத்து கழகப்பேருந்துகளை முறையாகப் பேணவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Leave a Reply