Ilakkuvanar_nullarimukam03

‘பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்’ நூலறிமுக விழா

  பரபரப்பு நிறைந்த சென்னை பாரிமுனைப்பகுதியில் உயர்நீதி மன்றத்தின் எதிரே உள்ள 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒய்.எம்.சி.ஏ. கட்டடித்தினுள்     அமைந்துள்ள “ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கம் தமிழறிஞர்கள், தமிழ்ப் போராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என நிறைந்து காணப்பட்டது.

  காரணம், தமிழ்ப் பேரறிஞர், திருக்குறள், தொல்காப்பியங்களின்   உரைநடை நூல்கள் படைத்தவர், மொழி பெயர்ப்பாளர், மொழிப் போராட்ட ஈகையாளர், கவிஞர், இதழியலாளர், இத்தனை சிறப்புகளுக்கும் உரியவரும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவருமான பெருமகனார் மறைந்த பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் சிறப்பினை   நினைவுகூரத்தக்க வகையில் நடை பெற்ற விழாவாகும்; திருநெல்வேலி, ம.தி.தா.இந்துக்கல்லூரியில் இலக்குவனார் முப்பெரும் விழா எனப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கத்தில் அளிக்கப்பெற்ற கட்டுரைகளைப் பதிப்பாசிரியர், முனைவர். கோ. சங்கரவீரபத்திரன்  தொகுத்து மணிவாசகர் பதிப்பகம் “பேராசிரியர் சி. இலக்குவனாரின் தமிழ்ப் பணிகள்” என்ற நூலை வெளியிட்டுள்ளது இந்நூலின் அறிமுக விழாக் கூட்டம் கடந்த புரட்டாசி 12, 2046 / புரட்டாசி 29, 2015 அன்று மாலை 6:00 மணி அளவில் இங்கே நடைபெற்றது.

  விழாவிற்குத் தலைமை தாங்கிய சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்ப்போராசிரியர் முனைவர் சா. பாலுச்சாமி தன்னுடைய தலைமை   உரையில், இலக்குவனாரின் தமிழ் மொழி, தமிழ் இனப் பற்றினையும், அவர் தமிழ் மொழிக்காக ஆற்றிய நற்பணிகளையும், அவர் எழுதிய பல்வேறு நூல்களின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். மேலும், அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது உரோம் நகர் சென்று கத்தோலிக்க மத குரு போப் ஆண்டவர் அவர்களைச் சந்ததித்ததையும் அந்தச் சந்திப்பின் போது இலக்குவனார் எழுதிய   ‘தொல்காப்பிய ஆங்கில மொழி மெயர்ப்பும் திறனாய்வும்’ என்னும் நூலினை போப் அவர்களுக்குப் பரிசளித்ததையும் கூறினார். இந்தப் பெருமை மிக்க நிகழ்வு, இன்றைய தமிழ் இளைய தலைமுறையினர் அறிய வேண்டிய ஒன்று.

 பின்னர், உரையாற்றிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்,  பேராசிரியர் பழ. முத்து வீரப்பன் ஆற்றிய உரையில், “பேராசிரியர் சி. இலக்குவனாரின் தமிழ்ப் பணிகள்” நூலில் இலக்குவனாரின் திருக்குறள் உரைநடையில் உள்ள பல்வேறு ஆச்சரியமிக்க விளக்கங்களைக் குறிப்பிடப்பட்டுள்ளதையும், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், போன்ற நூல்களில் வரும் நிகழ்வுகளை இலக்குவனார் தனக்கே உரிய பானியில் சிறப்பான நூலாய்வு   செய்திருப்பதை இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருப்பதாக் கூறினார். மேலும் சங்கக்காலம் எத்தனை நூற்றாண்டுகளுக்கு    முந்தையது என்பதை இலக்குவனார் தெளிவாக்கியுள்ளதையும்   தெரிவித்தார்.

  முன்னதாக, விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று  முனைவர் மறைமைல இலக்குவனார்  வரவேற்புரை ஆற்றினார்.

  ஒய்.எம்.சி.ஏ-வின் பட்டிமன்றச் செயலாளர் பொறி. கெ. பக்தவச்சலம்     நன்றியுரையாற்றி விழாவினை நிறைவு செய்தார்.

இவ்விழாவில், இலக்குவனாரின் மகனும் தமிழறிஞருமான திரு. திருவள்ளுவன் இலக்குவனார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

  மணிவாசகர் பதிப்பகமேலாண் இயக்குநர் குருமூர்த்தி, கவிஞர் தஞ்சைக் கூத்தரசன், புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி, கவிஞர் கண்மதியன், அறிஞர் இராம.குருநாதன், பொறி. வாசுதேவன், புலவர் உதயை வீரையன், திரு தமிழ்த்தென்றல் முதலான ஏராளமான தமிழ்க் கவிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தி, இலக்கியம் தொடர்பான இந்த நூல் அறிமுக விழாவிற்கு எந்தவிதமான விளம்பரமும்   செய்யப்படவில்லை. அப்படி இருந்தும், அரங்கம் நிறைந்த விழாவாகப் “பேராசிரியர் சி. இலக்குவனாரின் தமிழ்ப் பணிகள்” என்ற நூல் அறிமுக விழாக் கூட்டம் இனிதே நடைபெற்றது.

– செய்தியாளர் இராசன் தனசேகர்

+91-99628 28939

சொடுக்கிப் படங்களைப்  பெரிதாகக் காண்க

[embpicasa id=”6201627305021879169″]