நாமேடை தமிழ் நாடாக்கும் நடைமேடை; சிந்தனையோ
பூமேடை; கருஞ்சிவப்பாய்ப் பூத்தவிழி இந்திக்குத்
தீமேடை; புகழுக்குத் தெருவெல்லாம் மணிமேடை;
கோமேடைப் பழங்காஞ்சிக் கொற்றவன்தான் குணமேடை.
முக்கோணத் தமிழகத்தின் முழுக் கோணல் நீக்குகிற
தெக்காணப் புதுச்சிற்பி; திருக்குறள்போற் சிறுவடிவம்;
எக்கோண மும்நோக்கும் இயல்பறிவு; தூக்கியதோர்
கைக்கோணத் துள்இளைஞர் கடற்கோணப் பெருந்தேக்கம்.
ஒருமைப்பா டென்று தமிழ் ஒழிக்கவரு வார்க்கெதிரே
ஒருமெய்ப்பா டில்லாமல் உலவுகிற தமிழரிடை,
பெருமைப்பா டொழியாத பெருகுதமிழ் மறத்திற்கு
வறுமைப்பா டில்லையென வாழுகிற அகச்சான்று.
‘நாடெ’ன்பான், ...