யாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே!
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2020/06/thalaippu-yaazh-nuulagami-erippu.png)
யாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே!
யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது!
யாழ்ப்பாண நூலகம் 31 மே 1981இல் எரிக்கப்பட்டு 39ஆவதுஆண்டை எட்டியுள்ளது. இலங்கை அரசின் மூத்தஅமைச்சர்களால் தென்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிங்களக் கும்பலொன்றினைக் கொண்டு இத் தீவைப்பு நடாத்தப்பட்டது.
நூலகப் புத்தகங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டழித்த இக்கொடுமையான நிகழ்வானது, இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான இன இழிப்பு வரலாற்றில் ஒரு முதன்மை நிகழ்வாகும். தெற்காசியா எங்கும் தேடக் கிடைக்காத தொன்மைவாய்ந்த, போற்றிப் பேணப்பட வேண்டிய ஏராளமான நூல்கள், ஆவணச் சுவடிகள் திட்டமிட்டு தீயிட்டழிக்கப்பட்டமையால் தமிழர்களின் விலைமதிப்பற்ற கலை பண்பாட்டுப் பரம்பரைக் கரூவூலம் ஒன்று இலங்கை அரசினால் அழிக்கப்பட்டது.
நூல் நிலையத்தை அண்டிய பகுதிகளில் அன்று எவ்வித ஆத்திரமூட்டும் நிகழ்வும் நடைபெற்றிருக்கவில்லை. யாழ்மாவட்டக் காவல் தலைமைச் செயலகம் நூலகத்திலிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்திலேயே உள்ளது. முன்னாள் அமைச்சர்களான காமினி திசநாயக்காவும் சிறில் மத்தியூவும் தீவைப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடாத்தியுள்ளார்கள். இவை யாவும் தீயிடல் கொடுமை நன்கு திட்டமிட்டு (intent of genocide) தமிழர் வரலாற்றின் ஆவணப்படுத்தலை அழிப்பதற்கென்று நிகழ்த்தப்பட்ட பண்பாட்டு இனப்படுகொலை என்பதற்குச் சான்று பகர்கின்றன.
கடந்த 70 வருடங்களாக தமிழர்களுக்கெதிராக நடந்து வரும்இனப் படுகொலையை ஒரு பன்னாட்டு நீதிப்பொறிமுறையின் மூலம் வெளிக் கொண்டு வந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதனையும் இலங்கையில் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களுக்குப் பன்னாட்டு ஏற்புடனான ஒரு பாதுகாப்புப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதனையும் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்துகின்றது.
“புத்தகங்களை எரிக்கத் துணிந்தவர்கள், மனிதர்களையே எரித்துவிடுவார்கள்” எயின்றிச்சு எயின் (சேர்மானியக் கவிஞர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வர்)
-
பிரித்தானியத்தமிழர் பேரவை
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2017/05/muthirai-brithaniya-thamizh-peravai.jpg)
Leave a Reply