(தமிழ்ச்சொல்லாக்கம்: 465-471 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 472-475

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

472. அபிப்பிராயம் – கருத்துகள்

இனி, நான் நேரில் ஒருவாறு தெரிந்து வைத்திருந்த காரியங்களில் அநுமான வகையும் சேர்த்து முற்றுற எழுதி வெளியிட்டிருக்கிற என் கருத்துகள் (அபிப்பிராயம்) சரிதானா என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு தலைவரோடு அவ்வக் காரியங்களில் தொடர்புற்றிருந்தோர் இடங்கள் தோறும் சென்று, அவரவர்க்கு உரிய பாகங்களை வாசித்துக் காட்டியபோது அன்னோர் முற்றிலும் சரி என்று ஒப்புக்கொண்டு என்னை மகிழ்வித்தார்கள்.

மேற்படி நூல் : பக்கம் – 4

473. புத்திக்கூர்மை – அறிவு நுணுக்கம்

பேதை பெதும்பைப் பருவங்களில் அறிமுகமில்லாத அந்தப்புரக் கன்னிகையான ஒரு பெண்ணினுடைய குலநல முதலியவைகளைத் தெரிந்து கொள்ளுதல் எளிதன்று. ஆயினும் குலநலம் உடல் நலம் அழகு படிப்பு பணம் முதலிய காரியங்களை பிறர் பலர் மூலமாய் வெவ்வேறான வழிகளில் முயன்றால் பெரும்பாலும் உண்மை தெரிந்து கொள்ளக்கூடும். ஆனால் வீடடங்கி அந்தப் புரத்திலிருக்கும் கன்னிகையின் குணம் செயல்களையும் அறிவு நுணுக்க (புத்திக்கூர்மை)த்தையும் பற்றி பிறர் மூலமாய்த் தெரிந்து கொள்ளுவது அரிதினும் அரிதேயாம்.

மேற்படி நூல் : பக்கம் 10, 11

474. சங்கீத ஞானம் – பண்ணறிவு

475. சாரீரம் – ஒலிநயம்

நமது நண்பருக்கு இயல்பாகவே பண்ணறிவுண்டு. சிறிது கேள்விப் பயிற்சியுமுண்டு. ஆனால் ஒலிநயம் (சாரீரம்) இல்லை. ஆயினும் அவர் பாக்களை வாசிக்கும் போதெல்லாம் சந்தத்தைத் தழுவியே வாசிப்பது பழக்கம்.

மேற்படி நூல் : பக்கம் – 73

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்