(உ.வே.சா.வின் என் சரித்திரம் 15 தொடர்ச்சி)

உ.வே.சா.வின் என் சரித்திரம்

அத்தியாயம் 9 : குழந்தைப் பருவம்: தொடர்ச்சி

பாரதியாருடைய பழக்கம் ஏற்பட்ட பின்பு நந்தன் சரித்திரக் கீர்த்தனங்களிற் சிலவற்றையும் என் தந்தையார் தம் இராமாயணப் பிரசங்கத்தினிடையே பாடிக் காட்டலானார். அக்கீர்த்தனங்களின் எளிய நடையும் அவற்றில் அமைந்திருந்த பக்திச் சுவையும் கேட்போர் உள்ளங்களைக் கவர்ந்தன.

என் குழந்தைப் பிராயத்தில் எனக்கிருந்த பழக்கம் ஒன்றை என் தாயார் சொல்லியிருக்கிறார்; நான் காலையில் எழும்பொழுதே எனக்கு ஏதேனும் ஆகாரம் கொடுக்க வேண்டுமாம். ரொட்டி, பி சுகோத்து முதலிய உணவுப் பொருள்கள் அந்தக் காலத்தில் இல்லை. என் தாயார் எனக்காக ஒரு கரண்டியப்பம் ஊற்றி ஓர் இலையில் என் படுக்கையின் பக்கத்தில் வைத்து ஒரு பாத்திரத்தால் மூடி வைத்திருப்பாராம். நான் எழுந்தவுடன் அந்தப் பாத்திரத்தை ஒரு தட்டுத் தட்டிவிட்டு உள்ளே இருக்கும் கரண்டியப்பத்தை எடுத்துத் தின்பேனாம். காலையில் எந்தக் காரியத்தைச் செய்ய மறந்தாலும் எனக்காகக் கரண்டியப்பம் பண்ணி வைப்பதை மாத்திரம் என் தாயார் மறக்க மாட்டாராம். கரண்டியப்பம் சாப்பிட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு பழையமுதும் சாப்பிடுவதுண்டு.


நாங்கள் அரியிலூரில் இருந்து வருகையில் என் பாட்டனாருக்கும் பாட்டியாருக்கும் முதுமைப் பருவத் தளர்ச்சி மிகுதியாயிற்று. எந்தச் சமயத்தில் தமக்கு மரணம் சம்பவிக்குமோ என்று என் பாட்டனார் கலக்கமடைந்திருந்தார். பரம்பரையாக இருந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு வந்து இருப்பதில் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. வேறுவழி இல்லாமையால் அரியிலூரில் வந்து இருந்தார். ஆயினும், வந்த ஊரிலே இறப்பதை அவர் விரும்பவில்லை. “நம்முடைய ஊரில் நம் வீட்டில் பந்துக்கள் சூழ்ந்த இடத்தில் மரணமடைய வேண்டும்” என்றே அவர் விரும்பினார். நதி தீரத்தைச் சார்ந்துள்ள உத்தமதானபுரத்தை விட்டுக் காட்டு நாட்டில் உயிர் நீப்பதைப்பற்றி நினைக்கும் போதே அவருக்குத் துக்கம் பொங்கும்.

ஒரு நாள் என் தகப்பனாரிடம் தம்முடைய கருத்தை என் பாட்டனார் தெரிவித்தார். குடும்பப் பாரத்தினால் நைந்த மனமுடைய அவருக்கு மீண்டும் கவலை உண்டாயிற்று. “ஏதோ ஒருவிதமாக இங்கே வந்து நிலையாக வாழத் தொடங்கினோம். கடவுள் கிருபையால், கடன் வாங்காமல் தம்பிக்குக் கலியாணம் நடத்தினோம். ஊருக்குப் போனால் நாம் எவ்வாறு காலட்சேபம் செய்ய முடியும்?” என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

என் பாட்டனாரோ அடிக்கடி தம் கருத்தை வற்புறுத்தி வந்தார். முதுமைப் பருவத்தில் அவருக்கு இருக்கும் ஆசையை நிறைவேற்றாமல் இருப்பது பாவமென்ற நினைவும் என் பிதாவுக்கு உண்டாயிற்று. இருதலைக்கொள்ளி எறும்பு போலக் கலங்கினார். தம் பெற்றோரை உத்தமதானபுரத்திற்கு அனுப்பிவிடலாமா என்றும் எண்ணினார். இறுதிக் காலத்தில் தம் குமாரர் அருகில் இருக்கவேண்டுமென்று கருதியே என்பாட்டனார் உடையார்பாளையத்திற்கும் பின்பு அரியிலூருக்கும் வந்தார். ஆதலின் தம்மைப் பிரிந்து அவர் இருத்தல் அரிது என்பதை நினைத்துப் பார்த்த எந்தையார், “எவ்வாறானாலும் சரி; அவருடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதுதான் நம் கடமை” என்ற உறுதிபூண்டு அரியிலூர் ச மீன்தாரிடமும் மற்ற அன்பர்களிடமும் விடை பெற்றுக்கொண்டு தம் குடும்பத்துடன் உத்தமதானபுரம் வந்து சேர்ந்தார்.

உத்தமதானபுரம் வந்த பின்பும் சில வருடங்கள் என் பாட்டனாரும் பாட்டியாரும் சீவித்திருந்தனர். இடையிடையே என் தந்தையார் வெளியூர்களுக்குச் சென்று இராமாயணப் பிரசங்கம் செய்து பொருள் ஈட்டி வருவார். அப்படிச் சென்றிருக்கும் சில நாட்களில் என் பாட்டனாருக்கு மனக்கலக்கம் அதிகமாகிவிடும். எந்தையார் அரியிலூருக்கும் சென்று சமீன்தாரையும் தம் அன்பர்களையும் பார்த்து அவர்களால் கிடைக்கும் பொருளையும் தம் சருவ மானியத்திலிருந்து கிடைப்பதையும் பெற்று வருவார். பாபநாசத்தில் இருந்த வக்கீல்களாகிய கபித்தலம் கிருட்டிணசாமி ஐயங்கார், வேங்கடராவு என்பவர்களும், போலீசு இன்சுபெக்டர் முத்தியாலு நாயக்க ரென்பவரும் அக்காலத்தில் அவருக்குப் பொருளுதவி செய்து ஆதரித்து வந்தனர்.

எனது மூன்றாம் பிராயத்தில் எனக்கு ஒரு சகோதரி பிறந்தாள். அப்பெண்ணுக்குத் தையல்நாயகி என்ற பெயர் வைத்தார்கள். பெண்டிருக்குப் பெண் குழந்தைகளிடம் அதிக அன்பு இருப்பது உலக இயல்பு. என் அன்னையார் அக்குழந்தையிடம் மிக்க வாத்சல்யம் உடையவராக இருந்தார். அந்தக் குழந்தை சில வருடம் வாழ்ந்திருந்து இறந்து போயிற்று. அப்போது என் தாயார் துடிதுடித்துப் போனார். அந்தக் குழந்தை இறந்த துக்கம் அவருடைய நெஞ்சில் பல வருடங்கள் ஆறாமல் இருந்தது நான் இளம்பருவத்தில் விசமம் செய்தபோது சில சமயங்களில் என் தாயார் என்னை அடித்து வைவார். அவ்வாறு வையும் சில சமயங்களில் அவர் கூறும் வார்த்தைகள் இறந்துபோன அக்குழந்தையின்பால் அவருக்கு எவ்வளவு பற்று இருந்ததென்பதைப் புலப்படுத்தும். பெண் குழந்தையை இழந்த குறை என் தாயாருக்குத் தீரவே இல்லை; அந்தக் குழந்தைக்குப் பிறகு எனக்குத் தங்கையே பிறக்கவில்லை.

எனக்கு ஐந்தாம் பிராயம் நடைபெற்ற போது வித்தியாப் பியாசம் செய்வித்தார்கள். என் பாட்டனார் அரிச்சுவடி சொல்லித் தந்தார். முதலில் உத்தமதானபுரத்தில் தெற்கு வடக்குத் தெருவில் இருந்த பள்ளிக்கூடத்தில் நாராயண ஐய ரென்பவரிடம் சில மாதங்களும், பிறகு வடக்குத் தெருவில் இருந்த பள்ளிக்கூடத்தில் சாமிநாதைய ரென்பவரிடம் சில வருடங்களும் படித்தேன். தமிழில் கீழ்வாயிலக்கம். நெல் இலக்கம் முதலியவற்றையும், வடமொழியில் சில நூல்களும் படித்தேன். பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு வீட்டிலும் என் பாட்டனார், தந்தையார், சிறிய தகப்பனார் ஆகியவர்களும் எனக்குக் கற்பித்து வந்தனர்.


அடிக்குறிப்பு: இவர் தஞ்சையில் வக்கீலாக இருந்தவரும் தமிழறிஞரும் என் அன்பருமாகிய இராவுபகதூர் சிரீ.கே.எசு.சீநிவாச பிள்ளையின் தந்தையார். இவற்றை நான் எழுதிப் பதிப்பித்துள்ள கோபால கிருட்டிண பாரதியார் சரித்திரத்திற் காணலாம்.


(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.