தலைப்பு-பறிப்பதுதான் இந்தியமா,திரு ; thalaippu_parippathudhaan_indiyamaa_thiru

இந்தியர் என்று  உரிமைகளைப் பறிப்பதும்

தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான்

இந்தியமா?

  ஒருவன் எந்த நாட்டான் என்பது அரசியல் சூழலுக்கேற்ப மாறக்கூடியது. ஆனால், எந்த இனத்தான்என்பது பிறப்பிலேயே அமைந்து இறப்புவரை  – ஏன்,அதற்குப்பின்னரும் – நிலைப்பது. எனவே இந்தியன் என்பது நிலையற்றது. ஆனால் தமிழன் என்பது நிலையானது. தமிழ் மக்கள் இந்தியர்களாக அரசியல் அமைப்பின் கீழ் மாற்றப்பட்டதால் இழந்தவைதான் மிகுதி. இழப்பு என்பதும் ஒரு  முறை ஏற்பட்டதன்று. தொடர்ந்து இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர் தமிழ் மக்கள்.

   இன்றைய, கேரள, ஆந்திர, தெலுங்கானா, கருநாடகாப்பகுதியில் உள்ள நிலப்பகுதி பலவும்  தமிழர்கள் வாழ்ந்த தமிழர்க்கே உரியன. மொழிவாரி மாநிலம் அமைந்தபொழுது கூட பிற மாநிலங்களில் சேர்க்கப்பட்ட தமிழகப்பகுதிகளில் தமிழர்களே மிகுதியாக வாழ்ந்தனர்.  ஆங்கிலேயர் வந்தபொழுது இருந்த நிலப்பரப்பு  அடிப்படையில் மொழிவழியாகப் பகுக்கப்பட்டால் இன்னும் பல பகுதிகள் தமிழ்ப்பகுதிகளாக அமைந்திருக்கும் என உணரலாம்.

  இந்தியா என்னும் அரசியல் அடிப்படையிலான ஆட்சிப்பகுதியில் தமிழ் மக்கள் இணைந்தமையால் தமிழரின் நிலப்பகுதிகள்-எங்கிருந்தாலும் இந்தியன்தானே – எனச் சொல்லிப் – பிற மாநிலங்களில் இணைக்கப்பட்டன. அது முதலே ஆற்று நீர்  உரிமை முதற்கொண்டு பல உரிமைகளை இழந்து வருகிறோம். பிற மாநிலங்களில் தமிழர்கள் உரிமைகள் மட்டுமன்றி உயிர்களும் உடைமைகளும் பறிக்கப்பட்டாலும் ஏனென்று கேட்க யாருமில்லை. அண்மையில் ஆந்திராவில், செம்மரம் கடத்தல் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்பட்டும் உரிய நீதி கிடைக்காமையை நாமறிவோம்.

   இதுபோல், கருநாடக  மாநிலம் தமிழர்க்கே உரிய காவிரிஆற்று நீரைத் தனக்கே உரியதாக ஆக்கி, உரிமை கேட்கும் பொழுதெல்லாம் வன்முறையில் ஈடுபடுகின்றது.  இங்குள்ள கருநாடகர் தாக்கப்பட்டால் அங்குள்ள தமிழர்களுக்குப் பாதிப்பு வரும் என்றுதான் இங்குள்ள தலைவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், அங்குள்ள தமிழர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள கருநாடகரும் தாக்கப்படுவர் என்று அங்குள்ளோர்  அமைதி காப்பதில்லை.

   உச்சநீதிமன்றம் காவிரியாற்று நீர்ப் பகிர்வு குறி்த்து வழங்கிய தீர்ப்பினை நிறைவேற்ற  வேண்டிய கருநாடக அரசு, வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறது. இங்குள்ள முதல்வரின் உருவப்பொம்மைகளை எரிக்கும் பொழுது வேடிக்கை பார்க்கிறது.  அரசின்குறையைச் சுட்டிக்காட்டினால் அவதூறுவழக்கு தொடுக்கும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  கன்னடர்களின் வன்முறைகளில் ஒன்றுதான் பெங்களூரு கிரி நகரைச் சேர்ந்த சந்தோசு என்ற இளைஞரை வீட்டிலிருந்து கடத்திவந்து பொது இடத்தில் வைத்துக் கொடூரமான முறையில் தாக்கியதும் அதனைக் காணுரையாக்கிப் பரப்புவதும். அவர்செய்த குற்றம் என்ன? பேச்சுரிமை கருத்துரிமை எல்லாம் தமிழர்க்கும் உண்டு என எண்ணிக் காவிரிச்சிக்கல்பற்றி முகநூலில் கருத்து தெரிவித்ததுதான். கருநாடகாவின் பக்கம்  நயன்மை/நியாயம் இல்லாவிட்டாலும் கன்னட நடிகர் நடிகைகள் போராடுகின்றனர் ; தமிழகத்தின் பக்கம் நயன்மை இருந்தும் தமிழ் நடிகர் நடிகைகள் போராடாமல் இருக்கின்றார்களே என்ற ஆதங்கத்தைப் பதிவு செய்ததற்கு கருத்தால்  எதிர்க்காமல் வன்முறையால் எதிர்த்துள்ளனர்.

  இதற்குத்தான்  கொடூரமாகத்தாக்கி மன்னிப்பு கேட்கச்செய்து,  கருநாடகா பக்கம்தான் நயன்மை உள்ளது எனச்சொல்லச் செய்து காணுரை மூலம் பரப்பி வருகின்றனர்.

 காணுரையில் தெரியும் ஆள்களை உடனே கருநாடக அரசு கைதுசெய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எடுக்கவில்லை.

 தமிழக அரசும் கருநாடகாவில் கிளை அமைப்புகள் வைத்துள்ள தமிழகக்கட்சிகளும் உடனடியாக இது குறித்துவழக்கு தொடுத்து இளைஞர் சந்தோசத்திற்கு இழப்பீடு கிடைக்கவும் தாக்கியவர்கள் பொதுஇடத்தில் மன்னிப்பு கோரவும், தண்டிக்கப்படவும் வழிவகை காணவேண்டும்.

 தமிழ்நாட்டிலிருந்து உதவி தேவை என்றால் “நீயும் இந்தியன் நானும் இந்தியன்” என்பதுபோல்  முழங்குவதும் பிற நேர்வுகளில் தமிழர்க்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பதையும் இந்தியாவின் பல பகுதிகள் செய்து வருகின்றன. மத்திய அரசும் கூடத் தமிழர்களின் பக்கம் அறம் இருப்பினும் தமிழர்களுக்கு எதிராகவே நடந்து கொள்கிறது. எனவே, இந்தியா என்னும் செயற்கைப்பகுதிக்குள் தமிழ்நாடு நிலைத்திருக்க வேண்டுமெனில் தமிழர்கள் இந்தியாவின் எப்பகுதியில் வசித்தாலும் உரிமையுடனும் பாதுகாப்புடனும் இருக்க மத்திய அரசு நடவவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டைத் தனியரசாக ஆக்கிவிட வேண்டும்.

  எனவே நமக்குத் தேவை ஒன்றுபட்ட இந்தியாவா? பிளவுபட்ட இந்தியாவா என்பதை மத்திய அரசு நினைத்துப்பார்த்து ஆவன செய்யட்டும்!

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று (திருவள்ளுவர், திருக்குறள் 967).

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 151, ஆவணி 26, 2047 / செப்.11, 2016

அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo