தமிழ் ஆர்வலர் இயக்குநர் எசு.பி.சனநாதன் இயற்கை எய்தினார்!

தமிழ் ஆர்வலரான இயக்குநர், பட ஆக்குநர், உரையாடல் எழுத்தாளர் எசு.பி.சனநாதன் இன்று(14.03.2021) இயற்கை எய்தினார். மக்கள் மனங்களைப் படம் பிடித்துத் தம் படப்பிடிப்புகளை அமைத்துக் கொண்டவர்; தம் முதல் திரைப்படமான ‘இயற்கை’(2003) என்பதற்காகத் தேசிய விருது பெற்றவர்; ஈ(2006), பேராண்மை(2009), புறம்போக்கு என்கிற பொதுவுடைமை(2015),  இலாபம்(2021) ஆகிய படங்களுக்கு உரையாடல் எழுதியதுடன் இயக்கவும் செய்துள்ளார்; பூலோகம்(2015) இவர் உரையாடல் மட்டும் எழுதிய படமாகும்; அதேபோல் ‘புறம்போக்கு’ இவரது ஆக்கத்தில் உருவானது; இவரது படங்கள் மக்களின் உள்ளங்களைக் கவரும் வகையில் அமைந்தன.

தசுதாயெவுசுக்கி என்ற உருசிய எழுத்தாளரின் கதையான ‘வெண்ணிற இரவுகள்’ என்ற கதையைத் தழுவி  ‘இயற்கை’ படம் எடுக்கப்பட்டது. கதைத்தலைவன் ஈசுவரன் பெயரின் முதலெழுத்தில் அமைந்தது ‘ஈ’ திரைப்படம்.

‘பேராண்மை’ திரைப்படம் இளைஞர்களுக்கு எழுச்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. அயல்நாட்டுக் கூலிப்படையின் சதியை ஐந்து மாணாக்கியர்/தே.ப.படைப்பயிற்சியினர் (என்.சி.சி. அணியினர்) துணையுடன் கதைத் தலைவன் முறியடிப்பதே படக்கதை. இப்படம் மூலம் வனப்பகுதி மக்கள் நலன்களுக்காகவும் குரல் கொடுத்திருந்தார். 1972 ஆம் ஆண்டு வெளியான ‘The Dawns Here Are Quiet’ என்னும் உருசியன் திரைப்படத்தின் மையக் கருத்தைத் தழுவி எடுக்கப்பட்டது இப்படம்.

‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ திரைப்படத்தின் மூலம் தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். நம்நாட்டு நிலப்பகுதி உள்நாட்டு வெளிநாட்டு வெடிமருந்துக் கழிவுகள் கொட்டப்படுவதற்கான குப்பைத் திடலாக மாற்றப்படுவதற்கு எதிராகவும் படக்கதையை அமைத்திருந்தார்.  இவரது பொதுவுடைமைச் சிந்தனைப் போக்கை இவரது இப்படம் வெளிப்படுத்தியது.

வெளிவரஉள்ள ‘இலாபம்’ படத்தின் கதைத்தலைவனை மன்பதை ஆர்வலராகப் படைத்துள்ளார். ‘பூகோளம்’ இரு குத்துச்சண்டை வீரர்களைப் பற்றியது.

எல்லாப் படங்களிலும் மக்கள் சிக்கல்களை எடுத்துரைப்பதால் மக்கள் இயக்குநராக அவர்களின் உள்ளங்களில் இடம் பெற்றுள்ளார். இத்தகைய சிறப்பான மக்கள் கலைஞர் மூளைச்சாவு ஏற்பட்டு மரணமடைந்தார் என்பது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. அவரது எதிர்பாரா மரணம் திரை உலகினரையும் மக்களையும் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவரைப்பற்றிய நினைவுகள், தமிழார்வலரான சனநாதன் விரைவில் மறைந்துவிட்டாரே என்ற அதிர்ச்சியான வருத்தத்தை அளிக்கிறது.

அவருடைய நட்பு அவரால்தான் தொடங்கியது. ‘இயற்கை’ படம் எடுத்து அடுத்த பட வேலையில் இறங்கிய பொழுது அவர் ஒருநாள் அலைபேசி வழித் தொடர்பு கொண்டார். வலைத்தளங்களின் என் கட்டுரைகளைப் படித்ததால் என்னுடன் பேச விரும்புவதாகக் கூறினார். (அவர் செகநாதனா அல்லது சன நாதனா என்ற குழப்பம் எனக்கு இருந்தது. அதைத்தான் நான்முதலில் தெளிவு படுத்திக் கொண்டேன்.) கலைத்துறையில் ஏற்பட வேண்டிய தமிழ் வளர்ச்சிபற்றிய தம் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். ‘இயற்கை’ படத்தின் மூலம் மக்களின் உள்ளங்கவர்ந்த இயக்குநர் எளிமையாக வலிய வந்து பேசியது அவர்மீதான விருப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர், வாய்ப்பு கிடைக்கும் கொழுது நேரத்தை ஒதுக்கி என்னுடன் பேசினார். தமிழ்ப்பெயரைப்படத்திற்குச் சூட்டிய அவர், இனி வரும் படங்களுக்கும் தமிழ்ப்பெயர்களையே சூட்ட வேண்டும் என்றும் பாத்திரங்களின் பெயர்களுக்கும் தமிழ்ப்பெயர்களைச் சூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தேன்.

ஒரு நாள் நேரில் சந்தித்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாகப் பேசினோம். தமிழ் நலக் கருத்துகளை இருவரும் பகிர்ந்து கொள்ளும் பொழுது தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த பின்பு, திரை உலகம் மூலம் தமிழ்ப்பணி ஆற்றுவதே தன் எண்ணம் என்றும் தெரிவித்தார்.

என்மீது அன்பு ஏற்படுவதற்குக் காரணமாக மற்றொரு நிகழ்வையும் குறிப்பிட்டார். அவரின் ஆசானான இயக்குநர் பீ.இலெனின் தென்னகப் பண்பாட்டு மையத்தின் நிதியுதவியைக் கலைபண்பாட்டுத்துறை மூலம் பெற்று ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது படச்சுருள் முறையில் ஆவணப்படம் எடுப்பதாக விதி இருந்ததால் இப்போதைய நடைமுறையில் ஏற்றதாக இருக்காது என்றும் வீண் செலவை ஏற்படுத்தும் என்றும் எண்ம முறையில் எடுத்துத் தர இசைவு வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். தென்னகப் பண்பாட்டு மையத்தினர், விதிமுறைக்கு மாறானது என்பதால் ஏற்க மறுத்து விட்டனர். இது குறித்து அவர் பெரிதும் வருத்தப்பட்டார். கலைபண்பாட்டுத்துறையில் துணை இயக்குநராக இருந்த நான் துறை ஆணையருடனும் அவருடனுமான சிறு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அவரது கருத்துகளைப் பதிவு செய்தேன். ஆவணப் படங்களை எடுப்பதற்கு ஊக்கப்படுத்துவதே நம் பணி. எனவே, படம் எடுக்கும் முறையில் விதி உருவாக்கிய பொழுது இருந்த பழைய முறையை வலியுறுத்தித் தலையிடாமல் தன்னுரிமையுடன் அவர்களுக்கு வாய்ப்பான முறையில் ஆவணப்படம் எடுக்க வாய்ப்பு நல்க வேண்டும் என்றும் தெரிவித்தேன். இதனடிப்படையில் தென்னகப்பண்பாட்டு மைய இயக்குநரிடம் தெரிவித்து அவரின் ஒப்புதலையும் பெற்றேன். அவர் விரும்பிய முறையில் ஆவணப்படம் எடுப்பதற்கான  இசைவையும் வழங்கச் செய்தேன். பின்னர், இதனை அறிந்ததால் விதிமுறைகள் மக்கள் நலன் சார்ந்தும் நடைமுறைகளுக்கேற்பவும் இருக்க வேண்டும் என்ற கருத்தில் செயல்பட்டதால் என் மீது மதிப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். வேலையின் பொழுது மேற்கொண்ட சிறு பணியைக்கூடப் பெரிதாக எண்ணிப் போற்றிய அவர் பாங்கு மகிழ்ச்சி அளித்தது. இருப்பினும் அவரது பேச்சில் தெறித்த அவரின் தமிழார்வம் அவர்மீதான மதிப்பை ஏற்படுத்தியது.

தான் மலைப்பகுதிக்கும் வனப்பகுதிக்கும் சென்று அடுத்த படத்தை எடுக்க இருப்பதாகவும்  எனவே, அடுத்த தொடர்பிற்கு இடைவெளி இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.  

கிரந்தத்திணிப்பிற்கு எதிரான பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டிருந்த பொழுது தொடர்பான கட்டுரைகள், செவ்விகள் படித்து என்னுடன் அலைபேசி வழியாகப் பேசினார். இயக்குநர்கள், படஆக்குநர்கள், பிற திரைக்கலைஞர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர்களிடையே கிரந்த ஒழிப்பு குறித்துப் பேசவேண்டும்; யாரையும் கட்டாயப்படுத்தாமல் யார் யார் கருத்துகளுக்கு உடன்படுகிறார்களோ அவர்கள் மூலமாகத் திரை உலகில் கிரந்த ஒழிப்பை நிகழ்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தம் திரைப்பணிகளுக்கு இடையேயும் தமிழ் நலன் குறித்துச் சிந்தித்த அவரது தமிழார்வம் பெரிதும் மகிழ்ச்சியைத் தந்தது. இருமுறை திட்டமிடப்பட்ட கூட்டம் அறிவிப்பிற்கு  முன்னரே வெளியூர்ப்படப்பிடிப்பு, தேர்தல் சூழல் போன்ற காரணங்களால் தடைப்பட்டது. எனினும் தமிழ் நலன் குறித்த அவரின் திரையுலகக் கனவு நனவாகும் முன்னரே இயற்கை அவரை அழைததுக் கொணடது பெரிதும் துயரம் தருவதாக உள்ளது. அவரைப்போற்றும் அவருக்கு நெருக்கமாக இருந்த திரைக் கலைஞர்கள் அவர் கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு அவர் கனவை நனவாக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

மக்கள் மனங்கவர்ந்த இயக்குநர் எசு.பி.சனநாதன் இறப்பிற்கு ‘அகரமுதல’ இதழும் தன் ஆழ்ந்த துயரத்தைத் தெரிவிக்கிறது.

துயரத்தில் பங்கேற்கும்

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை