(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: தொடர்ச்சி) 

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu17

  மாணவர் ஆற்றுப்படை, புதுக்கோட்டையில் வாழும் வள்ளல் பு.அ. சுப்பிரமணியனார் மீது பாடப்பெற்ற கவிதையாகும். பு.அ. சுப்பிரமணியனார் மணிவிழா மலரில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது.29 இக்கவிதை எழுதப்பெற்ற காலம் சனவரித் திங்கள் 1959. நூற்றுத்தொண்ணூறு அடிகளை உடைய அகவல் கவிதை இது. ஆசிரியப்பா இனத்தில் நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்து. ஈற்றியலடி நாற்சீர் பெற்றும், ஈற்றடியின் இறுதிச்சீர் ஏகார ஓசையுடனும் முடிந்துள்ளது. ஆற்றொழுக்குப் போல சீரான நடையைக் கொண்டு விளங்குகிறது இம்மாணவர் ஆற்றுப்படை.

  மாணவர் ஆற்றுப்படை என்னும் இந்நூல் சங்ககாலச் செய்யுள் நடையைப் பெற்று விளங்கினாலும் புதிய பொருளுடன் (கருத்துடன்) பாடப் பெற்றுள்ளது எனலாம். இந்நூலர் தோன்றிய காலத்தே இதனை அடியொற்றி வேறு சில ஆற்றுப்படை நூல்களும் தோன்றியுள்ளதாக மது.ச. விமலானந்தம் கூறுகிறார்.

  ஆசானாற்றுப்படையை கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளை அவர்களும், தேனாற்றுப்படையை முனைவர் அ. சிதம்பரநாதனார் அவர்களும், காதலி யாற்றுப்படையை முனைவர் கணபதிபிள்ளை அவர்களும் சொற்பொழிவாற்றுப் படையைப் பால்வண்ண முதலியார் அவர்களும் பாடியுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.30

மாணவர் ஆற்றுப்படையில் பொருள் நலம்

  பொருட் செல்வமின்றி கல்விச் செல்வம் பெறாது வாடும் சிறுவர் கூட்டம் இவ்வுலகில் மிகுதி. ஒருவர், தம் கல்விப் பசி தீர்ப்பார் இவ்வுலகில் யாரே உளர் என்று அலமந்து வாடி வருகிறார். ஒட்டிய வயிறும் குழிவிழுந்த கண்ணும் தளர்ந்த நடையுமாய் வருகிறார். இதனை,

‘           இளமையும் ஆர்வமும் ஏங்கிய உள்ளமும்

            தளர்ந்த நடையும் தனக்கே உரித்தாய்

            வேனிலில் அசைந்திடும் வெறும்கொம் போபோல்

            வந்திடும் சிறுவர்’ 31

என்று அவர்தம் வறுமையைக் கவிஞர் உருவகித்துக் கூறுகிறார். வாடிய உள்ளத்துடன் வரும் மாணவரை ஒருவர், ‘உன் துன்பம் யாது’ என வினவுகிறார். மாணவ இளைஞனும், ‘என் குறைதனைச் சொல்லக் கேண்மின்! ஐய! யான் பள்ளி இறுதிப் படிப்பினை முடித்துள்ளேன். முதல் வகுப்பில் தேர்வு பெற்றுள்ளேன். அதுவன்றி பள்ளியிலேயே முதன் மாணாக்கனாகவும் விளங்கியுள்ளேன். ஆயினும் என்ன செய்ய இயலும்? தந்தையை இழந்தவன் நான். உதவும் உற்றார் ஒருவரும் எனக்கு இல்லை. தரணியில் உயர் கல்வி கற்பதற்கு வழியில்லை. செல்வரிடம் சென்று கேட்டால் சினந்து துரத்துகிறார். பிறர்க்கென வாழ்வதாய் மேடையில் பேசிடும் மனிதர் தன்மை வேண்டின் மதிப்பதும் செய்திலர். கையை விரித்து மெய்ந் நடுக்குற்று வாய்கூசாமல் இல்லை என்பதோடு இழிப்புரை கூறி அனுப்புவர்.

இதனை ஆசிரியர்,

         ‘ மேடையில் அழகாய் விரிவுரை ஆற்றிடும்

            மாந்தரை வேண்டின் மதிப்பதும் செய்திலர்

            பிறர்க்கென வாழ்வதாய்ப் பேசிடும் அவர்கள்

            கையை விரித்து மெய்ந்நடுக் குற்று

            இல்லை என்றே ஏசிக் கடிந்தனர்’ 32

பிச்சை எடுக்க எவரிடமேனும் சென்றாலும் நகைப்பும், எள்ளலும், இரக்கவுரையும் செய்தனரே அன்றி ஒருவரும் பொருள் வழங்க முன்வரவில்லை.

  அரசினர் உதவித் தொகை பெற நான் தகுதியுடையவனாயினும் ஒரு கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்து சில திங்கள் கழிந்த பின்னரே அவ்வுதவித் தொகை எனக்குக் கிடைக்கும். இந்நிலையில் காசும் அற்ற நான் என்ன செய்ய முடியும்? எங்குப் பார்த்தாலும் சாதியும் மதமும் வளர்ப்பதற்கென்றே தோன்றிய கல்லூரிகள். பொருள் வசதி படைத்தவர் மட்டுமே சேரத் தகுந்த கல்லூரிகள், கற்கும் திறனும் ஆர்வமும் இருந்தும் கல்லூரிகளில் எனக்கு இடமில்லை. என் துன்பம் களைபவரை இவ்வுலகில் எங்கும் நான் காணவில்லை’ என்று மாணவன் கூறுகிறான்.

  உடனே பெரியவர் இளைஞனை நோக்கி, “அயர்ச்சி அடையாதே. உன் வாட்டம் போக்கும் வழிகள் சொல்வேன். தமிழ்நாட்டில் உள்ள செல்வர்களின் இயல்பினை யான் அறிவேன். நல்லறங்கள் பல செய்ய மாட்டார்கள். சான்றோரை அவர்தம் நிலையறிந்து போற்றமாட்டார்கள். தமிழ்மொழியைக் கற்க மாட்டார்கள். அறியாமை இருளை அகற்றும் கல்விக்கூடம் அமைக்க விழையார். தமிழ்ப்பணி புரிய விழையார். நாடு நலம் பெற உழைக்க எண்ணார். நல்லன செய்ய நினையார்.”33

  “மன்பதையில் அழியும் பொருள் செல்வத்தை ஆக்குவராரேயன்றி அழியாப் புகழை அடைய விரும்பார். பிறரால் சொல்லப்படும் புகழ்ச் சொல்லுக்கும் புலவரால் பாடப்படும் சிறப்பிற்கும் உரியவராய் இல்லாமல் மறைஇலை போல் மாய்ந்து விடுவார் பலர். அறுவகைச் சுவையுடைய உணவுப் பொருள்களை அளவில்லாமல் உண்டு. அது காரணமாகத்தான் உடலில் நோயைக் தோற்றுவிப்பர். உண்ணவும் உறங்கவும் உரைக்கவும் அன்றி வேறொன்றும் செய்யார். மருந்து என்று புலம்புவது எழுந்து செல்வதும் உட்காருவதும் அன்றி வேறொன்றும் அறியார். தம்முடைய வருவாய் அனைத்தையும் மருந்துக்கே செலவு செய்வார். தமக்கும் மற்றவர்க்கும் எவ்விதப் பயனுமில்லாமல் தம் வாழ்நாளை வீணாகக் கழிப்பார். அறிவுக்குப் பொருந்தாத பண்டிகைகள் பல கொண்டாடுவர். கண்மூடித்தனமாக சடங்குகள் பல செய்வர். திருமணம் என்றால் செலவிடும் தொகைக்கோ அளவில்லை. ஊரில் நடைபெற்ற திருமணங்களல் சிறந்தது உம் வீட்டுத் திருமணம் என்று பிறர் பாராட்டும் பொருட்டுக் கடனை வாங்கிக்களிப்பர். தம் மக்களை சான்றோர் பாராட்டும் அவையில் முந்தியிருக்கச் செய்தார். பல்வகை அணிகலன் பகட்டாய் அணிவர். நிலத்திற்குப் பாரமாய்க் காட்சியளிப்பார்.”

குறிப்புகள்:

  1. சி. இலக்குவனார், சுப்பிரமணியனார் மணிமலர், வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1959, பக். 130-132.
  2. மது.ச. விமலானந்தம், தமிழ்ப்பொழில், தொகுதி. 34,35, கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடு, கரந்தை, செப்டம்பர் 1959. பக்.160.
  3. சி. இலக்குவனார், மாணவர் ஆற்றுப் படை,அ-ள் 1-4
  1. சி. இலக்குவனார், மாணவர் ஆற்றுப் படை,அ-ள் 14-18
  1. சி. இலக்குவனார், மாணவர் ஆற்றுப் படை,அ-ள் 35-39

(தொடரும்)

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18)