(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

16

மாணவர் ஆற்றுப்படையும் மற்றைய ஆற்றுப்படைகளும்

  பத்துப்பட்டுள் கூறப்பெற்ற ஆற்றுப்படை நூல்கள் ஐந்தனுள் திருமுருகாற்றுப்படை மட்டும் சிறிது வேறுபட்ட தன்மையுடையது எனலாம். இறையருள் பெற்ற புலவன் ஒருவன், இறையருள் பெறச் செல்லும் புலவன் ஒருவனுக்கு, இறைவன் உறையும் இடங்கள், இறைவனைக் காணச் செல்லும் வழிகள், அடியவனை நோக்கி இறைவனே நாடிவந்து, காட்சி தந்து இன்பம் நல்கி இன்னருள் வழங்குகின்ற செய்திகளைக் கூறும் ஒப்பற்ற நூலாகும். மாணவர் ஆற்றுப்படையோ, வறுமை காரணமாக இளமையிற் கல்விச் செல்வம் பெற வசதி இல்லாது வருந்தும் இளைஞர் ஒருவனுக்கு, அவன் கல்விச் செல்வம் பெறுவதற்கு உரிய இடம்(ஊர்), கல்வித் தொண்டு புரியும் தலைவனின் (இயல்பு)பண்பு, தலைவனை அடையும் வழிமுறைகள், அத்தலைவனை அடைவார் பெரும் சிறப்பு முதலியவற்றைக் கூறும் அருமையான கவிதை நூலாகும்.

மாணவர் ஆற்றுப்படை தோன்றிய சூழல்

  பள்ளி இறுதி வகுப்பு முடித்துவிட்டு மேற்கொண்டு படிப்பதற்கு வசதி இல்லாமல் வருந்தித் துன்புற்றார் இந்நூலாசிரியர் இலக்குவனார். காரணம் அவர் ஏழு வயதுச் சிறுவனாக இருந்தபோதே தன் ஆருயிர்த் தந்தையை இழந்து விட்டார். அதனால் இளமை காலத்திலேயே வறுமை அவரை ஆட்கொண்டு விட்டது. முன்னோர் (மூதாதையர்) விட்டுச் சென்ற நிலமெல்லாம் குடும்பச் செலவால் ஏற்பட்ட கடன்களுக்கே சரியாய்ப் போயிற்று. உணவுக்கு வழியறியாது திண்டாடும் ஒருவர் எங்ஙனம் கல்விச் செல்வத்தைப் பெற இயலும். ‘தந்தையோடு கல்வி போம்’ என்னும் பழமொழி இவர் வாழ்க்கையில் உண்மையாயிற்று. உற்றாரையும் உறவினரையும் செல்வர் பலரை நாடியும் உதவி கிட்டவில்லை.

  ‘காலையில் கல்விக் கூடம் செல்லும் நான், ஒன்றுமே உண்ணாமல் நீராகாரம் (சோற்றிலிருந்து வடிக்கப்பட்ட நீர்) மட்டும் உண்டு சென்றுள்ளேன். பிறகு நண்பகல் வந்து தான் உண்பேன்’25 என்கிறார்.

  இக்காலத்தில் பள்ளிக்கூடங்களில் செயல்படுத்துப்படும் சத்துணவுத் திட்டம் போல ஆசிரியரின் இளமைக்காலத்தில் இருந்திருந்தால் வறுமையில் வாட்டம் அடைந்திருக்க மாட்டார். ‘கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்ற ஒளவையார் மொழி முற்றிலும் உண்மையே. தலைவியைப் பிரிந்து தலைவன் செல்லும் பாலை நிலைத்தின் கொடுமையைக் கூற வந்த சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, ‘வறியவ னிளமைபோல் வாடிய சினையவாய்’26 என்று சினையின் வாட்டத்திற்கு இளமைக் காலத்தில் ஒருவன் அடைகின்ற வறுமைநிலையை ஒப்பிட்டுக் கூறியத எண்ணத்தக்கது.

  ஒருவர் எச்செல்வத்தையும் இழக்கலாம். ஆனால் கல்விச் செல்வத்தை மட்டும் இழக்கக்கூடாது என்பது இலக்குவனார் கருத்தாம்.

         ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

            பிச்சை புகினும் கற்கை நன்றே

என்று ஒளவையாரின் முதுமொழி பொன்னே போல போற்றத்தக்க சிறப்புடையதாகும்.

  கல்விச் செல்வம் பிற எல்லாச் செல்வங்களினும் மேம்பட்டது. கல்விச் செல்வம் அழியாத சிறப்புடையது. இதனைத் திருவள்ளுவர்.

         ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

            மாடல்ல மற்றை யவை’27

என்று கூறுகிறார்.

          ‘ வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

            கீழ்ப்பா லொருவன் கற்பின்

            மேற்பா லொருவனு மவன்கட் படுமே’ 28

என்று பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் கல்விச் செல்வத்தின் மேன்மை குறித்துப் பாடுவதை அறிந்து கொள்ளலாம்.

  வறுமை காரணமாக கல்விச் செல்வத்தைப் பெறாது வாழ்நாளை வீணாளாகக் கழிப்பார் பலர். அத்தகைய ஒருநிலை இனிமேலும் தமிhக இளைஞர்கட்கு ஏற்படக்கூடாது. தமிழகத்தில் செல்வ வளம் படைத்த வணிகர்கள், கல்வித் தொண்டை கவுளுக்குச் செய்யும் தொண்டாகக் கருத வேண்டும். ஏழை மாணவர்கள் செல்வர் (வள்ளல்) வாழும் இடம் அறிந்து சென்று கல்விப் பேறு பெறுதல் வேண்டும. தான் உற்ற துயர்போல மற்றவர்களும் துயர் அடையக் கூடாது என்று எண்ணியே இம்மாணவர் ஆற்றுப்படையைப் படைத்தளித்தார் என்று கூறலாம்.

குறிப்புகள்:

  1. சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர், இளமைப் பருவம் குறள் நெறி வெளியீடு, மதுரை 1971, ப-23.
  2. பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகை, பாலைக்கலி செய்யுள் எண்-10, அ-1.
  3. திருவள்ளுவர், திருக்குறள் ‘கல்வி’ எண்-400.
  4. பாண்டியன் ஆரியப் படைகடந்து நெடுஞ்செழியன், புறநானூறு, உ.வே.சா. பதிப்பு, சென்னை 1950, செய்யுள் எண்-183, அ-ள் 8-10.

(தொடரும்)

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17)