சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3

மாந்த இனத்தின் வாழ்வியல் கூறுகளில் வனவியல் எவ்வாறு ஒன்றியும் இணைந்தும் ஊடுருவியும் உள்ளது என்பதை சங்கத் தமிழ் இலக்கியம் எவ்வகையில் எடுத்துரைக்கின்றது என்பதை பேராழியின் துளி நீரைச் சுவைத்துப் பார்க்கும் நோக்கில் நவில்வதே இக்கட்டுரை.

மனித இனம் முதலில் தோன்றிய பகுதி கடல்கொண்ட தமிழகத்தின் தென்பகுதி என்றும் அதன் பெயர் ‘இலெமூரியா’ என்றும் அதன் வரலாற்றை நுணுகி ஆராய்ந்து வரையறுத்த வரலாற்று ஆய்வறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் லெமூரியா என்பது ‘இலெமூர்’ என்ற குரங்கின் பெயர்தான் என்பதை நோக்கும் போது பிற்காலத்தில் மனித இனத்தின் மூதாதையர் குரங்குதான் என்று  தார்வின் என்ற மேனாட்டு மாந்தவியல் அறிஞனின் கூற்று ஒத்துப் போவதை உணரலாம்.

 வனவியல் என்பது தாவரவியல், விலங்கியல், பறவையியல், பூச்சியியல், நுண்ணுயிரியல். இயற்கையின் சூழலியல் சுற்றுப்புறவியல் எனப் பல்கிபெருகிய அனைத்தையும் உள்ளடக்கிய ‘பேரியல்’ என்பதே! இதை மனத்தில் நிறுத்தினால் அதில் உள்ளடங்கிய தாவரவியலையும் விலங்கியலையும் பறவையியலையும் சேர்ந்த ஒரு சில செய்திகளைக்  கீழ்வருமாறு நுகரலாம்.

தலைவி உயிருக்கும் தலைவன் உயிருக்கும் கூற்றுவனாக ஒரு மதங்கொண்ட யானை வந்தது என்றும் அதிலிருந்து விடுபடமுடியாமல் தவித்த நிகழ்வைத் தோழி உரைப்பதாகவும் வரும் செய்தியில் உள்ளீடாக மேற்கண்ட இருவரின் நிலையும் என்னவாகுமோ என்ற அச்சநிலை உச்சம் பெறுகிறது. இதனை

‘‘காரிப் பெயல் உருமின் பிளிறி சீர்த்தக
இரும்பிணர் தடக்கை இருநிலம் சேர்த்தி
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம்கொப்பு
மையம் வேழம் மடங்களி;ன் எதிர்தர
உய்வுஇடம் அறியேம்ஆகி ஓய்வென
திருந்துகோர் எவ்வளை தெழிப்ப நாணுமறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவற்பொருந்தி
சூர்வறு மஞ்ஞையின் நடுங்க. . .

 

என்ற குறிஞ்சிப்பாட்டு உணர்த்தும் விதத்தில் மதம் கொண்ட வேழத்தின் பிளிறவையும் அது செய்யும் ஆர்ப்பாட்டமான செயல்களையும் ஓவியம் போல் காணலாம். யானையின் செயல்கள், அரிமாவின் பார்வை, மயிலின் சாயல் என்ற பன்முகத்தன்மையை தெள்ளிதின் உணரலாம். புனைவியல் காட்சி எனினும் நடப்பியல் நிகழ்வை நாம் அகப்பார்வையில் காணுமாறு வைத்துள்ளதை எண்ணி எண்ணி மகிழலாம்.

அதுபோலவே தலைவன் தலைவியைத் தேடிவரும் நிகழ்வில் எதிர்ப்படும் பகையின் வகைகளை கூறிடும்போது, இரவிலே தலைவன் வருகின்றான். நீர்நிலைகளில் நீந்திவரும் சூழலில் ஆங்கே முதலைகள் இருக்கின்றன. அதைத்தாண்டி வரும்போது விலங்குகளின் பகை என அடுத்தடுத்துப் பகைதனைச் சந்திக்கும் போது தலைவனுக்கு என்ன ஆகுமோ? ஏதேனும் உயிருக்கு இறுதி ஆகிடுமோ? என எண்ணித் தோழி உணர்த்தும் பாங்கு நமக்கு சேர்த்தே சொல்லியது போல உள்ளது. அதனை,

 

‘‘ . . . . . . கங்குல்
அளைசெரிப உழுவையும் ஆளியும் உளியமும்
புழற்கேட்டு ஆமான், புகல்வியும் களிறும்
வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து
உருமும் சூரும் இரைதேர் அரவமும்
ஒடுங்கு இரும் குட்டத்து அருஞ்சுழிவழங்கும்
கொடுந்தாள் முதலையும் இடங்களும் கராமும்
நூழிலும் இழுக்கும் ஊழ்அடி முட்டமும்
பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர்
குழுமலை விடரகம் உடைய. . . . “

 

என்று இயம்பிடும் போது நாமும் திகைக்கிறோம்.

உயிரினங்களில் சிற்றினமாக உள்ளவற்றின் பெருமையினைப் பேசவந்த புலவன் , ‘‘இடியோசை முரசு அதிர்வுடன் கேட்கிறது. யாழ் இசைக்கு வண்டின் ஓசை (ரீங்காரம்) உவமையாக கூறும் வழக்கம் எனினும் அழகுமிளிரும் வரிகளை யாழ்போல் ஆரவாரிக்கின்றது”  எனக் காட்சியாக்கியதையும் வண்டுகளில் ஆண் இனமும் பெண் இனமும் புணர்ச்சிவிரும்பி “இம்மென” இமிருவது போன்றதுதான் ‘யாழிசை’ என்னும் நுட்பத்தை நுணுக்கமாக கூறிடும் காட்சியையும்,

‘‘நைவளம் பழுநில பாலை வல்லோன்
கைகவர் நரம்பின் இம்மென இமிரும்
மாதர் வண்டொடு கரும்பு நயத்து இறுத்த

என்று கலித்தொகை இயம்புகிறது.

ஒரு மாலைப்பொழுது அந்தி மயங்கிய நேரம். அப்போது மான் கூட்டம் மரச்செறிவுப் பகுதியில் திரளப், பசுக்கூட்டம் பல்வகையில் திரள, அன்றில் பறவை தன் குரலில் கூவ, நாகப்பாம்பு தனது நாகமணியின் ஒளியை உமிழ, ஆம்பல்மலர் தனது அழகிய இதழ்களைக் கூம்பச்செய்திட, ஆம்பல் அம் தீம் குழல் மூலம் நல்லிசை மீட்ட, வனமனையில் உள்ள பெண்டிர்கள் விளக்கை ஏற்றிவைத்து ஒளிவெள்ளம் பாய்ச்சத், தீக்கடைக்கோல் கொண்டு தீ மூட்ட மேகங்கள் திரண்டு வந்து இடியென வல்லோசையுடன் கூடிய கானம்பாட, புள்ளினம் ஆர்ப்பரித்துக் குரலிசைக்க என்று மாலைக் காட்சியை ஒரு எழில்மிகு ஓவியம் போல் தீட்டியுள்ளது போல் விவரித்துள்ளதை,

‘‘மான் கணம் மரமுதல் தெவிட்ட ஆண்கணம்
கன்றுபயிர் குரலமன்று நிறை புகுதர
ஏங்குவயிர் இசைய கொடுவாய் அன்றில்
ஓங்கு இரும்பெண்ணை அகமடல் அகவ
பாம்புமணி உமிழ பல்வயின் கோவலர்
ஆம்பல்அம் தீம்குழல் தெளிவிளிபயிற்ற
ஆம்பல் ஆடப் இதழ் கூம்புவிட வளமனைப்
பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி
அந்தி அந்தணர் அயர கானவர்
விண்தோள் பணவைமிசை ஞெகிழி பொத்த
வானம் மாமலை வாய்சூழ்பு கறுப்ப, கானம்
கல்லென்று இரட்ட புள்ளினம் ஒலிப்ப

என்று கலித்தொகை கழறும் காட்சிப்படிமத்தில் நாம் சொக்கிப் போகிறோம். இதில் கூறப்பட்டுள்ள அனைத்து வரிகளிலும் இயற்கையின் சமன்பாடும் பேரழகம் தெள்ளிதின் ஒளிவிட்டாலும் ‘‘பாம்பு மணி உமிழ” எனும் வரியில் தற்கால அறிவியல் உண்மை அந்தகமாகி உள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாகப்பாம்பு மணியை உமிழாது என்பதே உண்மையானது.

 

கானகத்தின் பேரினமான யானைகள் உள்நுழையும் அளவுக்கு உள்ள பெரிய மலையைப் பகுத்தாற்போல அழகும் எழிலும் பொருந்திய நிலையுடன் கூடிய கதவுகளை உடைய மிகப்பெரிய அரண்மனையின் நுழைவு வாசல் வழியாக உள் நுழைந்தால் மிக அழகிய முன்றில் காணப்படுகின்றது.

அம்முற்றத்தில் மயிர் நீப்பின் வாழாக் கவரிமானும் நீரை விடுத்து பாலை மட்டும் உண்ணும் அன்னமும் துள்ளித் திரிகின்றன என்ற காட்சியைப்படம் பிடித்துக்காட்டும் பாடலை,

‘‘திருநிலை பெற்ற தீதுநீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து
நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை

என்ற நெடுநல்வாடை காட்டும். இதில் கூறப்பட்டுள்ள இரண்டு விதமான நிகழ்வுகளாக உள்ள, அஃதாவது கவரிமானும் அன்னமும் துள்ளிவிளையாடும் நிகழ்வில் அறிவியல் உண்மை ஏதும் இல்லை என்று இன்றைய அறிவியல் சொல்லும். இதில் சொல்லப்படும் விலங்கான ‘கவரிமான்’ என்ற விலங்கு இம்மண்ணில் இல்லை. ‘கவரிமா’ என்ற விலங்குமட்டும் உண்டு. கவரிமான் என்று எந்த வித மான் இனத்திலும் இல்லை என்பதே விலங்கியலாளர்கள் கூறும் ஆய்வுச்செய்தி. எல்லா உரையாசிரியர்களும் புனைவுடன் கூடிய செய்தியாகப் பதிவிட்டுள்ளதாக இலக்கிய உலகம்பற்றி அறிவியல் உலகம் சொல்கிறது. அதுபோலவே அன்னப்பறவையான தண்ணீரில் கலந்துள்ள பாலை பிரித்து உண்ணும் என்ற செய்தியிலும் அறிவியல் உண்மை இல்லை என்பதே பறவையியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவாகும். இருப்பினும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வில் வந்து போகும் அன்னத்தையும் கவரிமானையும் இலக்கியச் சுவை கருதி மனத்தில் இன்பமுடன் அசைபோடலாம்.

(தொடரும்)

. அரவரசன், வனச் சரக அலுவலர்(ப.நி.), தேவக்கோட்டை

– சிறகு, பிப்., 23.02.2019