இன்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளின் முன்னரே தமிழர் அழகிற் சிறந்த எழுநிலை மாடங்களும், உயர்ந்த கற்கோட்டைகளும் கட்டுவித்து வாழ்ந்தனராயின், அவ்வரிய பெரிய கட்டடங்கள் அமைப்பதற்கு இன்றியமையாப் பெருஞ்செல்வ வளமும், அவை தம்மைத் திருத்தமுறக் கட்டுவித்து முடிப்பதற்கு உரிய நூல் உணர்வும், அவற்றுள் நடத்தப்படும் பல திறப்பட்ட ‘இலௌகிக’ கருமங்களும் உடையராய் இருந்தாராதல் தெற்றனத் துணியப்படும். இத்துணைப் பெரிய நாகரிக வாழ்க்கை இனிது நடைபெறுவதற்கு இன்றியமையாது வேண்டப்படும் தமிழ் மொழியினை இலக்கண இலக்கிய அமைதியோடு முற்றக் கற்று வந்தார் என்பதூஉம், இதனால் நிலைநிறுத்தப்படும் முடிபொருளாம். ஆகவே, ஓரிடத்தில் நிலைபெறமாட்டாது திரிதரு வாழ்க்கையுடையராய் இந்தியாவினுள் புகுந்த ஆரியர் கங்கையாற்றுக் கரைப் பக்கங்களில் நிலைபெற்ற வாழ்க்கை நடத்திச் செங்கோல் ஓச்சிய தமிழ் மக்களால் நெறிப்படுத்தப்பட்ட இலக்கண முறை கண்டு தாமும் உயிர்மெய் எழுத்துக்களை முறைப்படுத்தினார் என்று துணிக.

– தமிழ்க் கடல் மறைமலையடிகள்

maraimalaiadikal01