(திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 இன் தொடர்ச்சி)

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4

–    9.0.0.தனிமனிதர் அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10

            தனிமனிதன், தன் அளவில் வறுமை ஒழிப்புக்கு எவற்றை, எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றித் திருவள்ளுவர் பதிவு செய்துள்ளவற்றை இங்குக் காணலாம்.

9.1.0.அக்குறள்கள்:

            92, 221, 222, 223, 225, 226, 227, 228, 230, 231

9.2.0.தனிமனிதர் அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — தொகுப்பு

1.மனமகிழ்ச்சியுடன் வறியவர்க்கு வழங்குதல்

2.ஏழைகளது வறுமை ஒழிக்கத் தேவையான ஒன்றைக் கொடுத்தல் 

3.மேல்உலகம் இல்லை எனச் சொன்னாலும் ஏழைகளுக்குக் கொடுத்தல்

4.”ஏதும் இல்லை” எனும் துன்பச் சொல் சொல்லாமல் கொடுத்தல்

5.வறுமை ஒழிப்பு முயற்சியில் ஒன்றாக ஏழைகளது பசியைத் தீர்க்கும் பேராற்றலைக் கொண்டு வாழ்தல்  

6.செல்வம் ஏழைகளின் பசி தீர்க்கவே என உணர்ந்து ஈதல்

7.ஏழைகளோடு உணவைப் பகிர்ந்து அளித்துத் தானும் உண்ணல் 

8.ஏழைகளின் வறுமை ஒழிப்புக்குப் பயன்படும் வகையில் தேவை யாவை கொடுத்து இன்புறுதல்

9.ஈயா நிலைத் துன்பம், சாவுத் துன்பத்தினும் கொடியது என உணர்ந்து இடைவிடாது ஈதல்  

10.புகழ் தரும்படி உண்மை சார்ந்து ஈதல்

10.0.0.குடும்ப அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10

            கொடுமை பல செய்யும் வறுமையின் வேரறுக்கக் குடும்பங் களின் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாதது. அந்த வகையில் வறுமை ஒழிப்பில் குடும்பங்கள் எவற்றைச் செய்ய வேண்டும் என்பதையும் பன்முக ஆய்வுத் திறனார் திருவள்ளுவர் வரை யறுத்துள்ளார். அவை கீழே அளிக்கப்பட்டுள்ளன.

10.1.0.அக்குறள்கள்:

             42, 43, 44, 81, 83, 84, 85, 86, 90, 1107

10.2.0.குடும்ப அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் – தொகுப்பு

 1.துறவர்கள், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோர்  வறுமையைப் ஒழித்தல் 

2.தென்புல அகதிகள், விருந்தினர்கள், உறவர்கள் ஆகியோரை    வறுமையிலிருந்து காத்தல்

3.ஏழை, எளியோருடன் உணவைப் பகிர்ந்து அளித்து உண்ணல்  .

4.விருந்தினர்கட்கு விருந்து அளித்தல், வேண்டிய உதவிகளைச் செய்தல்

5.விருந்தினர்களுக்கு நாள்தோறும் விருந்து அளித்துக் காத்தல் 

6.முகமலர விருந்தினர்கள் விரும்பும் நல்ல விருந்து அளித்தல் 

7.விருந்து அளித்தபின் மீதி உணவை உண்ணும் விருந்து ஓம்பல்

8.வந்த விருந்தினர்க்கு விருந்து அளித்துவிட்டு, இனி வரும் விருந்தினர்களை எதிர்பார்த்துக் காத்திருத்தல்

9.வருத்தும் பசியால் வாடி வரும் விருந்தினர் முகம் கோணாமல் விருந்து அளித்துக் காத்தல்

10.தம் உழைப்பால் கட்டிய வீட்டில் வாழ்க்கைத் துணையுடன் ஏழை களோடு பகிர்ந்து அளித்து உண்டு இன்புறுதல்

11.0.0.சமுதாய அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10

            சமுதாயத்தார்கள் தங்களது வறுமையின் வேரினை அறுத்து வீழ்த்த வேண்டும்; மற்றவர்களது வறுமையின் வேர்களையும் அறுத்து வீழ்த்த வேண்டும்.

அவற்றிற்கு என்ன என்ன செயற்பாடுகளைச் செய்தல் வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்தித்து, அழகாகத் திருக்குறளில் பதிவு செய்துள்ளார். அவற்றை  இங்கு அறியலாம்.

11.1.0.அக்குறள்கள்:

            212, 216, 217, 218, 322, 480, 1005, 1054, 1057, 1067

11.2.0.சமுதாய அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — தொகுப்பு

1.முயன்று சேர்த்த எல்லாப் பொருள்களையும் தகுதியான வறிய வர்களுக்குக் கொடுத்தல்

2.பொதுக்கொடை விருப்பத்தோடு செல்வத்தை உலகத்தார் பசி தீர்க்கப் பயன்படக் கொடுத்தல்

3.பெரும்தன்மையர் செல்வம் உலகத்தார் நோய் தீர்க்கப் பயன்படக் கொடுத்தல்

4.கொடைக்கு வழிஇல்லாக் காலத்தும் பொதுக்கொடை செய்தல் 

5.உணவைப் பல உயிர்களோடும் பகிர்ந்து உண்ணல்

6.செல்வம் நிலையற்றது; அது பெற்றால், வறுமை ஒழியும்படி நிலையான அறச் செயல்களைச் செய்தல்

7.சம வாய்ப்பு வாய்க்கும்படி பொதுக்கொடை செய்தல்

8.தேடிய கோடிப் பொருள்கள் எல்லாம் கொடுப்பதற்கும் தாம் துய்ப்பதற்கும் என உணர்தல்

9.வறியர்களது வறுமையை ஒழிக்கப் பொருள் கேட்டுப் பெறுதல் கொடுத்தலுக்குச் சமம். ஆதலால், அத்தகு அறத்தைச் செய்தல்

10.வறியவர்களைக் கண்டு எள்ளி நகையாடாது, முகமலர்ந்து பொதுக்கொடை செய்தல்

12.0.0.நாட்டு அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10

ஒரு நாட்டு ஆட்சியர் தமது நாட்டு மக்களைத் துன்புறுத்தும்   கொடிய வறுமையிலிருந்து காக்க வேண்டும். செல்வ வளத்தைப் பெருக்க வேண்டும். பிற நாடுகளில் நிலவும்  வாட்டும் வறுமை யையும் ஓட்ட வேண்டும்.

இவற்றை எல்லாம் நுட்பமாக — திட்பமாகச் சிந்தித்துப் பார்த் திருக்கின்றார் நுண்ணறிவர் முப்பாலார். அச்சிந்தனைகளை உலகம் முழுவதற்கும் பொருந்தும் வகையில் முப்பாலில் பதிவுகளாகத் தந்துள்ளார்.

அச்சிந்தனைகளை உலக நாடுகள்  அனைத்தும் தலைமேற் கொண்டு கடைப்பிடியாகக் கொண்டால் எங்கும் எப்போதும் வறுமை என்னும் வருத்தும் பெருங்கொடுமையின் வேர் அறுபடும்;  வறுமை, வறுமையுற்று வீழும். வளமை வாழும். அத்திருவள்ளு வப் பதிவுகளை இனி இங்குக் காண்போம். 

12.1.0.அக்குறள்கள்

            381, 385, 390, 554, 555, 558, 582, 731, 732, 733

பேராசிரியர் வெ.அரங்கராசன்

 முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்

 கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி

          கோவிற்பட்டி — 628 502